வசூல் கும்பலால் அதிகாரிகள் கலக்கம்!
""சரியான
போட்டி வருமான்னு, சில கட்சிகள் ஆவலா, எதிர்பார்க்கிறாங்க பா...'' எனக்
கூறியபடியே, நாயர் கடைக்கு வந்த அன்வர்பாயிடம், ""யாருக்கு ஓய் போட்டி...''
எனக் கேட்டார் குப்பண்ணா.
""ராஜ்யசபா தேர்தல்ல, போட்டியிடறதா
இருந்தா தான், லோக்சபா எம்.பி., சீட்டுக்கு, பேரம் பேசலாமுன்னு, சில
கட்சிகள் கணக்கு போடுது... காலியாகவுள்ள, ஆறு ராஜ்யசபா எம்.பி.,
பதவிகளுக்கு, அ.தி.மு.க., சார்புல, நாலு பேரு, போட்டியின்றி தேர்வு ஆவது
உறுதி... மீதமுள்ள இரண்டு எம்.பி., பதவிகளுக்கும், தேர்தல் நடக்கணுமுன்னு,
காங்கிரஸ், பா.ம.க., புதிய தமிழகம் கட்சிக்காரங்க எதிர்பார்க்குறாங்க...
""போட்டி
இருந்தா தான், அக்கட்சிகளுக்கு முக்கியத்துவம் கிடைக்கும்... அதாவது,
காங்கிரஸ் கட்சிக்கு, அஞ்சு ஓட்டுங்க இருக்கறதால, தி.மு.க., அல்லது
அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு குடுத்து, அச்சாரம் போடலாம்ன்னு பாக்குறாங்க...
புதிய தமிழகம் கட்சிக்கு, ரெண்டு எம்.எல்.ஏ., க்கள் ஓட்டு இருக்குது...
""அந்த
கட்சிக்கு, தென்காசி லோக்சபா தொகுதியை, தி.மு.க., கூட்டணியில ஒதுக்கினா,
ராஜ்யசபா தேர்தல்ல, தி.மு.க.,வுக்கு, புதிய தமிழகம் ஓட்டு அளிக்க வாய்ப்பு
இருக்குது... பா.ம.க.,கிட்டே, மூணு, எம்.எல்.ஏ.,க்களோட ஓட்டு இருக்கறதால,
அ.தி.மு.க.,வுக்கு வெறுப்பு ஏற்றுவதற்காக, தி.மு.க.,வை ஆதரிக்கவும்
பா.ம.க., தயாரா இருக்குது பா...'' என, விளக்கினார் அன்வர்பாய்.
""ஜெயில்ல, மொபைல் போனுங்க விளையாடுது வே...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார் அண்ணாச்சி.
""எந்த ஜெயிலுங்க...'' எனக் கேட்டார் அந்தோணிசாமி.
""புழல்
மத்திய சிறையில, கைதிகள் எல்லாம் உற்சாகமா இருக்காங்க... வெளியே கிடைக்கக்
கூடிய எல்லா பொருட்களும், உள்ளே கிடைக்குது... ஜெயிலுக்குள்ளே
உட்கார்ந்துக்கிட்டு ஜாலியா, சொந்தக்காரவகிட்டே, வக்கீல்ககிட்டே மொபைல்
போனில் மணிக்கணக்குல பேசுதாவ...
""மொபைலில் பேசிய நம்பர்கள், மொபைல்
போன் டவருல, பதிவாகிருக்கு... "நோட்டுகளை வெட்டுற' கைதிகளுக்கு, செட்டி
நாடு சாப்பாடு முதல், சகல வசதியும் கிடைக்கிறதுக்கு, வழி செஞ்சு
வச்சிருக்காவ வே...'' என, கூறினார் அண்ணாச்சி.
""அதிரடியா டிரான்ஸ்பர் போட்டுட்டா ஓய்...'' என, அடுத்த தகவலை ஆரம்பித்தார் குப்பண்ணா.
