கே.ஜே.சரசாவின் மூத்த மாணாக்கியரில் ஒருவர் ஸ்ரீநிதி சுந்தர். சரசாவின் சிஷ்யைகள் அனைவருமே அபிநயத்தில் முதல் நிலையில் இருந்து ஆடுபவர்கள். அதை நடன உலகம் நன்கு அறியும். உடல் வளையாமல் நின்ற நிலையில் ஆடிக் கொண்டும், கடமைக்காக நிகழ்ச்சியில் ஆடினால் புகழோ, உச்சாணிக் கிளையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவர் ரசிகர்கள். அப்படி உள்ள நிலையில் ஸ்ரீநிதி போன்றோர் சிறப்பாக ஆடும்போது ரசிகர்களுக்கு கிடைக்கும்
திருப்திக்கு அளவே இல்லை. அன்றைய தினம் தன் நிகழ்ச்சியை கண்ணனுக்காக அர்ப்பணித்திருந்தார் ஸ்ரீநிதி. காதலர்கள் என்று சொன்னால் அது ராதை - கிருஷ்ணனைப் போல இருக்க வேண்டும் என்று சொல்வதும் வழக்கம். அதை தன் நடனத்தின் மூலம் நிரூபித்து காட்டி விட்டார்.
பிரதான இசை வடிவமான வர்ணத்தில் அகிலம் புகழும் அழகன், மோகனரூபன், அவளை கண்ணுக்கு நேராக பார்க்கும்போது சொக்கி நிலை தடுமாறி செய்வதறியாது நின்று தன் நிலை மறந்து பக்கத்தில் இருப்பவர் கூட தெரியாமல் அவர் மேல் விழுவது போன்றவற்றை பல்லவி வரிகளுக்கு சஞ்சாரியாகக் கொடுத்தார்.
ராதை மட்டும் அப்படி விழவில்லை ஒட்டுமொத்த ஆயர்பாடி கூட்டமே அவன் குழலோசையின் மந்திர சக்திக்கு கட்டுண்டது போல் இருந்ததையும் சொல்லி விவரித்து ஆடினர். கண்ணனின் லீலைகளை விவரித்து ஆடி வர்ணத்தை முடித்தார். அனைத்து ஜதிகளும் கனகச்சிதம். நட்டுவாங்கத்தில் ஹரிகிருஷ்ணன் குரலில் முரளி பார்த்தசாரதி கான மழை தான் அப்படி அனுபவித்து பாடுகிறார். மிருதங்கத்தில் தனஞ்செயன் வாசிப்பு அதற்கு மாற்று கருத்தே கிடையாது. வயலினில் முருகானந்தம் என்ற அற்பதமான கூட்டணியில் ஸ்ரீநிதியின் நடனம் முதல் தரமாக நின்றது.
ரசிகர்களின் நெஞ்சில் அடுத்து ,அஷ்டமி முகாரி ராகத்தில் கண்ட சாபு தாளத்தில் மிகப் பிரபலமான, "பீரியே சாரு ஷீலே' என்ற ஜெயதேவர் உருகி உருகி எழுதிய பாடல். அந்த நிலையில் அஷ்டபதிக்கு ஸ்ரீநிதியின் நடனம் அபாரமாக அமைந்தது. கண்கள் காவியம் பேசும் என்பர். ஆனால், கண்ணனின் காவியத்தை கண்கள் மூலம் அவர் சொல்ல, பார்த்த கண்கள் அடைந்த பேற்றை வார்த்தைகளால் சொல்வது கடினம் என்றால் மிகையில்லை. இப்படி ஒரு அற்புதமான நடன கலை நமக்கு கிடைத்திருப்பதை எண்ணி நாம் தான் பெருமைபட வேண்டும்.
காதல் என்பது "காமம்' அல்ல. அதைத் தாண்டி தெய்வீகமானது என்பதை கண்ணன் மூலம் தான் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
அடுத்து வந்த நாட்டுப்புறப் பாடல் கண்ணன் வருகிற நேரம் என்று அவர் துள்ளிக் குதித்தாட, நம் மனம் துள்ளிக் குதித்தது. இறுதியாக பாலமுரளி கிருஷ்ணா இயற்றிய ப்ருந்தாவனி ராகத் தில்லானா, நந்தலாலாவின் புகழை மேலும் குழைத்து நம் மனதை கரைத்து மோன நிலையை அடையச் செய்தது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.