செய்திகள் ஜனவரி 23,2013 IST
![]()
குர்கான்: தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள், குர்கான் வாழ் தமிழ் எழுத்தாளர் சாருஸ்ரீயின் “கங்கோத்ரி” என்ற நவீன சிறுகதைகளின் மொழி பெயர்ப்பு நூல் அறிமுக விழா மற்றும் குர்கான் தமிழ்ச் சங்க மூன்றாம் ஆண்டு விழா ஆகிய முப்பெரும் விழாக்கள் குர்கான் தமிழ்ச் சங்கத்தில் கொண்டாடப்பட்டது. விருதுநகரைச் சேர்ந்த காயத்ரி மற்றும் அகிலா குழுவினரின் சிறப்பு நாதஸ்வர இன்னிசையுடன் விழா துவங்கியது.
தொடர்ந்து “கங்கோத்ரி” நூல் அறிமுக விழா நடைபெற்றது. விழாவின் தலைமை விருந்தினராக, மத்திய மின் அமைப்புக்களின் நடுவர் மன்றத் தலைவர் நீதிபதி மு.கற்பக விநாயகம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். “கங்கோத்ரி” நூலின் நவீனச் சிறுகதைகளைப் பற்றிய தனது ஆய்வுரையில் – “அம்மா பசிக்குதே” என்ற சிறுகதை மிகவும் மனம் நெகிழ்வதாக கூறினார். நூல் ஆசிரியர் சாருஸ்ரீ ஏற்புரை வழங்கினார்.
உச்ச நீதி மன்ற வழக்கறிஞர் வி.வி.சுப்பிரமணியம், குர்கான் தமிழ்ச் சங்கத் தலைவர் சக்தி பெருமாள் கலந்து கொண்டனர். குர்கான் தமிழ்ச் சங்கச் செயலாளர் சொ.சுப்பிரமணியன் நன்றி கூறினார்.
விழாவின் சிறப்பம்சமாக குழந்தைகள் மற்றும் மகளிர் வழங்கிய கலை நிகழ்ச்சிகள் அமைந்திருந்தது. நமது நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொண்டாடப்படும் சங்கராந்தி மற்றும் பொங்கல் விழா எவ்வாறு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது என்பது பற்றிய குழந்தைகளின் சிறு உரையாடலைத் தொடர்ந்து, “செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே” என்ற பாடலுக்கு சிறுவர் சிறுமியர் நடனமாடியது அனைவரையும் கவர்ந்தது. அதனைத் தொடர்ந்து மகளிர் குழுவினர் வழங்கிய கும்மிப் பாட்டும் நடனமும் கிராமியக் கலைநயத்துடன் மிகச் சிறப்பாக அமைந்து எல்லோரின் உள்ளத்தையும் மகிழ்வித்தது.
கலை நிகழ்ச்சிகளை குர்கான் தமிழ் சங்கத் துணைத் தலைவர் லக்ஷ்மி ரகுபதி, துணைச் செயலாளர் ஆனந்தி கிரிதர் மற்றும் குர்கான் ஸ்ரீ சித்தி கணேஷா கலாச்சார சங்கப் பொதுச் செயலாளர் சுப்புலக்ஷ்மி கணேஷ் ஒருங்கிணைத்தனர். விழா நிகழ்ச்சிகளை செயற்குழு உறுப்பினர் தாரிணி தியாகராஜ் தொகுத்து வழங்கினார்.
- குர்கானிலிருந்து எஸ்.சுப்ரமணியம்
மேலும் செய்திகள் உங்களுக்காக ...
முன்னாள் குடியரசு தலைவர் கலாமுடன் குழந்தைகள் சந்திப்பு ...
தற்போதைய செய்தி