""எந்த துறையிலன்னு, தெளிவா சொல்லு பா...'' என்றார் அன்வர்பாய்.
""பத்திரப்
பதிவுத் துறையில, சப்- ரிஜிஸ்ட்ராரா இருக்கறவாளை, இடமாத்தம் செய்யறதா
சொல்லி, வசூல் வேட்டை நடக்கறதுன்னு பேசினோமே... இதுல சொன்னபடி, 300க்கும்
மேற்பட்ட சப்-ரிஜிஸ்ட்ரார்களை டிரான்ஸ்பர் பண்ணிட்டா... சென்னை மண்டலத்துல
மட்டும், 28 பேர் டிரான்ஸ்பர் ஆய்ட்டா...
""கடந்த, 2008க்கு
அப்புறம், இப்ப தான் இது போல, ஒட்டு மொத்தமா டிரான்ஸ்பர் போடறா... "எங்களை
மீறி, துறை அமைச்சரும், ஐ.ஜி.,யும் என்ன செய்ய முடியும்'னு, வசூல் கும்பலை
சேர்ந்த ஒருத்தர், சவால் விடறார்... இவர் போடற ஆட்டத்தைப் பத்தி, எங்கே
போய் புகார் பண்றதுன்னு, அதிகாரிகள் புலம்புறா ஓய்...'' என, ஒரே மூச்சில்
கூறி முடித்தார் குப்பண்ணா.
"சாமி' பட வசனம் போல், "மஞ்சச் சாமி,
சிவப்புச் சாமி...' எனக் கூறி நிறுத்தி, ஒரு நொடிக்குப் பின்,
"வெள்ளைச்சாமி...' எனக் கூறிய அண்ணாச்சி, மற்றவர்களை அர்த்தத்துடன்
பார்த்தார்.
நண்பர்கள் மவுனமாய் கிளம்பவே, பெஞ்ச் அமைதியானது.
கூடிய கூட்டம் ஓட்டாக மாறுமா?
""மாம்பழக்கட்சிக்காராளோட நிலைமை என்னாகுமுங்க...'' எனக் கேட்டபடியே, நாயர் கடைக்குள் நுழைந்தார் அந்தோணிசாமி.
""என்ன
ஓய் இப்படி கேட்டுட்டீர்... நிறுவனர், ஆஸ்பத்திரில படுத்துண்டிருக்கறச்சே,
இப்படியெல்லாம் கேக்கலாமா...'' எனக் கேட்டார் குப்பண்ணா.
""அதுக்குல்லீங்க...
கட்சிக்கு தடையெல்லாம் போட்டுட முடியாதுன்னு தெரியும்ங்க... ஆனாலும்,
இப்போதைக்கு, கட்சிக்காரங்க மேலே நடவடிக்கை எடுத்ததால, "லா அண்டு ஆர்டர்'
பிரச்னை இல்லாம அமுக்கமா இருக்கு... அவங்களால ஏற்பட்ட சொத்து சேதத்துக்கு,
இழப்பீடு கேட்டாங்க... அவங்கள்ட்ட அந்த அளவு பணம் இல்லியாமுங்க... அந்த
விவகாரம் என்னாகும்ன்னு தெரியலே... மறுபடி அந்தக் கட்சிக்காரங்க, சேதம்
ஏற்படுத்தப் பார்த்தாங்கன்னா, ஸ்ட்ரிக்டா ஆக்ஷன் எடுக்கணும்ன்னு,
கவர்மென்ட் திட்டமிட்டு வச்சிருக்குன்னு சொல்றாங்க... அதான், ஏதும் விஷயம்
தெரியுமான்னு கேட்டேன்...'' என, மொத்த விஷயத்தையும், அந்தோணிசாமியே கூறி
முடித்தார்.
