பரத கலாலயம் நடனப் பள்ளி நிறுவனர் குரு, கலைமாமணி சூர்யா சந்தானம், பத்மஸ்ரீ கே.என்.தண்டாயுதபாணி பிள்ளையின் மூத்த சிஷ்யை. பல பெரிய விருதுகளை பெற்ற சூர்யா, தன் நடனப் பள்ளி மூலம் எண்ணற்ற அரங்கேற்றங்கள், சலங்கை பூஜைகள் நடத்தியுள்ளார். நடுத்தர வர்க்கத்தின் நம்பிக்கை நட்சத்திரம் சூர்யா என்பது மிகையல்ல. அவரது பல்நோக்கு பார்வையைக் காட்டும் விதமாக, சலங்கை பூஜையை அமைத்திருந்தார் குரு சூர்யா.
தன் குட்டி சிஷ்யைகள் நான்கு பேரின் சலங்கை பூஜையை, வாணி மகால் ஓபுல் ரெட்டி ஹாலில் வெகு விமரிசையாக நடத்தினார். ரசிகர்கள் கூட்டம் நிரம்பி, உட்கார இடம் இல்லாமல், நின்று கொண்டு ரசித்தனர். கார்த்திகா, ரியா கேத்தரின், ஹரி நந்தினி, அனுவர்ஷிணி இந்த நான்கு குட்டி நடன மலர்கள் இணைந்து, முதன் முதலாக சலங்கை பூஜை செய்து, அதை குரு எடுத்துக் கொடுக்க, காலில் அணிந்து தன் பெற்றோர், உறவினர்கள் புடை சூழ ஆசீர்வாதம் பெற்று, தங்களின் நடனத்தை துவக்கினர். பாட்டோ, நடனமோ அதை பாரம்பரியமாய் அறிந்து கற்பவர்கள் ஒரு பக்கம்.
ஆனால், கலையைப் பற்றி அறிமுகமில்லாத குடும்பங்களிலிருந்து அதைக் கற்றுக் கொடுக்க வேண்டும் என பெற்றோரும், சுற்றங்களும் ஒன்று கூடி, குழந்தைகளை அக்கலையில் ஈடுபடுத்தி கற்க செய்து, அதை மேடை ஏற்றி அழகு பார்ப்பது தான் இமாலய சாதனை. அப்படி தான் இச்சலங்கை பூஜையும் நடைபெற்றது. முதலில் நால்வரும் இணைந்து, பாரம்பரிய மிக்க புஷ்பாஞ்சலியை நாட்டை ராகத்தில் அமைந்ததை குரு கொடுக்க, ப்ரியாவின் தேன் மதுர குரலில் பாட, பூமி தாய்க்கும், குருவுக்கும் பக்கவாத்திய கலைஞர்களுக்கும், சபையினருக்கும் வணக்கம் செலுத்தி, இறுதியில் ஆடலரசன் நடராஜனை பணிந்து, பூக்களை சொரிந்து வணங்கினர்.
திச்ர அலாரிப்பு கே.என்.டி., இயற்றியதை நால்வரும் இணை ந்து ஆடி, ரசிகர்களின் கரகோஷத்தைப் பெற்றனர். அடுத்து கானடா ராக ஜதி ஸ்வரத்தை மிக அருமையாக ஆடினர். அடுத்ததாக குரு சூர்யா, நால்வரையும் தனியாக ஆட ஏதுவாக, அவர்களுக்கு ஏற்றவாறு பாடல்களை தேர்வு செய்திருந்தார். அலமேலு - ஏழுமலை தம்பதியின் மகளான கார்த்திகா, தன் குருவின் மூலம் பல கோவில்கள், நடன அரங்குகளில் ஆடிஉள்ளார்.
இவருக்கு, குரு சூர்யா, "குறை ஒன்றும் இல்லை' என்ற மிகப் பிரபலமான பாடல். ராஜாஜி இயற்றி, ராகமாலிகையில் எம்.எஸ்., பாடியதாகும். இப்பாடலை கார்த்திகா புரிந்து கொண்டு நெக்குருக ஆடி சிறப்பித்தார். அடுத்ததாக, குட்டிப் பெண் அனுவர்ஷிணி, நான்காவது படிக்கிறார். இவர், கன்னிமுத்து - சரஸ்வதி தம்பதியின் மகள். இவருக்கு குரு சூர்யா தேர்ந்தெடுத்த பாடல், ராகமாலிகையில் அமைந்த சுப்ரமணிய பாரதியாரின், "தீராத விளையாட்டுப் பிள்ளை' பாடல். கண்ணனின் குறும்புத்தனத்தை அப்படியே தன் நடனத்தில் வார்த்து தந்தார். அடுத்து வந்தது, தான் மிகப் பெரிய பொக்கிஷமான பாடல். கே.என்.டி., எத்தனையோ பாடல்களை எழுதி, நடன வடிவம் கொடுத்திருந்தாலும், நமக்கு பல கிடைக்காமலே போய்விட்டன. அதில் ஒன்று தான், "ஏசுவை போல் ஒரு மாசு இல்லாதவன் எங்கிலும் உண்டோடி தோழி' என்ற மிக அருமையான ராகமாலிகை பாடல்.
ஷகீலா - சுரேஷ் தம்பதியின் மகளான ரியா கேத்தரின், ரோசரி மெட்ரிக் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார். குருவுடன் பல கோவில்களிலும், நடன அரங்குகளிலும் ஜாதி, மத பேதமின்றி பங்கெடுத்துள்ளார். தன் உற்ற தெய்வமான ஏசு பாசமும், நேசமும், பண்பும் நிறைந்தவர். "நல்ல நாளில் பிறந்தான்' என புகழ்ந்து, அருமையாக ஆடினார். அடுத்து ராஜலட்சுமி - பன்னீர் செல்வம் தம்பதியின் வாரிசான ஹரி நந்தினிக்கு, குரு சூர்யா, அகஸ்திய முனிவர் இயற்றியுள்ள, "ஸ்ரீ சக்ர ராஜ சிம்மாசனே ச்வரி பாடலை தேர்ந்தெடுத்து, ஆட வைத்தார்.
"மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது' என்பர். அப்படி நான்கு குட்டி நடன மலர்கள், நல்ல பாடல்கள் மூலம் நமக்கு நல்ல கருத்தையும், கலையையும் போற்றிச் சொன்னதும் மிகச் சிறப்பு. மிருதங்கத்தில் சிவசங்கர ரெட்டி, கீ போர்டு வெங்கட
சுப்ரமணியம், குரலில் ப்ரியா, நட்டுவாங்கம் மற்றும் நடன அமைப்பு குரு சூர்யா சந்தானம்.
- ரசிகப்ரியா
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.