Advertisement
தினமலர் முதல் பக்கம் » சிறப்பு பகுதிகள் செய்தி »இது உங்கள் இடம்
இது உங்கள் இடம்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
பதிவு செய்த நாள் : மே 24,2013,00:00 IST

நானும் கெட்டேன்; நீயும் கெட்டாய்!

வீ.சுந்தரமகாலிங்கம், சாந்திகிரி, திருவனந்தபுரத்திலிருந்து எழுதுகிறார்: "கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதற்கு காரணம், ராகுலின் கடுமையான உழைப்பு தான்' என்று, அங்கே தேர்தல் பிரசாரம் செய்த, பிரதமர் மன்மோகன் சிங் புகழாரம் சூட்டியுள்ளார். அப்படியானால், பிரதமரின் பிரசாரம் அங்கே எடுபடவில்லையா? சோனியாவுக்கு, "ஐஸ்' வைப்பதற்காகத் தான் இவ்வாறு கூறியிருக்கிறார். சென்ற ஆண்டு வட மாநிலங்களில், அதுவும் தன் சொந்த மாநிலமான உ.பி., உட்பட பல மாநிலங்களில், ராகுல் சூறாவளி சுற்றுப்பயணம் செய்தும் தோற்றது ஏன்? பா.ஜ., தன் உள்கட்சி உள்குத்தால், ஆட்சியை கவனிக்கத் தவறியது. இதனால், எந்த முன்னேற்றமும், நன்மையும் ஏற்படாமல் ஏமாந்திருந்த மக்கள், இந்தத் தேர்தலில் வேறு வழியின்றி காங்கிரசுக்கு ஓட்டளித்தனர். படுதோல்வி அடைந்த பா.ஜ., தலைவர்கள் இப்போது தான் உணர்ந்து, தாங்கள் செய்த தவறுகளை, மீண்டும் செய்யப் போவதில்லை என்று கருத்து தெரிவித்துள்ளனர். இனிமேலாவது திருந்தினால் நல்லது தான். தென் மாநிலங்களில், காங்கிரசின், "கை' ஓங்கியிருந்ததை முதன் முதலில் மடக்கி, கர்நாடகாவில், 2008ல் பா.ஜ.,வின் முதல் ஆட்சியைத் தொடங்கிய பின், அதைத் தக்க வைத்துக் கொள்ளத் தவறி, தலை, கால் புரியாமல் ஆட்சி புரிந்ததால், இப்போது கோட்டை விட்டது. தன் ஆதரவாளர்கள், 100 பேருக்கு மேல் தனி விமானத்தில் ஏற்றி, டில்லியில் ஜனாதிபதி மாளிகை முன் நிறுத்தி, மெஜாரிட்டியை நிரூபிக்க, பல முறை படையெடுத்து எடியூரப்பா எடுத்த எடுபிடி வேலைகளால், அவருக்கும் நல்லது நடக்கவில்லை, பா.ஜ.,வுக்கும் அதல பாதாளத்தை காட்டிவிட்டார். இதே தோல்வி, வரும் லோக்சபா தேர்தலில் பிரதிபலிக்காமல் இருக்க, பிரதமர் பதவிக்கு முன்னிலைப் படுத்துபவரை, முழு மனதுடன் ஒற்றுமையுடன் தேர்வு செய்து, மற்ற மாநிலங்களில் பொதுமக்களிடையே நிலவும், காங்கிரஸ் எதிர்ப்பைப் பயன்படுத்தி பிரசாரம் செய்து உழைத்தால், பெரும் வெற்றி பெறலாம். அத்துடன், மற்ற எதிர்க்கட்சிகளையும் கூட்டணி சேர்த்தால், தனி மெஜாரிட்டி பெற வாய்ப்பு இருக்கிறது. இதை மக்களும் வரவேற்பர். இல்லையானால், மக்கள் வேறு வழியின்றி, காங்கிரஸ் கட்சிக்கே மறுபடியும் ஓட்டளித்து பெற்றி பெறச் செய்யலாம். எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கர்நாடகாவில், கனிம சுரங்க உரிமையாளர்களான, ரெட்டி சகோதரர்கள் இருவருக்கு அமைச்சர் பதவி அளித்து, அதன் மூலம் பணத்தைக் கோடி கோடியாகச் சேர்த்து, எடியூரப்பாவும், அவரது குழுவினரும் பங்கு போட்டுக் கொண்டதால், அதன் சுவை அறிந்த பின், முதல்வர் பதவியிலிருந்து விலக்கப்பட்ட போதும், பால் சுவை கண்ட பூனை போல், மீண்டும் அப்பதவி அடைய பிரிந்து சென்றவர், இப்போது ஏமாந்து விட்டார். இனி, பதவி ஏற்கும் காங்கிரஸ் தலைவர்களுக்கு, இது ஒரு பாடமாக இருக்க வேண்டும். முதல்வர் பதவிக்கு முட்டி மோதிப் போட்டியிட்டால், குழுக்கள் ஏற்பட்டு பணம் தேடுவதிலேயே போட்டி ஏற்படலாம். பொதுமக்களுக்கு நன்மை செய்வதிலேயே கவனம் கொண்டு, காரியங்களை நிறைவேற்றினால், காங்கிரஸ் அங்கே பிழைக்கும்; ஆட்சியும் நிலைக்கும்!

