ஒரு ஊரில் ராமு, சோமு என்று இருவர் இருந்தனர். இருவரும் விவசாயிகள்; ராமுவின் சகலை சோமு. அதாவது இருவரின் மனைவிகளும் சகோதரிகள். இரு குடும்பங் களும் அடுத்தடுத்த கிராமங்களில் இருந்தன.
ராமு விவசாயம் செய்யும் போது, அனுபவமிக்க விவசாயிகளுடன் கலந்து ஆலோசித்த பிறகே செய்வான். உள்ளூரில் இருந்த அரசாங்க விவசாய அதிகாரிகளையும் அவ்வப்போது சந்தித்து, விவசாயத்தைப் பற்றிய பல புதிய தகவல்களை அறிந்து கொண்டே இருப்பான். தான் கற்றதை மற்ற விவசாயிகளிடமும் பகிர்ந்து கொள்வான். இத்தகைய கருத்து மற்றும் தகவல் பரிமாற்றத்தால், அவன் நிலத்தின் விளைச்சல் செழிப்பாக இருந்ததுடன் அவனுக்கும் கிராமத்தில் பெருமதிப்பு இருந்தது.
ஆனால், அவன் சகலை சோமு அதற்கு நேர்மாறானவன். தனக்குத் தெரிந்த எந்த விஷயத்தையும் மற்ற விவசாயிகளுக்கு சொல்ல மாட்டான். தனது நிலத்தில் நல்ல விளைச்சல் ஏற்பட்டால், அதற்கான காரணத்தை மற்றவர் களுக்கு சொல்ல மாட்டான். தன் நிலத்தில் பயிர்கள் ஏதாவது நோய்கொண்டு வாடினாலோ, பூச்சிகள் தாக்கினாலோ, அதையும் மற்றவர் களுக்கு சொல்ல மாட்டான். தனக்கு இரண்டு கண் போனாலும் பரவாயில்லை, அடுத்தவனுக்கு ஒரு கண்ணாவது போக வேண்டும் என்று நினைக்கும் கெட்ட மனம் படைத்தவன். தன் சகலை தன்னைவிட நன்றாக வசதியுடன் வாழ்வதைக் கண்டு, சகலை ராமு மீது அவனுக்கு பொறாமை! அவனை விட எப்படியாவது முன்னேற வேண்டும் என்பதே அவன் கனவு.
ஓராண்டு மழையே பெய்யாமல் போக, இரண்டு கிராமத்துக் கிணறுகளிலும் நீர் மட்டம் குறைந்து போயிற்று. வழக்கப்படி கிணற்றிலிருந்து ஏற்றம் வைத்து வயலுக்குத் தண்ணீர் இறைப்பது மிகவும் கஷ்டமாகப் போயிற்று. உடனே, கிராம விவசாயிகள் ராமுவிடம் வந்து ஆலோசனை கேட்க, ராமு அவர்களை அழைத்துக் கொண்டு, விவசாய அரசு அதிகாரியிடம் சென்று யோசனை கேட்க, அவர் டீசல் இன்ஜினுடன் பொருத்தப்பட்ட பம்பு செட் வாங்கி உபயோகப்படுத்தச் சொன்னார். அது பம்புசெட்கள் வந்த காலம். அதைப்பற்றிய அறிவு நிறைய பேருக்கு கிடையாது.
உடனே எல்லா விவசாயி களும் ராமுவின் ஆலோசனைப்படி, ஒன்று சேர்ந்து பணம் திரட்டி பொதுவில் ஒரு பம்பு செட் வாங்கினார்கள். எல்லாரும் முறை வைத்து அதைப் பயன்படுத்த மிகக் குறுகிய காலத்தில் ஒரு பம்பு செட் மூலம், பல வயல்களுக்கு ஒரு நாளில் தண்ணீர் பாய்ச்ச முடிந்தது. எல்லா விவசாயிகளும் இதனால் பயன் பெற்றனர்.
இதைப்பற்றிய செய்தி சோமுவின் செவிகளையும் எட்டியது. உடனே தன் ஊரில் உள்ள விவசாயிகள் ஒன்று சேர்ந்து பணம் திரட்டி பம்பு செட் வாங்க முற் பட்டனர். ஆனால், சோமு வழிதான் தனி வழி ஆயிற்றே... அவன் யாருடனும் கூட்டு சேரவில்லை.
பணம் கடன் வாங்கி, தன்னுடைய உபயோகத்திற்காக மட்டும் ஒரு பம்பு செட் வாங்க விரும்பினான். உடனே, உள்ளூர் சேட்டிடம் சென்று கடன் வாங்கினான்.
தான் கடன் வாங்கிய விஷயத்தையும், தனக்கென்று தனியாக பம்பு செட் வாங்கப் போகும் விஷயத்தையும் தன் சகலையிடம் சொல்லவில்லை. கிராமத்து மற்ற விவசாயி களிடமும் அதைப் பற்றி மூச்சு விடவில்லை. தன்னந்தனியாக ஒரு நாள் நகரத்துக்கு பம்பு செட் வாங்கப் போனான். எப்படிப்பட்ட பம்பு செட், எந்த நிறுவனத்தின் தயாரிப்பு நன்றாக வேலை செய்யும் என்று அவனுக்கு சுத்தமாகத் தெரியாது. மற்ற விவசாயிகளை அவன் கேட்கவும் இல்லை. நகரத்தில் கடைத் தெருவை சுற்றிச் சுற்றி வர, ஒரு ஆள் சோமுவை நோட்டம் விட்டான்.
