விசித்திர அறிவிப்புக்கு இதுவா நேரம்?
சிவமைந்தன்,
சென்னையிலிருந்து எழுதுகிறார்: தமிழ்த்தாய் சிலை, 100 கோடி ரூபாய்
செலவில், அமைக்கப்படும் என்கிற முதல்வரின் அறிவிப்பு, "உண்மையான' தமிழ்
ஆர்வலர்கள் இடையில் கூட, அதிருப்தியைத் தான் ஏற்படுத்தி இருக்கும்.
கடுமையான மின்வெட்டு, விவசாயத்துக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு,
எதிர்பார்க்கப்படும் குடிநீர் தட்டுப்பாடு, தடுமாறும் சட்டம் - ஒழுங்கு,
பெருகி வரும் வன்முறை, அண்டை மாநிலங்கள் மற்றும் மத்திய அரசின்
காழ்ப்புணர்ச்சி போன்ற, பல பிரச்னைகள், பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில்,
சிரமங்களை ஏற்படுத்தி உள்ளன. இவற்றை நிவர்த்தி செய்து, மக்கள் நிம்மதியாக
வாழ, வழி செய்ய வேண்டியது அரசின் முதல் கடமை. தமிழை வளர்க்கும் எண்ணம்
இருந்தால், முதலில் பள்ளிகளில், கல்லூரிகளில் தமிழை சரியாக எழுதவும்,
படிக்கவும் சொல்லித் தரலாம். தமிழ் வளர்த்த சான்றோர் பற்றி அறிமுகம்
செய்யலாம். ஓலை சுவடிகளில் உள்ள அரிய பொக்கிஷங்களை, மைக்ரோ பிலிமில் பதிவு
செய்து பத்திரப்படுத்தலாம். அறிவியல், இயற்பியல் போன்ற பாடங்களுடன்,
தமிழ்ப் பாடத்தையும் சேர்த்து, கட்டாயப் பாடமாக்கி, மதிப்பெண்களில்
முக்கியத்துவம் தரலாம். முன்பெல்லாம், திருப்பாவை, திருவெம்பாவை,
திருக்குறள் ஓதுவதில் போட்டி வைப்பர். அது போல, பாரதியார் கவிதைகள், தமிழ்
இலக்கணம் போன்றவற்றில், மாநில அளவில் போட்டிகள் நடத்தி, பரிசுகள்
வழங்கலாம். அரசியல் போட்டிக்காக செய்யப்படும் விசித்திரமான
அறிவிப்புகளுக்கு, இது நேரமில்லை. தமிழை வைத்து பிழைப்பவர்கள் சிலர்,
ஆரவாரத்துடன் இதை பாராட்டலாம். செயற்கரிய செயல்கள் பல, மக்கள் உள்ளத்தில்
நிலைத்து நிற்கும். சத்துணவு திட்டம், புரட்சித் தலைவரின் புகழை,
உலகெங்கும் பரப்பியது. முதல்வரின் வீராணம் குடிநீர் திட்டம், சென்னை மக்களை
காப்பாற்றியது. நேரு உள் விளையாட்டரங்கம், உலகத் தரத்துக்கு
எடுத்துக்காட்டாக நிற்கிறது. "அம்மா உணவகம்' மக்கள் பசி தீர்க்கிறது.
மழைநீர் சேகரிப்பு திட்டம், பான் பராக், குட்கா தடை போன்றவை, முதல்வரின்
பெயர் சொல்லும்! தேர்தல் நெருக்கத்தில், அரசியல் செய்யலாம்; இப்போது,
அவசியத்தை மட்டுமே பார்க்க வேண்டும்!
ஆடையை உருவிய கதை!
க.சிவகாமிநாதன்,
சென்னையிலிருந்து எழுதுகிறார்: தரமற்ற குடிநீர் தயாரிப்பு நிலையங்களை
கண்டறிந்து, அவர்களுடைய தயாரிப்புக்கு தடை விதித்து, அவர்களுக்கான மின்
வினியோகத்தைத் துண்டித்து விட்டது, பாராட்டுக்குரிய செய்தி தான். ஆனால்,
இது கைவசம் மாற்று ஆடை இல்லாமல், உடம்பிலிருக்கும் ஆடையை உருவிவிட்ட கதை
ஆகிவிட்டது. சுத்திகரிக்கப்பட்ட குடிநீருக்கு, கடும் பற்றாக்குறை ஏற்பட்டதை
அறிவோம். சுத்திகரிக்கப்பட்ட சுகாதாரமான குடிநீர், மக்களின் இன்றியமையாத
தேவை. மக்களின் ஆரோக்கியத்திற்கு, முழு முக்கியத்துவம் கொடுத்தாக வேண்டும்.
இதில், அலட்சியம் செய்வது ஆபத்து. சட்ட திட்டங்களை போட்டு, தனியார்
நிறுவனங்களை கட்டுப்படுத்துவது என்பது, சாத்தியமற்ற சங்கதி. லாப நோக்கம்
ஒன்றே, குறிக்கோளுடன் செயல்படும் இவர்கள், லஞ்ச லாவண்யங்கள் மூலம், எந்த
கண்காணிப்பையும் அர்த்தமற்றதாக்கி விடுவர். அதைத் தடுக்க, நிரந்தர
நடைமுறைகள் தேவை. இது அவசியம் மட்டுமல்ல; அவசரமும் கூட!
