தலவரலாறு : மலேசியாவின் இப்போஹ் பகுதியில் அமைந்துள்ள அற்புத ஆலயம், அருள்மிகு கருமாரியம்மன்-முனீஸ்வரர் திருக்கோயிலாகும். நூற்றாண்டுகளைக் கடந்து ஜொலிக்கும் இக்கோயில், ஆதியில் வனப் பகுதியின் நடுவே அமைந்திருந்தது. அச்சமயத்தில் ஒரு பெரிய மரத்தின் அடியில் சூலம் ஒன்று நிறுவப்பட்டு, வழிபாடு நடத்தப்பட்டு வந்தது. ரயில்வே துறை ஊழியர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர்களால் இக்கோயிலில் விளக்கேற்றி, முனீஸ்வரருக்கு தினசரி பூஜைகள் நடத்தப்பட்டு வந்தது. 1944-ம் ஆண்டு இந்த மரத்தின் அடியில் சிறிய கொட்டகை ஒன்று அமைக்கப்பட்டு சூல வழிபாடு தொடர்ந்து நடத்தப்பட்டு வந்தது. 1950-ம் ஆண்டு இப்பகுதியில் வாழ்ந்த குழந்தை அற்ற தம்பதியினர் முனீஸ்வரனிடம், தங்களின் குழந்தை பேற்றுக்காக வேண்டிக் கொண்டனர். தங்களின் வேண்டுதல் நிறைவேறினால் கோயிலுக்கு நிலையானதொரு கட்டிடம் அமைத்துத் தருவதாக அவர்கள் வேண்டிக் கொண்டனர். அவர்கள் வேண்டிக் கொண்ட அதே ஆண்டு அத்தம்பதியினருக்கு அழகிய பெண் குழந்தை ஒன்று பிறந்தது. அவர்கள் வேண்டிக் கொண்டதன் படி அவ்விடத்தில் முனீஸ்வரருக்கென்று சிறிய கோயில் ஒன்றும் கட்டப்பட்டது. அச்சமயம் இக்கோயிலுக்கென்று தனியான அர்ச்சகர்கள் யாரும் இல்லாததால், தினசரி பூஜைகள் மற்றும் விழாக்கால பூஜைகள் யாவும் இக்கோயிலுக்கு வரும் பக்தர்களாலேயே நடத்தப்பட்டு வந்தது. அவ்வேளையில் ரயில்வே குடியிருப்பிற்கு அருகில் முகந்த் சிங் என்பவரது குடும்பம் வசித்து வந்தது. முகந்த் சிங்கின் மறைவிற்கு பிறகு அவரது ஆறாவது மகன் ஹர்சரண், பிறப்பால் பஞ்சாபியாக இருந்தாலும் தினசரி இக்கோயிலுக்கு வந்து, சுத்தம் செய்து, விளக்கேற்றுவதை வாடிக்கையாக கொண்டிருந்தான். 10 வயதே நிரம்பிய இச்சிறுவனின் நேர்மை மற்றும் பக்தியின் காரணமாக அனைவராலும் காகா என்று அன்பாக அழைக்கப்பட்டான். ஒரு சமயம், வழக்கப்படி தனது மாமாவின் வீட்டின் பின்புறம் மாடுகளுக்கு தண்ணீர் வைத்துக் கொண்டிருந்தான், காகா. அப்பொழுது ஒரு அழகியப் பெண் காலில் கொழுசு அணிந்து கொண்டு, கோயிலை நோக்கி செல்வதைக் கண்டான். தினசரி இச்சம்பவத்தை கண்டு வந்த காகாவின் மனதில், அப்பெண் தொடர்ந்து எங்கே செல்கிறாள் என அறிந்து கொள்ள ஆவல் அதிகரித்தது. எனவே ஒருநாள் , வழக்கம் போல் கோயிலை நோக்கிச் சென்ற அப்பெண்ணை மேலும் பின் தொடர்ந்து சென்றான். நீண்ட கூந்தலுடன், மனதை மயக்கும் இனிய கொழுசொலியுடன் சென்ற அப்பெண், கோயில் அமைந்திருக்கும் மரத்தின் அருகே சென்றதும், நின்று அம்மரத்தை நிமிர்ந்து பார்த்தாள். பின்னர் தன் கையில் இருந்த பாத்திரத்தில் இருந்த தண்ணீரால் தனது கால்களை கழுவி கொண்டு, காகாவை கழுவ சொல்வதைப் போன்று அவனை நோக்கி கையை நீட்டினாள். அதிர்ச்சியுடனும் வியப்புடனும் அக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த காகாவை நோக்கிய திடீரென அப்பெண் திரும்பினாள். இதை சற்றும் எதிர்பாராத காகா,வேகமாக தனது வீட்டிற்கு ஓடி வந்தான். ஆனால், இச்சம்பவம் காகாவின் தினசரி கடமையான கோயிலை சுத்தம் செய்து விளக்கேற்றுவதை எவ்விதத்திலும் பாதிக்கவில்லை. அச்சம்பவத்திற்கு பிறகு, காகா சில பழங்கால காசுகள் மற்றும் சூலத்தை அக்கோயிலுக்கு அருகில் யதார்த்தமாக கண்டெடுத்தான். இது காகா அக்கோயிலின் மேல் வைத்திருந்த அக்கறை மற்றும் பக்தியை அதிகப்படுத்தியது. தமது பெற்றோருக்கு தெரியாமல் அதிகமான ஈடுபாட்டுடன் பல்வேறு சேவைகளையும் இக்கோயிலுக்காக செய்து வந்தான். ஏராளமான பிரச்சனைகள், தடைகள் மற்றும் துன்பத்தில் தவித்துக் கொண்டிருந்த பக்தை ஒருவருக்கு கோயில் கட்டும் பணிகளில் காகா உதவினார். அவர்கள் டிரோநோஹ் பகுதியில் இருந்து முனீஸ்வரர் சிலையை வாங்கினர். பின்னர் மிக விரைவிலேயே அம்மன் சிலையும் நிறுவப்பட்டது. சில காலத்திற்கு பின்னர் காகாவிற்கு உதவியாக இருந்து கோயில் பணியில் ஈடுபட விரும்பாத காசிமாஹ், அவரை