தமிழக அரசுக்கு நெருக்கடி; அ.தி.மு.க., புது திட்டம்! ""அதிகாரிகள் ஆதரவு இருக்கறதால, ஆக்கிரமிப்பாளர்கள் துணிச்சலா இருக்காங்க பா...!'' என விவாதத்தை ஆரம்பித்தார் அன்வர்பாய்.
""அவங்க ஆசி இருந்தா போதுமே... என்ன வேணும்னாலும் செய்யலாமேங்க...'' என்றார் அந்தோணிசாமி.
""சென்னை வடபழனி மார்க்கெட் பகுதியில, காலியா உள்ள இடத்தைச் சுற்றி காம்பவுண்ட் சுவர் கட்டி, ஆக்கிரமிக்க முயற்சி பண்றாங்கன்னு பேசினோமே பா... இந்த விஷயம் தெரிஞ்சதும், அந்த இடத்தை மீட்க மாநகராட்சி அதிகாரிகள் முயற்சி எடுத்தாங்க... உடனே, ஆக்கிரமிப்பாளர்கள், ஆளும் கட்சியினர், உயர் அதிகாரிகளுடன் பேசிருக்காங்க...'' என்றார் அன்வர்பாய்.
""அப்பறம்...'' என்றார் அந்தோணிசாமி.
""அப்பறம் என்ன... "இந்த விவகாரத்துல இப்ப தலையிட வேண்டாம்... அப்படி தலையிட்டா சட்டம் - ஒழுங்கு பிரச்னை வர வாய்ப்பிருக்கு... அதனால, இப்பிரச்னையை இப்படியே விட்டுடுங்க'ன்னு உத்தரவு வந்திருக்கு பா...'' என்றார் அன்வர்பாய்.
""அமைதியா ஆயிட்டாங்க வே...'' என அடுத்த மேட்டருக்கு தாவினார் பெரியசாமி அண்ணாச்சி.
""யாரைச் சொல்றீர் ஓய்...'' எனக் கேட்டார் குப்பண்ணா.
""பா.ம.க.,வைச் சொல்றேன்... அ.தி.மு.க., அணியில இருந்து பிரிஞ்சு, தி.மு.க., அணியை எதிர்பார்த்து காத்திருக்கறதால, ஆளுங்கட்சியை முன்னே மாதிரி கடுமையா விமர்சிக்க முடியலை வே... அதனால, பா.ம.க., நிறுவனர், வெறும் கல்யாணம், காது குத்து நிகழ்ச்சிகளுக்கு போய் வாழ்த்தறதுடன், தன் அரசியல் பணியை முடிச்சுக்கிறார்...'' என்றார் அண்ணாச்சி.
""தி.மு.க., கூட்டணியில் இணையும் முயற்சி எந்த அளவுல இருக்கு ஓய்...'' என்றார் குப்பண்ணா.
""அந்த முயற்சி ஒருபக்கம் நடந்துக்கிட்டு தான் இருக்கு... பா.ம..க.,வை கூட்டணியில சேர்க்கறதுல முதல்வருக்கு விருப்பம் தான்னு சொல்லுதாங்க... ஆனா, சில மூத்த மந்திரிகள், "பா.ம.க.,வை கூட்டணியில சேர்க்கவே கூடாது'ன்னு துணை முதல்வர்கிட்ட நெருக்கடி கொடுத்துட்டிருக்கறதா சொல்லுதாங்க...'' என்றார் அண்ணாச்சி.
""தமிழக அரசுக்கு நெருக்கடி கொடுக்க, புது திட்டம் வகுத்திருக்காங்க...'' என பேச்சை மாற்றினார் அந்தோணிசாமி.
""விளக்கமா சொல்லு பா...'' என்றார் அன்வர்பாய்.
""பார்லிமென்டில், அ.தி.மு.க., எம்.பி.,க்கள் எந்த விவகாரங்களைப் பத்தி பேசணும்னு விளக்கறதுக்காக, சமீபத்தில் எம்.பி.,க்கள் கூட்டத்தை ஜெ., நடத்தினாங்க... அப்ப, "முல்லைப் பெரியாறு, இலங்கை பிரச்னை, கரும்பு விலை உள்ளிட்ட பிரச்னைகளை எம்.பி.,க்கள் எழுப்பணும்'னு, அறிவுரை வழங்கிருக்காங்க...""தமிழக அரசின் தோல்வியை வெளிப்படுத்தற மாதிரி, உங்க விவாதம் இருக்கணும்... மத்திய அரசை தேவையில்லாமல் எதிர்க்க வேணாம்'னு சொல்லிருக்காங்க... அ.தி.மு.க., எம்.பி.,க்கள் மத்தியில் இன்னொரு தகவலும் உலவுது...'' என்றார் அந்தோணிசாமி.
"அது என்ன தகவல்...'' எனக் கேட்டார் அன்வர்பாய்.
""மத்திய அரசு இப்ப, "ஸ்ட்ராங்கா' இருக்கு... அதனால, இலங்கை, முல்லைப் பெரியாறு விவகாரங்களை முன்னிறுத்தி, எம்.பி.,க்கள் அனைவரையும் திடீர் ராஜினாமா செய்ய வைச்சு, தமிழக அரசுக்கு நெருக்கடி கொடுக்கவும் திட்டம் இருக்காம்...'' என அந்தோணி சாமி முடித்தார்; பெஞ்சு கலைந்தது.
| வாசகர் கருத்து |