மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பேட்டி:
இந்தியாவில்
மட்டுமல்ல, ஒவ்வொரு நாட்டிலும், ஊழல் குற்றச்சாட்டுகள் சாதாரணமாகி விட்டன.
ஒரு அமைச்சர் பதவி விலகினார் என்றால், அதற்கு ஊழல் மட்டும் காரணம் அல்ல.
ஒரு அமைச்சர், விசாரணையில் தலையிட்டார் என்ற குற்றச்சாட்டால் விலகினார்.
மற்றொரு அமைச்சர், தார்மீக அடிப்படையில் ராஜினாமா செய்தார். அவருக்கு
எதிராக குற்றச்சாட்டு இல்லை; ஆதாரமும் இல்லை.
தி.மு.க., பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேச்சு:
ஆட்சியில்
இருந்தாலும், இல்லாவிட்டாலும், மக்கள் பிரச்னைகளுக்காக, கோரிக்கைகளுக்காக,
கட்சியினர் தொடர்ந்து போராட வேண்டும். நாம் ஒவ்வொருவரும், வீட்டிற்கு
விளக்காகவும், நாட்டுக்கு தொண்டனாகவும் வாழ வேண்டும்.
மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே பேச்சு:
சில
நாட்களுக்கு முன், ஊர்க் காவல் படையினருக்கு, நல்ல சீருடை வழங்க வேண்டும்
என, கூறியிருந்தேன். இதை, ஒரு தரப்பினர், வேறு மாதிரியாக புரிந்து கொண்டு,
ஒட்டு மொத்த துணை ராணுவப் படையினரின் சீருடையையும் மாற்றும்படி நான்
கூறியதாக, தவறாக சித்தரித்து விட்டனர். இது, எனக்கு மிகுந்த ஏமாற்றத்தை
அளிக்கிறது.
"ஜால்ரா கொட்டும் கோஷ்டியில் நீங்களுமா...' என கேட்க, ஆவல் ஏற்படுத்தும் வகையில், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அறிக்கை:
தமிழக
வரலாற்றில், இரண்டு ஆண்டுகளாக, 1 லட்சம் கோடி ரூபாயை தாண்டிய வரவு, செலவு
திட்டம், பாராட்டிற்கு உரியது. அரசு துறைகளுக்கான நிதி ஒதுக்கீடுகள்,
ஆண்டுதோறும் தொடர்ந்து உயர்ந்து வருவதை காணும்போது, தமிழகம் தொடர்ந்து
முன்னிலையில் இருக்க, தமிழக முதல்வர், மக்கள் நலனில் கொண்டுள்ள அக்கறையைப்
பிரதிபலிக்கிறது.
"என்னைப் பாருங்க... என்னமாய், புதுச்சேரிக்கும்,
சென்னைக்கும், டில்லிக்குமாய் பறக்கிறேன்... இந்தியாவிலேயே இருக்கறதால
தானே, எனக்கு இந்த வசதி' என்பதை, மறைமுகமாய், "பெருமை பொங்க' கூறுவது
போல், மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி பேச்சு :
மாணவர்களுக்கு,
வெளிநாட்டில் வேலை செய்ய வேண்டும் என்ற மோகம் உள்ளது. நம் நாட்டிலேயே,
எல்லா வேலைகளும் உள்ளன. ஆராய்ச்சியில் ஈடுபடும் மாணவர்களுக்கும், இங்கு
வசதி வாய்ப்பு உள்ளது. தற்போது, வெளிநாட்டில் இருந்து, அங்கு
பணியாற்றியவர்களை திருப்பி அனுப்பி கொண்டிருக்கின்றனர்.