""சட்டசபை நடக்கும்போது மட்டும், மின்சாரம், "ஓஹோ'ன்னு
எல்லா எடத்துலயும் பாய்ஞ்சுடுத்து ஓய்...'' என, காவிப் பற்கள் தெரிய
சிரித்தார் குப்பண்ணா.
""மின்சாரம் பாய்ஞ்சுடுச்சா... என்ன வே சொல்லுதீரு... எதாச்சும் அசம்பாவிதம் நடந்துச்சா...'' என, படபடத்தார் அண்ணாச்சி.
""இல்லே
ஓய்... மின்சார மானிய கோரிக்கை மேலே, சட்டசபைல விவாதம் நடந்தப்ப, எந்த
ஊர்லயும், மின்சாரத்தை கட் செய்யக் கூடாதுன்னு கவர்மென்ட் உத்தரவு
போட்டுது... அதனால, மூணு நாளா, தமிழகம் முழுக்க, எல்லா எடத்துலயும்
மின்சாரம் முழுசா கிடைச்சுது... நேத்துலேர்ந்து, நிலைமை தலைகீழா
மாறிடுத்து... தென் மாவட்டங்கள்ல, வழக்கம் போல, 10 மணி நேர, "பவர்கட்'டை,
வெளில சொல்லாம செய்ய ஆரம்பிச்சுட்டா...'' எனக் கூறி முடித்தார் குப்பண்ணா.
""நடிகைக்கு கூடின கூட்டத்தை பார்த்து, "அப்செட்' ஆகிட்டாவ வே...'' என, கடைசி தகவலுக்கு மாறினார் அண்ணாச்சி.
""எந்த நடிகைக்கு பா...'' என, ஆர்வமாக கேட்டார் அன்வர்பாய்.
""குஷ்புவுக்கு
தான்... சேது சமுத்திரம் திட்டத்தை வலியுறுத்தி, தி.மு.க., எழுச்சி நாள்
பொதுக் கூட்டம், நீலகிரியில நடந்துச்சுல்லா... அந்தக் கூட்டத்துல, குஷ்பு
பேச்சைக் கேட்க, அவங்க வாரதுக்கு முன்னாடியே, கூட்டம் கூடிடிச்சு... இதைப்
பார்த்து, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் தரப்புல அப்செட் ஆகிட்டதா தகவல்...
""ஏன்னா,
ஸ்டாலின், அதே நீலகிரி மாவட்டத்துக்கு, சுற்றுலா போனப்ப வந்த கூட்டத்தை
காட்டிலும், குஷ்புவுக்கு அதிகமாவே கூட்டம் கூடியிருக்கு... அதனால,
கூட்டத்திற்கு ஏற்பாடு செஞ்ச மாவட்ட நிர்வாகிகளுக்கு, "செம டோஸ்'
விழுந்திருக்கு... அதனால, மாவட்ட நிர்வாகிகள் தரப்புல, "குஷ்பு பேசிய
கூட்டத்துல, ஊட்டிக்கு வந்த சுற்றுலா பயணிகள் தான் அதிகமாக
கலந்துக்கிட்டாங்க'ன்னு சொல்லி சமாளிச்சிட்டாவ வே...'' என, விவரித்தார்
அண்ணாச்சி.
""அதெல்லாம் இருக்கட்டும்... எத்தனை கூட்டம் கூடினாலும்,
அத்தனையும் ஓட்டா மாறுமா... அங்க தான் இருக்கு விவகாரமே...'' எனக் கூறிய
குப்பண்ணா, ""ஊட்டி... ஊட்டி...ன்னு பேசினதால, மசாலா டீ குடிக்கணும்ன்னு
தோணறது... நாயர், ஏலம் அதிகமா போட்டு, மசாலா டீ குடும் ஓய்...'' எனக்
கேட்டார்.
இரண்டு நிமிடங்களில் டீ வந்தது; குடித்ததும், நண்பர்கள் கிளம்பினர்; பெஞ்ச்சில் மற்றவர்கள் வந்தமர்ந்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.