வி.சந்திரசேகர் எழுதிய, "ஒரு நாதஸ்வரத்தின் பயணம்' நூல் வெளியீட்டு விழாவை பிரம்மகான சபா மிகச்சிறப்பாக நடத்தியது. இந்நூலின் கதாநாயகரான செம்பனார்கோவில் சகோதரர்களில் ஒருவரான எஸ்.ஆர்.ஜி. ராஜண்ணாவின் நாதஸ்வர கலை பயணத்தை மிக நேர்த்தியாக தொகுத்து, அதை கவிதா பதிப்பகம் வெளியிட்டு உள்ளது. தொழிலதிபர் நல்லி குப்புசாமி தலைமையேற்று புத்தகத்தை வெளியிட, முதல் பிரதியை கிளீவ்லேண்ட் சுந்தரம் பெற்றுக் கொண்டார்.
நூலாசிரியர் வி.சந்திரசேகரன் ஏற்று ஏற்புரை வழங்கினார். முன்னதாக இஞ்சிக்குடி ஈ.எம்.சுப்ரமணியத்தின் நாதஸ்வர கச்சேரி நடைபெற்றது. இந்தியா முழுவதும் கம்பீரமாக அணிவகுத்த கர்நாடக சங்கீதம், வடமாநிலங்களில் முகலாயர்களின் வருகைக்கு பின் இந்துஸ்தானி சங்கீதமாக மாறியது.
ஆனால், தென் இந்தியாவில் கர்நாடக சங்கீதம் அசைக்க முடியாமல் வேரூன்றி நின்று விட்டது. அந்த பொக்கிஷமான காரணங்களில் மேன்மையானது நமது பக்தி இசை. இது நமது ஆலயங்களை சார்ந்திருந்தது. கோவிலிலிருந்து இறை மூர்த்தங்கள் வெளியே வரவும், நாம் அதை வழிபடவும், நாதஸ்வரம் வாசித்தால்தான் அது நடைபெறும். அப்படி மங்கல தன்மையை பெற்று நம் தமிழ் மக்கள் வாழ்க்கையை தொடங்க மூன்று முடிச்சு போடவே, கெட்டி மேளம் கொட்டி, அதன்பின் தாலி கட்டித்தான்
திருமணம் என்ற பந்தத்தில் நுழைய வே முடியும். இந்த அங்கீகாரத்தை நமக்கு அளிப்பதே நாதஸ்வரம் தான்.
தமிழர்கள் உணரும் வகையில் அமைந்த இப்புத்தகத்தின் நாயகன் ராஜண்ணாவை தெரிந்து கொள்ள ஒரு அற்புதமான வாய்ப்பாக இந்த விழா நடந்தது. இசை விழா தோன்றிய பிறகுதான் கலை தலைநகராகியது. ஆனால், நம் தமிழகத்தின் தென் மாவட்டங்களின் பெயர்களை சொன்னால் அந்த ஊரின் சங்கீத பெருமை தெரியும். திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை, திருவீழிமலை சகோதரர்கள், காருகுறிச்சி, நாச்சியார்கோவில், செம்பனார்கோவில் என்று சொல்லிக்கொண்டே போகலாம். செம்பனார்கோவில் சகோதரர்களில் பெரியவர் சம்பந்தம் சமீபத்தில் காலமானார். இளையவர் ராஜண்ணா அவர்களின் பரம்பரை ஐந்து தலைமுறையை தொட்ட மிகப்பெரிய பாரம்பரியம்.
இன்று அறிவியல் தொழில் நுட்பத்திலும், கணினி அறிவியலிலும் வெற்றி கண்டவர்களை பெரிய அளவிற்கு அங்கீகாரம் கொடுக்கின்றோம். ஆனால், அன்று நமது மனோதர்ம சங்கீதத்தின் ஆணி வேராக திகழ்ந்த நாதஸ்வர வித்வான்கள் மற்றும் தவில் மேதைகளைத்தான் மக்கள் கொண்டாடினர். மேலும், கடந்த இரண்டு நூற்றாண்டு களாக மனோதர்ம சங்கீதம் எனப்படும் கற்பனை இசைப் பிரிவிற்கும் தாளத்தை பிரதானமாக கொண்டதவிலின் மிக ஆழமான கணக்குகள், இதை முறைப்படி நமது சங்கீத உலகத்திற்கு பிரகடனப்படுத்திய பெருமை நாதஸ்வரம் மற்றும் தவில் வித்வான்களையே சாரும்.
அந்த வகையில் செம்பனார்கோவில் சகோதரர்கள் சம்பந்தம், ராஜண்ணா இவர்களின் சேவை சிறப்பானது. செம்பனார்கோவில் மட்டுமல்லாது தஞ்சாவூர் ஜில்லா முழுக்க நாதஸ்வர கலைஞர்கள் நிறைந்து காணப்பட்டபோது, எந்த இடத்திற்கு போனாலும், காலை நான்கு மணிக்கு முன்பே நாதஸ்வர சாதக சப்தம் கேட்டு, வீட்டுப் பெண்கள் எழுந்து வேலை செய்ய ஆரம்பித்து, பல் துலக்கும்போதே காதில் கேட்டது பூர்வி கல்யாணியா, பந்துவராளியா என்று காதை தீட்டி, மனது படபடத்த காலத்தை இப்புத்தகம் காட்டுகிறது.
ஒழுங்கற்ற பாடாந்திரம், உழைப்பே இல்லாத சங்கீதம் என பல இன்னல்களை பட்டியலாய் வைத்துக் கொண்டு, பல இடங்களில் கச்சேரி, "டிவி' சினிமா, வெளிநாடுகளில் கச்சேரி செய்துவிட்டு, பணம் சேர்க்க மட்டும் தான் கர்நாடக இசை என்ற போக்கை கடைபிடித்து வருபவர்களுக்கு ராஜண்ணாவின் வாழ்க்கை அனுபவம் பாடமாக அமையும். மேலும், இதைப்போல் அக்காலத்து மற்ற நாதஸ்வர, தவில் வித்வான்களின் வாழ்க்கை வரலாற்றை முயற்சி எடுத்து வெளிகொண்டு வந்தால், உண்மையான சங்கீதம்
உயிர்க்கும். செம்பனார்கோவில் சகோதரர்கள் பெற்ற பட்டங்கள், வாங்கிய விருதுகள், ஏராளம் அப்படி இசைக் களஞ்சியமாக திகழ்ந்தவர்களுக்கு, பிரம்மகான சபையினர் எடுத்த இந்த மாபெரும் கவுரவம் கர்நாடக இசை உலகிற்கு ஒரு மைல்கல் போன்றது என்றால் அது மிகையில்லை.
-ரசிகப்ரியா.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.