நல்ல அறிவிப்பு தான் இது!
எஸ்.பீ.அசோகன்,
சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர், சென்னையிலிருந்து எழுதுகிறார்:
சரித்திரம் பல்லாண்டு பேசும் சாதனைகளை, ஈராண்டுக்குள் சாதித்ததாக, தமிழக
அரசு விளம்பரம் கூறுகிறது. ஆனால், அந்த சாதனைகளில் இடம் பெறாத, "அரசு
பள்ளிகளில், ஆங்கிலம் பயிற்று மொழியாக இருக்கும்' என்ற, வரலாற்று
சிறப்புமிக்க அறிவிப்பே, காலம் காலமாக நிலைத்து நின்று, முதல்வர்
ஜெயலலிதாவின் புகழை பறைசாற்றப் போகிறது.முந்தைய, தி.மு.க., அரசு, சமச்சீர்
கல்வி திட்டம் கொண்டு வந்து, "சமச்சீர் கல்வி முறையிலும், அரசுப்
பள்ளிகளில் பயிற்று மொழியாக தமிழ் என்றும், தனியார் பள்ளிகளில் ஆங்கிலம்
பயிற்று மொழி என்றும் அமைந்தால், அக்கல்வி மீண்டும், சமுதாய சதி கல்வியாகவே
தொடரும் என்பதில் ஐயமில்லை' என்று, நான் எழுதியிருந்தேன். ஆனால், மக்கள்
நலனில் அக்கறை இல்லாத, தி.மு.க., அரசு அதை கண்டு கொள்ளவில்லை. தற்போது,
அ.தி.மு.க., அரசின், இந்த அறிவிப்பை கருணாநிதி எதிர்ப்பது, அவரது இரட்டை
வேடத்தை, மேலும் வெட்ட வெளிச்சமாக்கிஉள்ளது. தன் மகள் கனிமொழியும், பேரக்
குழந்தைகளும் மட்டுமே, ஆங்கிலம் படித்து, வாழ்வில் முன்னேற வேண்டும்; ஏழை
மக்களின் குழந்தைகள் என்றென்றும், வறுமையில் வாடி, அரசு வழங்கும் உதவித்
தொகையை நம்பியே வாழ வேண்டும் என்பது தான், அவரது நோக்கமா?
எல்லாமே தேர்தல் ஆதாயம்!
ஆர்.சம்பத்குமார்,
சென்னையிலிருந்து எழுதுகிறார்: அண்மையில், பாகிஸ்தான் சிறையில்
தாக்கப்பட்டு, மரணமடைந்த சரப்ஜித் சிங் குடும்பத்துக்கு, மத்திய அரசும்,
பஞ்சாப் அரசும் வக்காலத்து வாங்குகின்றன. யார் இந்த சரப்ஜித் சிங்? நம்
நாட்டில், "ரா' அமைப்பின் உளவாளி என்றும், பதினான்கு பேர் பலியான ஒரு
பயங்கரவாத சம்பவத்தை நிகழ்த்தியவர் என்றும், முறையான நீதிமன்ற
விசாரணைக்குப் பின், தண்டனை வழங்கப்பட்டது என்றும் பாகிஸ்தான் கூறுகிறது.
இல்லை, கபடிப் பந்தயத்தில் வென்றதைக் கொண்டாடிய குடிபோதையில் பாதை தவறி,
பாக்., எல்லையை தாண்டிச் சென்று விட்ட ஒரு அப்பாவி. மஞ்ஜித் சிங்
என்பவருக்கு பதிலாக, சரப்ஜித்தை பாக்., அரசு ஆள்மாறாட்டம் செய்து விட்டது
என்று, சரப்ஜித்தின் குடும்பம் கூறுகிறது. 22 ஆண்டுகளாக சரப்ஜித் சிறையில்
இருந்தும், இந்தப் பிரச்னை தீர்க்கப்படவில்லை. இவையனைத்தும் ஒரு
புறமிருக்க, 1971ம் ஆண்டு அதாவது, 42 ஆண்டுகளுக்கு முன், நடந்த போரில்
பாகிஸ்தானால் சிறை பிடிக்கப்பட்ட நம், 52 வீரர்களை பற்றி, இதுவரை எந்த
தகவலும் இல்லை. அவர்களில் எத்தனை பேர் உயிருடன் உள்ளனர் என்பது தெரியாது.
அவர்களை மீட்க, 42 ஆண்டுகளாக ஆட்சி செய்த கட்சிகளும், கூட்டாளிகளும் என்ன
செய்தன என்பதும் தெரியாது. ஆனால், சரப்ஜித் சிங் பற்றி மட்டும், ஏன் இத்தனை
அமர்க்களம், ஆரவாரம்? ஏனெனில், இன்னும் ஓராண்டில், லோக்சபா தேர்தல் வர
உள்ளது. சரப்ஜித் சிங், பஞ்சாபில் மிக கணிசமான எண்ணிக்கையில் உள்ள
தாழ்த்தப்பட்ட வகுப்பினரில் ஒருவர். மேலும், விளக்கம் தேவையா?
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.