அக்டோபர் 28,2010 IST
ஆலய அமைவிடம் : ஆலயம் அமைந்த இடம் அமைதியான சூழலில் ஆல்,அரசு, புன்னை,நாவல், கொக்கட்டி, குருந்தை, வில்வை உள்ளிட்ட மரங்கள் எங்கும் பரந்து நிழல் செய்யும் குளிர்ந்த நெய்தல் நிலப்பரப்பிலமைந்துள்ளது. தல விருட்சங்கள் போன்றும் பல குருந்தை மரங்கள் இருந்தன. தற்போது ஒரு குருந்தை மரம் மட்டும் பல்லாண்டுகளாகியும் கோயிலின் நேர்வாசலில் அருள் பரப்பி நிற்கின்றது. இது மாணிக்கவாசக சுவாமிகளுக்கு இறைவன் குருந்தை மர நிழலின் கீழிலிருந்து அருளுபதேசம் செய்த வரலாற்றினை நினைவூட்டுகின்றது.
ஆலய வரலாறு : சிவன் தந்த வலிமை பெரியதென்று ராவணன், சீதையை கவர்ந்து வந்து அசோக வனத்தில் சிறை வைத்திருந்த காலம், ராமபாணத்தினால் பட்டளிந்து ஒழிந்த சமயம் மனமது கலங்கித்துவண்டு நின்ற சீதையை சிறையிலிருந்து விடுத்து, உடன் அழைத்து செல்லும் வழியில் களைப்புற்ற ராமபிரான், இளைப்பாற எண்ணினார். கடலுடன் சார்ந்த தூய தனியிடமாக ஆல்,அரசு, திருவாத்தி, நெல்லி, நாவல், கொக்கட்டி உள்ளிட்ட மரங்கள் ஒரே இடத்தில் பஞ்சவடி போன்றமைந்து கண்களுக்கும் மனசுக்கும் இதமானதாகவும் காடுகள் நிறைந்திருந்ததுமான இப்பகுதியில் ஒருபோது தங்கி இளைப்பாறினார். அப்போது சிவபூஜை செய்ய விருப்பிய ராமபிரான், பூஜை செய்வதற்குரிய சிவலிங்கம் ஒன்றைக் கொண்டு வருமாறு உடன்வந்த அனுமனைப் பணித்தார். லிங்கம் தேடி விந்தியமலை சென்ற அனுமன் விரைந்து வருவானென்று எதிர்பார்த்திருந்தார், ராமர். ஆனால் அனுமன் வர தாமதமானது.
குறித்த காலத்தில் சிவபூஜையை நிறைவேற்ற எண்ணிய ஸ்ரீ ராமபிரான் மணலில் பிசைந்து லிங்கமொன்றை உருவாக்கினார். அதற்கு அபிஷேகம் செய்வதற்காகத் தனது கோதண்டத்தை நிலத்தில் ஊன்றி பதித்தார். அப்பள்ளத்திலிருந்து சுரந்து தோன்றிப்பாய்ந்த புனித நீரைப் பெற்று லிங்கத்திற்கு அபிஷேகம் செய்தார். மந்திர புஷ்பங்களால் அர்ச்சித்துப் பூஜை செய்துமுடித்தார். அந்த பள்ளம், நீர் சுரந்து நிரம்பிக் குளமாகியது. ஸ்ரீ ராமபிரானுடைய ஆணைப்படி விந்திய மலையிலிருந்து காலம் தாழ்த்தி அனுமனால் கொண்டுவரப்பட்ட லிங்கம் ராமபிரானால் ஆக்கபட்ட திருக்குளத்தின் நடுவில் புதைத்து விடப்பட்டது. அந்தப் புண்ணிய லிங்கத்தின் மகிமையினால் தன்னை வணங்குவோர் மீதுள்ள பாவங்கள் அனைத்தையும் போக்கவல்ல திருவருட் சக்தி இத்திருக்குளத்திற்கு நிரந்தரமாகக் கிடைக்கலாயிற்று. காசியிலிருந்து அனுமனால் அவிமுத்தித் தீர்த்தமும் இக்குளத்தில் கலக்கப்பட்டது என்றும் ஒரு வரலாறு கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி காசியிலிருந்து வந்த முனிவர் ஒருவர் தம் கமண்டலத்தில் கொண்டுவந்த கங்கை, யமுனை, காவேரி, சரஸ்வதி, கோதாவரி, துங்கபத்திரை, பவானி, தாமிரபரணி, சேது முதலான ஒன்பது மங்கைப் பெண்களின் பெயரமைந்த தீரத்தங்களையும் இத்திருக்குளத்தில் கலந்து நீராடி ராமலிங்கத்தை வழிபட்டுப் பெரும் பயன்பெற்றார் என்றும், மங்கை நதிகளின் தீர்த்தங்கள் கலக்கப்பட்ட திருக்குளமானதால் மாமங்கைத் தீர்த்தமென்று பெயர் பெற்றது எனவும் சொல்லப்படுகிறது.
அவிமுத்தித் தீர்த்தம் என்பது வடமொழிச் சொல். தன்னக்குள் மூழ்கி எழுந்தவர்க்கு நற்பலன் அளித்தலில் மாறாக பெருஞ் சிறப்புடையது. தீவினை பயன்களை நீக்கும் ஆற்றல் பெற்றுள்ளது இத்திருக்குளம. அனுமனால் காலம் தாமதித்து கொண்டுவரப்பட்ட சிவலிங்கத்தை வைப்பதற்காக மண்ணினால் செய்துவைக்கப்பட்ட லிங்கத்தைப் பெயர்த்தெடுக்க அனுமன் முயன்றபோது அந்த லிங்கம் பெயர்க்கப்படாமல் இருந்ததாகவும், பின்பு ஏழுவிதமான நீர் நிலத்தில் தோண்டியெடுத்து அந்த லிங்கத்தைப் பூசித்து அயோத்தி சென்றதாகவும், அனுமனால் தோண்டபட்ட இடங்களே மாமாங்கக்குளத்தை அண்டியிருக்கும் சிறுசிறு குளங்கள் என்றும் ஒரு வரலாறு கூறுகின்றது. இவ்விடத்தில் விநாயகப் பெருமானுக்கென ஆலயம் அமைக்கப்பட்டு, பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது.
ஆலய முகவரி : ஸ்ரீ மாமாங்கப்பிள்ளையர் திருக்கோயில்,
மாமாமங்கம், அமிர்தகழி, மட்டக்களப்பு, இலங்கை.
தொலைபேசி : +94 065 2223575
மின்னஞ்சல் : info@mamangar.org
இணையதளம் : http://mamangar.org/index.html
பாட்னா: பீகார் மாநில சிறப்பு சட்டசபை கூட்டம் இன்று காலையில் கூடியது. பா.ஜ., உறவை முறித்து கொண்ட பின்னர் தங்களின் பலத்தை நிரூபிக்க கவர்னர் அனுமதியுடன் இந்த சிறப்பு ...
ஜூன் 19,2013 IST