ஜூலை 11,2009 IST
இறைவர் திருப்பெயர் : திருக்கோணேஸ்வரர்
இறைவியார் திருப்பெயர் : மாதுமையாள்
தல விருட்சம் : கல்லால மரம்
தேவாரப் பாடல்கள் : சம்பந்தர
தல வரலாறு : இக்கோயிலின் வரலாறு 3287 ஆண்டுப் பழமை வாய்ந்ததாகும். இதற்கு திரிகூடம் என்றும் பெயருண்டு. சுவாமிக்கு விளக்கேற்றுவதற்குப் போதிய அளவு நெய்யும் திரியும் கிடைப்பதற்கு வழிவகுத்தவர்கள், தாமரைத் தண்டின் நூலெடுத்து திரிசெய்தார்கள்; அந்த ஊர் இன்றும் 'திரிதாய்' என்று வழங்கப்படுகிறது.
போர்ச்சுகீசியர்கள் 1624 ம் ஆண்டில் இத்திருக்கோயிலை பாழ்செய்துள்ளனர். அன்று அருணகிரிநாதர் மனமுருகிக்கண்ட தலத்தாறு கோபுரத்தழகைப் பறங்கியர்களின் தளபதியும் பார்த்துருகியுள்ளான். அவன் தன் படையில் ஓவியம் வல்லுனரைக் கொண்டு அவற்றின் அழகை ஓரளவு வரைந்து எடுத்துக்கொண்ட பின்பே கோயிலைத் தரைமட்டமாக்க உத்தரவு பிறப்பித்தான். அந்தக் கோபுரத்தழகைக் காட்டும் சித்திரம் இன்றும் விஸ்பன் நகரில் உள்ளது என கூறப்படுகிறது. சுதந்திரம் பெற்றபின் 1950ம் ஆண்டில், கோயில் இருந்த நிலத்தில் ஆலயம் அமைக்க முற்பட்டுக் காசியிலிருந்து சிவலிங்கப்பெருமானை எழுந்தருளச் செய்தனர். அக்காலத்தில் நகரசபையார் கிணறு தோண்ட முயன்றபோது மூன்றடி தோண்டிய போது சிவனருளோ என்று கண்டவர்கள் அதிசயிக்கும் வண்ணம் மாதுமையாள் சமேத கோணேசுவரப் பெருமானோடு, சந்திரசேகரர், பார்வதியார், பிள்ளையார், அஸ்திரதேவர் முதலிய தெய்வத் திருவுருவங்கள் வெளிப்பட்டன. அவையாவும் அண்மைக் காலத்தில் அமைக்கப் பெற்ற திருக்கோயிலில் ஆங்காங்கே எழுந்தருளச் செய்யப்பெற்றுள்ளன.
முன்னொரு காலத்திலேயே மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் திருக்கோணமலையின் உச்சியிலும், இடையிலும், அடிவாரத்திலுமாக மூன்று பெருங்கோயில்கள் இருந்தன என கூறப்படுகிறது. கோயிலை பறங்கியர் பாழ்படுத்திய வேளையில் பக்தர்களாகிய பாசுபதவிரதிகளும் பணியாளரும் பதைத்துருகித் திருக்கோயிலில் இருந்த திருவுருவங்களை எடுத்துச் சென்று அருகிலல்உள்ள கிணறுகளிலும் குளங்களிலும் பாதுகாப்புக்காக வைத்துள்ளனர். அவர்கள் ஒரு திருவுருவத்தை மற்றொரு ஊரான தம்பலகாமம் என்னும் மருதவளம் நிறைந்த ஊரில் மறைத்து வைத்து மிகவும் ரகசியமாக வழிபாடு செய்து வந்துள்ளனர். அந்த இடத்தை ஆதிகோணநாயகர் கோயில் என வழங்கி வணங்கினர். அது ஆதி கோணநாயகர் ஆலயமாகவே பழைய கோணேசுவரர் ஆலயத்துக்குச் சொந்தமான இடங்களின் பெரும்பகுதி தம்பலகாமத்திற்கு சேர்ந்தன.
