இளம் பாடகி தாரிணிக்கு சிறந்த பாடாந்திரம் உள்ளது என்பதை, கொரட்டூர் கல்சுரல் அகடமி இசை நிகழ்ச்சியில் நிரூபித்தார். முதல் குரு அமரர் சுலோச்சனா பட்டாபிராமிட மும், தற்போது, பிரபல இசை விதூஷி சங்கீத கலாநிதி ஆர்.வேதவல்லியிடமும் சிறப்பு பயிற்சி பெற்று வருகிறார் தாரிணி. ஹயக்ரீவர் சுலோகத்துடன் கணீரென்று துவக்கிப் பாடிய தாரிணி, திருவொற்றியூர் தியாகைய்ய ருடைய சகாநா ராகம் - ஆதி தாள கருணிம்ப வர்ணத்தை, கச்சிதமாகப் பாடி நிகழ்ச்சியை களைகட்ட வைத்த பின், ஸ்ரீ மகா கணபதே (நாட்டை), (ஸ்ரீ முத்துசாமி தீட்சிதர்) கிருதியை சிறப்பாகப் பாடி, விநாயகப் பெருமானுக்கு அஞ்சலி செய்ததும் அமர்க்களமாக இருந்தது.
இந்த நிகழ்ச்சியில், இவர் கையாண்ட, இருபத்தெட்டாவது மேள ராகமான அரிகாம்போதி ராக ஆலாபனை சிறப்பாக அமைந்தது. பழம் பெரும் ரத்தி ராகங்களில் ஒன்றான இந்த ராகம் பழந்தமிழ் இசையில் குறிப்பிடப்பட்ட "பாலை'களில் ஒன்று. இந்த ராகத்தை மிக ஆழமாக கையாண்டு பாடினார். இந்த நிகழ்ச்சியில், அவர் கையாண்ட பிரதான கல்யாணி ராக ஆலாபனையையும் விட, இந்த அரிகாம்போதி ராகத்தை அவர் பாடிய விதம் மிக உயர்வாக அமைந்திருந்தது. சியாமா சாஸ்திரிகளுடைய ஓ ஜெகதம்ப காலப்பிரமாணம் சற்றே தள்ளியது. தொடர்ச்சி சரியாக அமையவில்லை.
தொடர்ந்து, ஸ்ரீ தீட்சிதருடைய பஜரே ரேசித்த கிருதியும், ஆழமான நயமாக கையாண்டு வழங்கப்பட்டன. தேவி பீஜோத்பவ இடத்தின் சிறப்பான நிரவல் - ஸ்வரக் கோர்வை, குஞ்சலங்கள் கோர்வை சொகுசாக அமைந்து கேட்க மகிழ்ச்சியாக இருந்தது. கண்ணன் குழல் இசைத்து மட்டும் மாந்தர்களை மயக்கவில்லை. அவன் தோற்றம் குழலிசையை விட அழகு. இதை தாரிணியின், கண்ணன் குழல் - நயனங்களின் வருணனையில் மட்டுமின்றி, தொடர்ந்த அம்புஜம் கிருஷ்ணாவின் ராக மாலிகை கான மழை பொழிகின்றான் பாடலில் கேட்டு ரசிக்க வைத்தார். எம்.விஜய் வயலின் வாசிப்பு அருமை. என்.சி.பரத்வாஜ், மிருதங்க வாசிப்பும் பலே ஜோர். தனி படு அமர்க்களம் வாசிப்பு. இந்த இளம் கூட்டணி ரசிகர்களை, வெகுவாக கவர்ந்ததில் வியப்பேதும் இல்லை.
- மாளவிகா
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.