விட்டு சென்று விட்டார். அதன்பின்னர், காகாவே கோயிலை நிர்வகித்து பாதுகாக்கும் முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டார். முடிவாக அவரே இக்கோயிலின் அர்ச்சகராகவும் மாறினர். நாட்கள் செல்ல செல்ல காகாவின் அன்பு மற்றும் அம்மனின் மீது அவர் கொண்டுள்ள பக்தி ஆகியவற்றை கண்டு, இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் அவரை அம்பாள் அளித்த பரிசாகவும், அவருடன் அம்மன் நேரடியாக தொடர்பு கொண்டு பேசுவதாகவும் போற்றினார்கள். அம்மன் அருளால் இக்கோயிலுக்கு வரும் பக்தர்களின் குறைகள், நோய்கள் ஆகியவற்றை இவர் குணப்படுத்தி வருகிறார். அம்மனுக்கு சேவை செய்வதையே தனது கடமையாக கொண்டிருந்த காகாவின் மனதில், அம்மனின் உண்மையான வடிவத்தையும்,தோற்றத்தையும் அறிய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. இந்த எண்ணத்தை பிரார்த்தித்துக் கொண்டிருந்த அவர் முன் ஓர் அற்புத காட்சி நடந்தேறியது. கற்பூர நாயகியே கனகவல்லி, காளி மகமாயி கருமாரியம்மா எனப் பாடிக் கொண்டிருந்த இசைத் தட்டு தானாக நின்றது. அப்பொழுது எங்கிருந்தோ பறந்து வந்த புறா ஒன்று அதன் மீது உட்கார்ந்ததும், கருமாரியம்மா என்ற பெயர் ஒலித்து பின் மீண்டும் இசைக்க துவங்கியது. அதே சமயம், கோயிலின் அருகில் மேய்ந்து கொண்டிருந்த மாடு ஒன்று இன்னொரு துரத்திக் கொண்டு கோயிலுக்குள் ஓடி வந்த மாடு ஒன்று அங்கிருந்த பூஜை சாமான்களை தட்டி விட்டது. அம்மன் முன் சிதறிய அவற்றிலிருந்து ஒரு மலர்மாலை மட்டும் அம்மனின் கழுத்தில் சென்று விழுந்தது. மலர்களும் அம்மனின் மீது தூவின, இந்த அற்புத அழகிய காட்சியைக் காண்பதற்கு கண்கள் இரண்டும் போதாது என்பதைப் போல் தோன்றியது. மிக விரைவிலேயே காகா முனீஸ்வரருக்கான முதல் பூஜையை நடத்தினார். அதன் பின்னர் இக்கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாள் அதிகரித்தது. கோமளம் என்பவரின் நில உதவியால் இக்கோயில் மிகப் பிரம்மாண்டமாக நிறுவப்பட்டது. கோயிலின் தலைவராகவும் பொறுப்பு வகித்த கோமளத்தின் உதவியால் இக்கோயில் நாளுக்கு நாள் வளர்ச்சி கண்டது. இக்கோயிலின் நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் பக்தர்களின் பேராதரவினால் 2005-ம் ஆண்டு ஏப்ரல் 22-ம் தேதி ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் இக்கோயிலின் மகாகும்பாபிஷேகம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. தற்போது இக்கோயிலுக்கு மலேசியா முழுவதிலும் மட்டுமல்லாது பிற பகுதிகளிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை புரிகின்றனர்.
முக்கிய விழாக்கள் : வருடாந்திர திருவிழா, நவராத்திரி, தைப்பொங்கல், புத்தாண்டு, ஆடிப் பெருக்கு,சிவராத்திரி, கிருஷ்ண ஜெயந்தி மற்றும் மாதாந்திர விஷேச நாட்களான மகாலட்சுமி விரதம், பௌர்ணமி மற்றும் பிரதோஷம் போன்ற விழாக்களும் இக்கோயிலில் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.
கோயிலின் அமைப்பு: ஆதியில் காகா பாதுகாத்த அம்மன் சிலையும் இங்கு பாதுகாக்கப்படுகிறது. இக்கோயில் வெள்ளை மற்றும் தங்க நிறத்தால் முலாம் பூசப்பட்டுள்ளது. இக்கோயிலில் நிறுவப்பட்டுள்ள தெய்வங்களின் சிலைகள் அனைத்தும் காகாவின் மூலம் அம்மனிடம் உத்தரவு பெற்ற அம்மன் குறிப்பிட்ட இடத்திலேயே அமைக்கப்பட்டுள்ளது. இது இக்கோயிலின் தனிச்சிறப்பாகும்.
கோயில் முகவரி: Sri Karumariamman-Muneswarar Alayam, IPOH,Malaysia
இணையதள முகவரி : www.srikarumariamman-ipoh.org.
மேலும் செய்திகள் உங்களுக்காக ...
துபாய் ஈமான் அமைப்பின் நிர்வாகிகளுக்குப் பாராட்டு...
தற்போதைய செய்தி
மும்பை: 1993-ம் ஆண்டு நடந்த மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில், சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி கூடுதல் அவகாசம் பெற்றிருந்த முக்கிய குற்றவாளி ஜைபுனிசா காஸி, இன்று தடா ...
மே 20,2013 IST