"அவரா நீங்க...' என, கேட்கத் தோன்றும் வகையில், சென்னை மாநகராட்சியின் கணக்கு தணிக்கை நிலைக் குழு தலைவர் முனுசாமி பேச்சு:
தமிழகத்தில்
இருந்து, இதுவரை யாரும், பிரதமராகும் வாய்ப்பை பெறவில்லை. இந்தியாவை
சுற்றியுள்ள நாடுகளால், இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலுக்கு,
வலிமையான பிரதமர் இல்லாதது தான் காரணம். அக்குறையை தீர்த்து வைக்க, எட்டு
மொழிகளை பேசும், பன்முகத் திறமை கொண்ட முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் பதவி
பொறுப்பேற்ற அடுத்த ஆண்டே, இந்தியா வல்லரசாகும் என்பதில் சந்தேகமில்லை.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிக்கை:
விழுப்புரம்
மாவட்டத்தில் நுழைய, எனக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம், தலித்
மக்களையும், விடுதலைச் சிறுத்தைகளையும், பொதுமக்களிடையே வன்முறையாளர்களாகச்
சித்தரிக்கும் நிலையே உள்ளது. எனவே, தலித் மக்கள் மற்றும் விடுதலைச்
சிறுத்தைகளுக்கான ஜனநாயகத்தை நசுக்கும் போக்கை, அரசு கைவிட வேண்டும்.
"யாரையாவது
துணை முதல்வர் பதவியில் அமர்த்தி, அவர் நம்மை, "டம்மி' ஆக்கி விட்டால்
என்ன செய்வது' என்ற கணக்கில், கர்நாடக முதல்வர் சித்தராமையா பேட்டி:
கர்நாடகத்தில்,
துணை முதல்வர் பதவி உருவாக்கப்படுமா என, சிலர் என்னிடம் கேள்வி
எழுப்பினர். ஆனால், அப்படி ஒரு பதவி உருவாக்கப்பட மாட்டாது. மேலும், ஊழல்
புகாரில் சிக்கியவர்கள் யாருக்கும், அமைச்சரவையில் வாய்ப்பு
அளிக்கப்படவில்லை. இதில், கட்சி மேலிடம் உறுதியாக உள்ளது.
"ஆண்டாண்டு
காலமாய் சபைக்குச் சென்ற பெருமை உடையவர்; இத்தனை காலமாய் இல்லை என்றாலும்,
தன் வயதைக் கருதி, இனிமேலாவது, பெருந்தன்மையாய், அனைத்துக் கட்சியினரையும்
அனுசரித்துப் போக வேண்டியவர், இப்படி பேசுகிறாரே' என, கட்சியினரே
யோசிக்கும் வகையில், தி.மு.க., தலைவர் கருணாநிதி அறிக்கை:
தமிழக
சட்டசபையில், எந்த அமைச்சருக்கும், எந்த அதிகாரமும் இல்லை. கேவலம், 1 கோடி
ரூபாய் அறிவிப்புகளைக் கூட, முதல்வரே அறிவிக்கிறார். அதுவும், விவாதத்தின்
போது அல்ல; கேள்வி கேட்க யாரும் முன்வராத நிலையில், 110வது விதியின் கீழ்
அரசின் அறிவிப்புகள் வெளியாகின்றன. உடனே பாராட்டு, சொற்பொழிவுகள்; இது தான்
நடைபெறுகின்றன; காழ்ப்புணர்வுக்கோ, கேட்கவே தேவையில்லை.
தமிழக பா.ஜ., தலைவர்,பொன்.ராதாகிருஷ்ணன் அறிக்கை:
மலேசியாவில்
வாழும், இந்திய வம்சாவளித் தமிழர்கள், கடந்த மூன்று மாதங்களாக, எந்த
காரணங்களும் இன்றி, சுட்டுக் கொல்லப்பட்டு வருவதாக, அதிர்ச்சி தரும்
செய்திகள் வருகின்றன. இனியும் தாமதிக்காமல், மலேசிய அரசின், தமிழர்களுக்கு
எதிரான செயல்களைத் தடுத்து நிறுத்த வேண்டும். இந்த விஷயத்தை, மத்திய அரசின்
கவனத்திற்கு, முதல்வர் ஜெயலலிதா கொண்டு செல்ல வேண்டும்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.