நாளைய பிரதமர் யார்?

சு.பொன் இருளாண்டி, தேனியிலிருந்து எழுதுகி றார்: தமிழக முதல்வர், இந்தியாவின் பிரதமராக வர வேண்டும் என்று, சட்டசபையில் சரத்குமார் பேசுகிறார். இதே போல், அ.தி. மு.க.,வின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் அமைச்சர்களும், எம்.எல்.ஏ.,க்களும், ஜெயலலிதா பிரதமராக வர வேண்டும் என்று பேசுகின்றனர். தி.மு.க., தலைவர் கருணாநிதியோ, "சேலை கட்டிய தமிழன் பிரதமராவதை விட, வேஷ்டி கட்டிய தமிழன் பிரதமராக வரவேண்டும்' என்கிறார். ஆக, இந்தியாவின் தென் கோடி மாநிலமாம், தமிழகத்தை சேர்ந்த ஒரு தமிழனும், பிரதமராக வர முடியும் என்று, பேசும்படியான நிலை, தற்போது உள்ளது. உத்தர பிரதேச அகிலேஷ் யாதவும், இங்கு வந்திருந்த போது, முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து, "எங்கள் கட்சி அதிக சீட்கள் ஜெயித்தால், என் தந்தை பிரதமராவதற்கு, நீங்கள் ஆதரவு தர வேண்டும்' எனக் கூறிச் சென்றார். தற்போது, நிலவி வரும் மாறுபட்ட அரசியல் சூழ்நிலை, மாபெரும் ஊழல்களால், திறமையற்ற நிர்வாகத்தால், சீரிய தலைமையின்மையால், காங்கிரசுக்கு எதிரான மக்களின் மனப்போக்கு, தேசியக் கட்சிகள் பெரும்பான்மை பெற முடியாத நிலை போன்றவற்றால், தொங்கு பார்லிமென்ட் அமையும் வாய்ப்பு, கூடுதலாக தோன்றுகிறது. தமிழகத்தில், அ.தி.மு.க., 30 இடங்களுக்கு மேல் ஜெயித்து, தேசியக் கட்சிகள் எதற்கும் பெரும்பான்மை இல்லை என்னும் நிலை வரும் போது, பிரதமரோ அல்லது துணைப் பிரதமர் பதவியோ, ஜெயலலிதாவிற்கு கிடைக்க வாய்ப்புண்டு. அதற்கான தகுதிகள் அவருக்கு உண்டா என்றால், உண்டு என்றே சொல்லலாம். தற்போது, அனைத்து விமர்சகர்களும், நரேந்திர மோடி பிரதமராக வந்தால், நன்றாக இருக்கும் என்றே கூறுகின்றனர். அவருடன் ஒப்பிடுவோமேயானால், ஜெயலலிதாவும் மூன்று முறை தமிழகத்தின் முதல்வராக இருந்திருக்கிறார். ஏழு மொழிகள் பேசத் தெரியும்; நான்கு மொழிகள் எழுத, படிக்கத் தெரியும். மிகப் பரந்த தொலை நோக்கு பார்வை உடையவர். அவரும், உலகறிந்த ஒரு பிரபலமான அரசியல் தலைவரும் கூட. எந்த ஒரு விஷயத்திலும், துணிச்சலாக நடவடிக்கை எடுக்கக் கூடியவர். ஆனால், தமிழனின் தலை எழுத்து, என்ன என்பதற்கு, இனி வரும் காலம் தான், பதில் சொல்ல வேண்டும்.

வன்முறைக்கு ஆதரவா? வையுங்கள் "ஆப்பு!'

எம்.முகம்மது சித்திக், திருவாரூரிலிருந்து எழுதுகிறார்: "பா.ம.க.,வினர் தாக்குதலால் ஏற்பட்ட சேதத்தின் மதிப்பு கணக்கிடப்பட்டு, நஷ்டஈடு வசூலிக்கப்படும்' என, முதல்வர் ஜெயலலிதா, சட்டசபையில் அறிவித்தார். பா.ம.க., மட்டும் அல்ல; எந்தக் கட்சி வன்முறையைத் தூண்டினாலும், வன்முறையில் ஈடுபட்டாலும், கட்சித் தலைமையிடம் இருந்து, நஷ்ட ஈடு வசூலித்தே தீர வேண்டும். ஒரு கட்சி ஸ்டிரைக் அறிவித்தால், போக்கிரிகளுக்கும், சமூக விரோதிகளுக்கும் தான் கொண்டாட்டம். நன்கொடை தராத நிறுவனம், ஓட்டல் ஆகியவற்றை, சமூக விரோதிகள், "பந்த்' தினத்தன்று தாக்குவது வாடிக்கை. முதல்வர் ஜெயலலிதாவின் அறிவிப்பை நடுத்தர மக்களும், நடுநிலையாளர்களும் நிச்சயம் வரவேற்பர். சமூக விரோதிகளை கட்சிகள் அனுமதித்தால், அரசு நடவடிக்கையை, அவர்களும் சந்தித்தே தீர வேண்டும்.



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.