"கறுப்பு அக்கா... சிவப்பு தங்கச்சி...!'
உணவுத்துறை அமைச்சர் வேலு, சேலம் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளை, சமீபத்தில் ஆய்வு செய்தார். சாத்தப்பாடி என்ற பகுதியில் மக்களைச் சந்தித்த அவர், "ரேஷன் கடைகளில் அரிசி, கெரசின் கிடைக்கிறதா, சரியான எடையில் கொடுக்கின்றனரா' என விசாரித்தார்."அரிசி முழுவதும் மண்ணும், குப்பையுமாக கிடக்கிறது. நிறம் மாறி இருக்கிறது' என வெளிப்படையாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.இதை எதிர்பார்க்காத அமைச்சர், "இந்த அக்கா கருப்பா இருக்காங்க... அந்த தங்கச்சி சிவப்பா இருக்காங்க... திருவண்ணாமலையில் நெல் விளைச்சலை பார்க்க முடியாது... இங்கு பச்சைப் பசேல்னு இருக்கு... நம்ம ஊர் அரிசி சற்று நிறம் கம்மியா இருக்கும்... ஆந்திரா அரிசி சிவப்பா இருக்கும்...' என சம்பந்தமில்லாமல் பேசி அவர்களை சமாளிக்க முயற்சித்தார்."ஏற்கனவே ஒருமுறை பெண் அதிகாரியைப் பார்த்து இப்படி உதாரணம் சொல்லித் தான் வில்லங்கத்துல சிக்கினார்... அதை மறந்துட்டு மீண்டும் அதே உதாரணத்தை சொல்றாரே...' என, அங்கிருந்த பார்வையாளர் ஒருவர், "கமென்ட்' அடித்தார்.
நேரத்திற்கு வந்த நேரு
சென்னையில், தமிழ்நாடு ஆட்டோ மற்றும் வாடகை கார் டிரைவர் நலவாரிய கூட்டம், சமீபத்தில் நடந்தது. காலை 11 மணிக்கு துவங்க வேண்டிய கூட்டத்திற்கு, அமைச்சர் நேரு ஐந்து நிமிடம் முன்கூட்டியே வந்து விட்டார்.அமைச்சர் வந்த போது, நலவாரிய உறுப்பினர்களோ, அரசு அதிகாரிகளோ இல்லை. "என்னய்யா... தலைமை ஏற்க வேண்டிய நான் வந்துட்டேன். மத்தவங்களைக் காணோமே' என, சிரித்துக் கொண்டே கூறிவிட்டு, அவர்கள் வருகைக்காக காத்திருந்தார்.காலை 11 மணிக்கு மேல், ஒவ்வொருவராக கூட்டம் நடந்த அரங்கில் நுழைந்தனர். அவர்களிடம் அமைச்சர் நேரு பேசும்போது, "ஒரு விழாவிற்கு முதல்வர் வர்றாருன்னா, 15 நிமிடத்திற்கு முன் நான் அங்க போயிடுவேன். நீங்க என்னன்னா, அமைச்சர் வந்தப்பறம், ஆடி அசைஞ்சு வர்றீங்க... நீங்க எல்லாம் எப்படிய்யா மக்களுக்கு நல்லது செய்யப் போறீங்க' என, வெளிப்படையாக கேட்டு விட்டார்.அமைச்சரின் அதிரடிக்கு பதில் சொல்ல முடியாத அதிகாரிகள் தலைகவிழ்ந்தனர்.
| வாசகர் கருத்து |