Home இதை எனது முதல் பக்கமாக்கு | வணக்கம்...வணக்கம்... யூ.எஸ்.ஏ தினமலர் வாசகரே ..! Get FontSite Map |

தினமலர்

கட்டுரை

 

01. வா! வா! தமிழ் புத்தாண்டே வா!
ஏப்ரல் - 14 தமிழர்களுக்கு மாபெரும் நாள்; அற்புத திருநாள். சர்வதாரி வருடம் பிறக்கிறது. அதிகாலையில் எழுந்து நீராடி, தூய ஆடைகளை அணிய வேண்டும்.
அரசு தை மாதத்தை தமிழ் வருடப் பிறப்பு மாதமாய் அறிவித்துள்ளது. இரண்டு முறை நம் அற்புத தமிழ் அன்னைக்கு பிறந்த நாள் கொண்டாடுவோம். என்ன தப்பு! வருடம் முழுவதும் கொண்டாடினாலும் தகும்.

 

தமிழ் - நமது அன்னை மொழி.
தமிழ் - நமது வாழ்வு, உயிர்மூச்சு. மற்ற மொழிகளை வெறுத்தல், தவிர்த்தல் அல்ல - தாய் மொழிப்பற்று.
உலகிலுள்ள மொழிகளை எல்லாம் கற்று அதன் சிறப்புகளை நம் தாய் மொழியில் கொண்டு வர வேண்டும். உலகிலுள்ள மொழிக்காரர்கள் நம் உயர்வினை கண்டு தமிழினை போற்ற வேண்டும். உலக மக்கள் அனைவரும், ஒவ்வொரு பிரிவினரும் அவரவர் வருடத்தின் முதல் நாளை, புத்தாண்டு தினமாக கொண்டாடுகின்றனர்.


தமிழ்நாட்டில் தமிழ் ஆண்டின் முதல் நாளை புத்தாண்டு தினமாகக் கொண்டாடுகின்றனர். கேரள மக்கள் அந்நாளை "விஷு' என்றும் கொண்டாடுகின்றனர். வட மாநிலத்தினர் புத்தாண்டு தினத்தை "பைசாகி' ஆக கொண்டாடுகின்றனர்.

 

சித்திரை மாதத்தில் மா, பலா, வாழை மரங்களின் காய்கனிகள் செழித்துப் பெருகியிருக்கும். அத்தோடு வேப்ப மரங்களிலும் பூக்கள் பூத்துக் குலுங்கியிருக்கும். சிறப்புப் பெற்ற மாதத்தின் முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறுசுவை உணவுகளையும் சமைத்து உண்டு மகிழ்வர்.

அந்த உணவில் வேப்பம்பூ பச்சடியும், மாங்காய் பச்சடியும் முக்கியம் சேர்ந்திருக்கும். தமிழ் புத்தாண்டு அன்று வாயிற்படிகளுக்கு மஞ்சள் குங்குமமிட்டு, மாவிலைத் தோரணங்கள் கட்டி அலங்கரிப்பர்.
பின்பு பூஜை அறையில் வாழை இலையில், சமைத்த உணவை வைத்து தத்தமது இஷ்ட தேவதைகளுக்கும் கடவுளுக்கும் நிவேதனம் செய்து, கற்பூர தீபாராதனையை காட்டி தேங்காய் உடைத்து வழிபாடு செய்வர். பிறகு உண்டு மகிழ்வர்.


அன்று பானகம், நீர், மோர் இவற்றை இறைவனுக்கு நைவேத்ய பொருளாக வைப்பர். தமிழ் புத்தாண்டு மிக சந்தோஷமான நாள். அன்று புது பஞ்சாங்கம் வாங்கி அதை பக்தியுடன் பூஜித்து, பின் அதில் கூறப்பட்டுள்ள பலன்களைப் படித்து அறிவர்.


கணக்காளர் பிறந்தார்!


சித்திரை மாதம், சித்திரை நாளில் சித்திர புத்திரனார் தோன்றினார். எனவே, அன்று கொண்டாடப் பெறும் விரதம் சித்திர குப்த விரதம் என்பவர். அவரவர்களின் பாவ புண்ணியங்களைக் கணக்கெடுத்து கொடுக்கும் பணி சித்திர குப்தரின் பணி என்று இந்துமத சாஸ்திரங்கள் கூறுகின்றன.


குறளில் தமிழ்!


தமிழின் பெருமைகளில் மிக முக்கியமானது நமது திருக்குறள். உலகத்தின் அனைத்து விஷயங்களும் அதில் அடக்கம். இரு வரிகளில் கட்டிப் போடும் அறிவு சுரங்கள். "திருக்குறள்' என்ற பெயரில்தான் இது முதன் முதலில் அச்சிடப்பட்டது. திருக்குறளில் எந்த இடத்திலும் "தமிழ்' என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை.

 

எப்படி கொண்டாட வேண்டும்!