சோமுவை அணுகிய அவன், அவனிடம் பேச்சுக் கொடுத்து அவன் எதற்காக நகரம் வந்திருக்கிறான் என்று கேட்டுத் தெரிந்து கொண்டதும், சோமுவை ஏமாற்றிப் பணம் பறிக்கத் திட்டமிட்டு, அவனை ஒரு பம்பு செட் கடைக்கு அழைத்துச் சென்றான்.
அந்தக் கடைக்காரனிடம், பம்பு செட் வாங்க யாரையாவது கூட்டி வந்தால், அந்த தரகனுக்கு கடைக்காரன் கமிஷன் தருவான். அதன்படி அந்த ஆள் சோமுவை அந்தக் கடைக்கு அழைத்துச் சென்று மிகவும் மட்டமான பம்பு செட் ஒன்றை சோமுவின் தலையில் கட்டி விட்டு, தன் கமிஷனைப் பெற்றுக் கொண்டு ஓடி விட்டான்.
தன் கிணற்றில் புதிய பம்பு செட்டைப் பொருத்தியவுடன், சோமு எதிர் பார்த்தபடி இல்லாமல் பம்பில் தண்ணீர் மிகக் குறைவாக வந்தது. டீசலை மட்டும் பம்பின் இன்ஜின் வஞ்சனையில்லாமல் தாராளமாகக் குடித்தது. ஆனால், தண்ணீர் மிகக் குறைவாக வந்தது. புதிய பம்பில் ஏன் இந்த பிரச்னை என்று அவனுக்கு புரியவே இல்லை.
ஒருநாள், பக்கத்து வயலில் வேலை செய்து கொண்டிருந்த சின்னசாமி, சோமுவின் பம்பு செட்டைப் பார்த்து விட்டு, ""அடப் பாவிப் பயலே! இன்னுமா புரிய வில்லை? உன் பம்பு செட்டில் ஒரு பிசாசு குடியிருக் கிறது. அதனால் தான் பம்பு சரியாக வேலை செய்வது இல்லை. நீ காளி கோவில் பூசாரியைக் கூட்டி வா! அவன் பம்புக்கு தாயத்து கட்டி பிசாசை விரட்டுவான்,'' என்றான்.
வெளியில் யாருக்கும் இந்த விஷயம் தெரிய வேண்டாமென்று நினைத்த சோமு, நள்ளிரவில் பூசாரியை ரகசியமாக பேய் ஓட்டக் கூட்டி வந்தான். பூசாரியும் பலமாக பூஜை போட்டு, மந்திரித்த ஒரு தாயத்தை பம்பில் கட்டி விட்டு, ஆயிரக்கணக்கில் பணம் வாங்கிக் கொண்டு போனான். அப்படியும் பிசாசு டீசல் குடிப்பதை நிறுத்தவில்லை.
எத்தனையோ ரகசியமாக செயற்பட்டும், சோமுவின் பம்பில் பிசாசு குடியிருப்பது எல்லாருக்கும் தெரியவர, அவன் வயலில் வேலை செய்யவே யாரும் முன்வரவில்லை. ஒவ்வொருவரும் பிசாசை விரட்ட தங்களுக்குத் தெரிந்த யோசனைகளைக் கூறினர்.
தற்செயலாக, அப்போது ஏதோ வேலை விஷயமாக வந்த ராமு, தன் சகலையின் பம்பில் குடியிருக்கும் பிசாசு பற்றிய செய்தியை கேட்டு, நேராக சோமு வீட்டுக்குச் சென்று அவனுடன் வயலுக்குச் சென்று பம்பு செட்டைப் பார்வை இட்டான்.
""சகலை இத்தனை விஷயம் நடந் திருக்கிறது. நீ என்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லையே... பம்பு செட் வாங்கு வதற்கு முன் என்னை கலந்து ஆலோசித்து இருக்கலாமே... அல்லது விஷயம் தெரிந்த யாரிடமாவது யோசனை கேட்டிருக்கலாமே! உன் பம்பு செட்டில் பேயும் இல்லை, பிசாசும் இல்லை. இது மிக மோசமான பம்பு செட். இதை யாரோ உன் தலையில் கட்டியிருக்கின்றனர். தவிர, பம்பின் தண்ணீர் உறிஞ்சும் குழாய் அளவு சரி இல்லை, அதனால்தான் இன்ஜின் மிக அதிகமாக டீசலைப் பயன்படுத்துகிறது. குழாயின் மட்டத்தை உயர்த்து, ஓரளவு தண்ணீர் நன்றாக வரும். தண்ணீரை கிணற்றிலிருந்து உறிஞ்ச முடியாததற்கு பம்பின் தரக் குறைவும், குழாயின் உயரமும்தான் காரணம்!'' என்று விளக்கினான்.
ராமுவின் வார்த்தைகளைக் கேட்டு, சோமுவிற்கு அவமானமாக இருந்தது.
"இத்தகைய நல்ல மனிதனைப் பார்த்தா பொறாமைப்பட்டோம்' என்று வருந்தினான். தன்னுடைய குறுகிய மனப்பான்மையை எண்ணி வெட்கப்பட்டான். ராமுவிற்கு தன் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்தபின், அன்று முதல் முற்றிலும் புதிய மனிதனாக மாறினான்.
***
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.