வீட்டு வாசலில் பொங்கலிட வசதியுள்ளவர்கள்
கீழ்க்கண்ட முறையில் பொங்கலிட வேண்டும். பொங்கல்
அடுப்பு கற்கள் மூன்றை வாங்கி, அவற்றில்
வெள்ளையடித்து அதன் மேல் காவி கோடுகள் வரைந்து
கொள்ள வேண்டும். பொங்கலன்று நல்ல நேரத்தில் பானையை
அதன்மீது வைக்க வேண்டும். மண்பானையில் சமைக்கத்
தெரிந்தவர்கள் மண்பானை வைக்கலாம். மற்றவர்கள்,
பித்தளை பானைகளைப் பயன்படுத்த வேண்டும். ஒரு
இலையில் காய்கறி, வாழைப் பழம், நாழி நிறைய நெல்,
சிறிய நாழியில் பச்சரிசி, கரும்பு, மஞ்சள் கிழங்கு,
பனங்கிழங்கு, ஊற வைத்த பச்சரிசி, வெல்லம், பழம்
கலந்த காதரிசி, வெற்றிலை, பாக்கு படைத்து,
திருவிளக்கு ஏற்ற வேண்டும். |
|
ஒரு தேங்காயை உடைத்து அதிலுள்ள நீரை பொங்கல்
பானையில் ஊற்ற வேண்டும். பிறகு பனையோலையில் அடுப்பு
பற்ற வைக்க வேண்டும். பச்சரிசியை களைந்து தயாராக
வைத்திருக்கும் பால் போன்ற நீரை பானையில் ஊற்ற
வேண்டும். தீயை அதிகப் படுத்தி அடுப்பில் உள்ள பாலை
பொங்கச் செய்ய வேண்டும். பால் பொங்கியதும்
குலவையிட்டு, அதில் களைந்து வைத்துள்ள பச்சரிசியை
போட வேண்டும். சாதம் வெந்ததும், இறக்கி விடலாம்.
இன்னொரு அடுப்பில், சர்க்கரைப்பொங்கலும் இதே
நேரத்துக்குள் தயார் செய்துவிட வேண்டும். இலை
முன்பு இரண்டு பானைகளையும் வைத்து, மீண்டும்
தேங்காய் உடைத்து, திருவிளக்கிற்கு கற்பூரம் காட்டி,
குல தெய்வத்தை மனதில் எண்ணி, சூரிய பகவானை வணங்க
வேண்டும். பின்னர் ஒரு இலையில், வெண்பொங்கல்,
சர்க்கரைப் பொங்கல், பழம், சிறு துண்டு தேங்காய்,
காதரிசி ஆகியவற்றை வைத்து காகத்திற்கு வைக்க
வேண்டும். அதன்பிறகு, வீட்டு வாசலில் உள்ள
இப்பொருட்களை பக்தியுடன் வீட்டிற்குள் எடுத்து
வந்து, பூஜையறை அல்லது திருவிளக்கு வைக்குமிடத்தில்
வைத்து விட வேண்டும். பின்பு, கறிவகைகள் தயார்
செய்ய வேண்டும். மதியம், திருவிளக்கு ஏற்றி, ஒரு
இலையில் பழம்,வெற்றிலை, பாக்கு வைத்து, சிறிதளவு
வெண்பொங்கல், கறி வகை, சர்க்கரை பொங்கல் படைத்து,
முன்னோரை மனதில் எண்ணி வணங்கி, அதன்பிறகே சாப்பிட
வேண்டும். மாலையிலும் முன்னோருக்கான பூஜை செய்ய
வேண்டும். விளக்கேற்றியதும், முன்னோர் படங்களை (இறந்த
தாய், தந்தை அல்லது நம் பிரியத்திற்குரியவர்களின்
படம்) வைத்து, அவற்றின் முன்னால் ஒரு இலையில்
இனிப்பு வகைகள், புத்தாடை, வெற்றிலை, பாக்கு,
பழத்தை படைத்து பூஜை செய்ய வேண்டும். புத்தாடை,
இனிப்பு வகைகளை ஏழை களுக்கு தானமாகக் கொடுக்க
வேண்டும். இதுவே முறையான "பொங்கல் பூஜை' ஆகும்.
|