சித்திரை திருநாளைக் கொண்டாடுவதற்கென சில விதிமுறைகள் உள்ளன. சித்திரை முதல் நாளில் வீட்டிலுள்ள பெண்கள், சிறுமிகள், தங்கள் வீட்டுப் பின் கதவைத் திறந்து வைக்க வேண்டும். பின்னர் முன் பக்கம் வந்து, மூன்று கையளவு தண்ணீரை முற்றத்தில் தெளிக்க வேண்டும்.
சூரிய பகவானிடம், "சூரிய பகவானே! உங்கள் உக்கிரத்தை இம்மாதத்தில் அதிகமாகக் காட்டாதீர்கள்! உங்கள் தீவிரத்தைக் குறைத்து எங்களைக் காப்பாற்றி, மழை பெய்யவும் அருள்புரிய வேண்டும்' எனக் கூறி வணங்க வேண்டும். இதனால் வெப்பம் குறையும் என்பது நம்பிக்கை. சித்திரைக்கு முதல் நாள் மாலையில், பழ வகைகள் மற்றும் மஞ்சள் நிறப் பூக்களை ஒரு மேஜையில் வைத்து விட வேண்டும்.
மறுநாள் காலையில் எழுந்ததும் கண்ணாடியைப் பார்க்க வேண்டும். பழங்கள், பூக்கள் கண்ணில் படுவதன் மூலம் ஆண்டு முழுவதும் இனிமையாக இருக்கும்.


பெண்மைப் போற்றுவோம்!


மாதங்களில் இரண்டை மட்டும் பெண்ணுக்கு ஒப்பிடுவர். "சித்திரையை "சித்திரைப் பெண்' என்றும், தையை "தை மகள்' என்றும் சொல்வர். பூமி முதல் நதி, நாடு என்று எல்லா உயர்ந்ததும் பெண் என்றே கருதப்படுகிறது. காரணம், ஆணைவிட பெண் உயர்ந்தவள். ஒரு அம்மாவிற்கு இவ்வுலக ஆண்கள் அனைவரும் கூட ஈடாக முடியுமா?
பெண் - அது ஒரு சிறுமி முதல் பாட்டி வரை கணக்கு. அதனால் பெண்மையை போற்றுங்கள்; மதியுங்கள். இயற்கையை கூட அன்னை என்றுதானே அழைக்கிறோம்.
அதனால், இயற்கையை போற்றுவதும், காப்பாற்றுவதும் கூட நம் கடமையாகும். நம் குடும்பப் பெண்களின் கருத்துகளுக்கு தகுந்த மரியாதை கொடுக்க, சித்திரையில் ஒவ்வொரு ஆண் மகனும் உறுதி எடுக்க வேண்டும். வீட்டு பெண்கள் மகிழ்வாய் இருந்தால் தான் வீடு விளங்கும். ஒவ்வொரு வீடும் விளங்கினால் நாடும் விளங்கும்.


தாய் மொழி கல்வி!

 

தாய் (தமிழ்) மொழிக் கல்வி மிகவும் அவசியமான ஒன்று. விஞ்ஞானத்தில் சிறந்து விளங்கும் ஜப்பான் நாட்டில் அனைத்துக் கல்விகளும், தொழில்நுட்பம், மருத்துவம் உட்பட அனைத்தும் தாய் மொழியிலேயே பயிற்றுவிப்பதால் அந்த நாடும், நாட்டு மக்களும் சிறந்து விளங்குகின்றனர்.
ஏனெனில், இளம் குழந்தைகளுக்கு தாய் மொழிதான் பசுமரத்து ஆணியாக பதியும். நமது குழந்தைகள் நமது பண்பாடு மற்றும் உலக பொதுமறை நூலான திருக்குறள் மற்றும் தமிழ் இலக்கியம் போன்றவைகளை உணர்வதற்கு தாய் மொழி கல்விதான் நல்ல வாய்ப்பாக அமையும்.
பலர் அ, ஆ... கூட தெரியாமல் ஆங்கிலத்திலேயே படித்து பட்டப்படிப்பு வரை சென்று விடுகின்றனர். இந்த அவல நிலை தமிழ் நாட்டை தவிர வேறு எந்த மாநிலத்திலும் இல்லை.


எந்த மொழியில் படித்தாலும் தவறில்லை. தாய் மொழியே தெரியாமல் மற்ற மொழி மட்டுமே படிப்பதுதான் தவறு. தாய்ப்பால் எவ்வளவு சிறந்ததோ அதைப் போன்று சிறந்ததுதான் தாய் மொழிக் கல்வி.
தாய்ப்பாலை புறந்தள்ளிவிட்டு புட்டிப்பால் மட்டுமே குழந்தைக்கு கொடுப்பது குழந்தையின் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கக் கூடியதாகும்.
தாய், தாய்மொழி, தாய் நாடு, தாய் வழி உறவுகள், பண்பாடு இவற்றை நாம் என்றுமே போற்ற வேண்டும்!

 

* * *

 

 

BACK NEXT

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font        |   மின்னஞ்சல்   |  | 

முதல் பக்கம்
வாசகர் கடிதம் International Edition Font Help ? Advertisment Tariff

Dinamalar Publications
Copyright 2008 www.dinamalar.com. All rights reserved. Designed and Hosted by Web Division,Dinamalar  
coordinator@dinamalar.in and webmaster@dinamalar.in