முதலாம் பராந்தக சோழனுக்கு அஞ்சிய பாண்டியன் இலங்கையில் பாதுகாப்புக்காக புகுந்திருந்த காலத்தில் தம்பலகாமத்தில் திருப்பணிகள் செய்ததாக வரலாறு கூறுகிறது.
ஆலய சிறப்புக்கள் : உலகப்புகழ் பெற்ற திருக்கோணமலை மாவட்டத்தில் அறுபதுக்கும் அதிகமான சைவக்கோயில்கள் உள்ளன. சைவம் கமழும் தமிழ்த் திருநாமங்கள் தாங்கிய பழைய ஊர்களில் செந்நெல்லும், கரும்பும், தென்னையும் செழித்து வளருகின்றன.
மிகப்பழைய காலத்து, இதிகாச நிகழ்ச்சிகள் இங்கே நடைபெற்றன என்பதற்கு நிறைய ஆதாரங்கள் இங்கே உள்ளன. குளக்கோட்டு மன்னன் செய்த தொண்டுகள் பலவற்றின் சுவடுகள் இன்றும் அறியக் கூடியனவாக உள்ளன. இங்கே எங்கு நோக்கினாலும் சைவத் தமிழ்ப் பெயர்களே கேட்கின்றன. 1200 ஆண்டுகளுக்கு முன்னரே திருக்கோணேஸ்வரம் தேவாரம் பெற்ற திருத்தலமாக ஒளிவீசியது. பாண்டியன் திருக்கோணமலையில் 'இணைக்கயல்' பொறித்துள்ளது வரலாற்றுப் பெருமையாகும். ஐம்பொன்னாலான அழகு மிக்க மூர்த்தங்கள் இருக்கும் மண்டபம் - தேவ மண்டபம், கண்கொள்ளாக்காட்சி தருவதாகும். பறங்கியருக்குப் பின் ஆங்கியேர் காலத்தில் கிடைத்த வழிபாட்டு அனுமதியின்போது நடைபெற்ற மலைபூசை ஆகாச வெளியில் இன்றும் நடைபெற்று வருகின்றது. நாள்தோறும் ஆறுகால பூஜை ஆகம விதிகளின்படி தவறாமல் நடைபெறுகின்றன.
முக்கிய விழாக்கள் : திருக்கோணேசப் பெருமானின் விழாக்களில் பிரபலமாக நடைபெறுவது ஆடி அமாவாசை விழாவாகும். கடலில் தீர்த்தமாடுவதற்கு பெருமான் எழுந்தருளும்போது, நகரிலுள்ள ஆலயங்களின் மூர்த்திகளும் தீர்த்தமாட அங்கே எழுந்தருளுவார்கள். ஆடி மாதம் போலவே, மகாமகத் தீர்த்த விழா, பங்குனி மாதத்தில் பூங்காவன மற்றும் தெப்பத் திருவிழா, மார்கழியில் திருவெம்பாவை விழா ஆகியன சிறப்பாக கொண்டாடப்படுகிறது. நவராத்தி நாட்களில் ஸ்ரீ சக்ரபூஜை வெகுசிறப்பாக நடைபெறுகிறது.
தலப்பெருமை : ஆதிகோண நாயகர் திருக்கோயில் கற்கோயிலாகும். திருக்கோணேஸ்வரத்தின் தொல்புகழ் பாடும் தேவாரம், திருப்புகழ் தவிர பல புராணங்களும், பிரபந்தங்களும், கல்வெட்டுச் செய்திகளும் உள்ளன.
அமைவிடம் : திருக்கோணேஸ்வரத்திற்கு ரயில் மூலம் கொழும்பிலிருந்தும், யாழ்ப்பாணத்திலிருந்தும் போகலாம். பேருந்து வசதிகளும் உள்ளது. திருக்கோணமலை இரயில் நிலையத்திலிருந்து கோயிலுக்கு நடந்து போகலாம்.
சென்னை : ராஜ்யசபா தேர்தலில் திமுக.,விற்கு ஆதரவு அளிப்பதாக புதிய தமிழகம் கட்சி அறிவித்துள்ளது. திமுக தலைவர் கருணாநிதியை இன்று சந்தித்து பேசிய புதிய தமிழக கட்சி தலைவர் ...
ஜூன் 20,2013 IST