பரதம் நாட்டிய பள்ளி, சென்னை ஷெனாய் நகர் பகுதியில் அமைந்துள்ளது. இதன் நிர்வாகியும், நடன ஆசிரியையுமான ஹிமஜா ராம்சரண், படிப்பில் எம்.பி.ஏ., பட்டதாரி என்றாலும், தன் முழு ஆர்வத்தையும் நாட்டியத்துறையில் செலுத்தி வருகிறார்.
ஹிமஜா ராம்சரணின் மாணவி ஆர்.ருக்மிணி, ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி சபையின், நூற்று பன்னிரெண்டாவது ஆண்டு நாட்டிய விழாவில் ஆடிய விதம், மனதை கொள்ளை கொண்டது. மயிலை ஆர்.கே.சுவாமி கலையரங்கத்தில், திரளான ரசிகர்களின் முன்னிலையில், இந்த இளம் நடனமணியின் நாட்டியம் நடைபெற்றது. டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா ஒரு இசை மேதை என்பதை, உலகம் அறியும்.
அவருடைய நாட்டியக் கலைக்காக, அவர் இயற்றிய உருப்படிகள் அவருடைய நடனக் கலை பற்றிய ஞானத்திற்கு, அருமையான உதாரணமாக திகழ்கிறது என்பதற்கு, இந்த நிகழ்ச்சியில் ருக்மிணி ஆடிய, அரபி ராகம் ஆதி தாளம், புஷ்பாஞ்சலி அணுவணுவாக ரசிக்க வைத்தது. தொடர்ந்த, அமரர் பாபநாசம் சிவனுடைய, சிறப்பான அம்பிகை மீது இயற்றப்பட்ட, அழகான சிவகாமசுந்தரி (ஜெகன் மோகினி) (ரூபகம்) கீர்த்தனத்தின் முதல் வரிக்கு, சிவகாமியின் ஒயிலான நடை அழகினையும், பவசாகரம் கரை காணாத பாவியை கடைத்தேற்று என்று, கெஞ்சி முறையிடும் நயமான முகபாவத்தையும், கண்டு ரசிக்க முடிந்தது.
ஒரு நாட்டியத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் வர்ணத்திற்கு, தமிழ் மணக்கும் சிலப்பதிகாரத்தின் மனையறம் படுத்த காதை, அரங்கேற்று காதை, அந்தி மாலைச் சிறப்பு செய்காதை, இந்திர விழாவூரெடுத்த காதை, கடலாடு காதை, கானல் வரி புறஞ்சேரி கிறுத்த காதை, ஊர் காண் காதை, அடைக்கல காதை, கொலைக்கள காதை, வழக்குரை காதை, வஞ்சினமாலை வாழ்த்துக் காதை இப்படி கோவலன் கண்ணகி திருமணம் முதல் கண்ணகி பத்தினி தெய்வ மாக வழிபட்ட நிகழ்ச்சி வரை, புகார் காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சி காண்டம் என்று அருமையாக பிரித்து, சிலப்பதிகார இலக்கியத்தின், முழு அழகையும்
வெளிப்படுத்தினர்.
நயமாக, அழகு தமிழில் வர்ணத்தை இயற்றிய, சிக்கில் பாலசுப்பிரமணியனை பாராட்ட லாம். மங்கையர் போற்றும், மாதவ புதல்வி நங்கையரில் சிறந்த கோவலன் நாயகி என்று துவங்கும் வரிகளுடன், இந்த வர்ணம் நீதிகவுளை வசந்தா- பிருந்தாவன சாரங்கா - இந்தோனம் - மிச்ர சிவரஞ்சனி- அம்சாநந்தி ஆகிய ராகங்களில், ராகமாலிகையாக ஆதி தாளத்தில், மிக உயர்வான, கச்சிதமான நாட்டிய வடிவமைப்புடன் இருந்தது. ஒவ்வொரு வரியிலும், உயிர் துடிப்புடன் ஆடியது, வரவேற்க வைத்தது.
தொடர்ந்த, மதுராஷ்டகம் (மிச்ர பீலு) அபிநயத்தில், ருக்மிணியின் அழகான அபிநயம், மேலும் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இவருடைய முழு அக்கறையும், திறமையும் மேலும் வெளிப்பட்டது. போ சம்போ (ரேவதி) பதத்தில், அழகிய சிவதாண்டவ முத்திரைகளில் எழில் ததும்ப ஆடினார். மகாகவி பாரதியின் சின்னஞ்சிறுகிளியே (ராகமாலிகை - திச்ர நடை) பாடலுக்கு, ஒரு தாயாக மாறி, குழந்தை கண்ணம்மாவை உச்சி முகர்ந்த நயமான அபிநயங்களும் சிறப்பாக இருந்தன.
டாக்டர் பாலமுரளி கிருஷ்ணாவின் குந்தலவராளி ஆதிதாளம் தில்லானாவை, உயர்வான நிருத்த நிருத்யம் பாதவேலைகளுடன், தூள் கிளப்பி ஆடி அசத்தினார் ருக்மிணி. இறுதியாக, ஷீராப்தி கன்ய (குறிஞ்சி அன்னமய்யா) மங்களத்தின் பாதவேலைகள், ஒரு ஊஞ்சல் ஆடுவது போன்ற பாத அசைவுகளுடன், சிறப்பான வடிவமைப்புடன் உள்ளம் கவர்ந்தது. இந்த நிகழ்ச்சியின் முழு வெற்றிக்கும் காரணம், நடன ஆசிரியை ஹிமஜா ராம்சரணின் உழைப்பு முயற்சி. மாணவி ருக்மிணியின் நாட்டிய ஆர்வம், துடிப்பு.
சிறப்பாகப் பாடிய விதூஷி லதா ராம்சந்த், மிருதங்கம் வாசித்த நாகை நாராயணன், குழலில் மதுரமாக வாசித்த ரமணா இப்படி ஒரு அருமையான "டீம்' வொர்க், இந்த வெற்றிக்கு காரணமாக இருந்தது. இந்த ஆண்டு, "பெஸ்ட் டான்சர்' விருதையும் இந்த நிகழ்ச்சிக்காக இந்த சபையில் பதக்கமும், பரிசுகளும் ருக்மிணி பெற்றாள். கோபாலபுரம் டி.ஏ.வி., பள்ளியில், பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி இவர்.
-மாளவிகா
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.