Home இதை எனது முதல் பக்கமாக்கு | வணக்கம்...வணக்கம்... யூ.எஸ்.ஏ தினமலர் வாசகரே ..! Get FontSite Map |

தினமலர்

சிறுகதை

 

BACK NEXT

 

01.

உனக்கு என்னப்பா வேணும்?
- வரலொட்டி ரங்கசாமி

 

அன்று ஸ்வாமிஜியைப் பார்க்க கடைசி ஆளாக வந்திருந்தார் ராகவன். ஸ்வாமிஜியின் முன் விழுந்து வணங்கினார்.


""உனக்கு என்னப்பா வேணும்?'' ஆதூரத்துடன் கேட்டார் ஸ்வாமிஜி. மற்ற பக்தர்கள் அப்படி கேட்காமலேயே பக்கம், பக்கமாகத் தங்கள் தேவைகளைப் பட்டியல் போட்டுக் கொடுத்து விடுவர்.


""பெரியவா அனுக்ரஹம் ஒண்ணு தான் வேணும்; வேற எதுவும் வேண்டாம்.'' சிறிது நேரம் ஸ்வாமிஜியிடம் பேசிக்கொண்டிருந்துவிட்டுக் கிளம்பினார். நடந்ததைப் பார்த்துக் கொண்டிருந்த ஸ்வாமிஜியின் பிரதான சீடர் கேட்டார்...


 

""நான் கேக்கறது தப்புன்னா பெரியவா மன்னிக்கணும். இந்த ராகவன் கடந்த 40 வருஷமா நம்ம மடத்துக்கு வரார். வந்தா பெரியவாள சேவிக்கறார். பெரியவாளும் யார்கிட்டயும் கேக்காத மாதிரி, "என்ன வேணும்?'ன்னு கேக்கறேள். "பெரியவா அனுக்ரஹம் தான் வேணும்!'ன்னு அவர் சொல்றார். இந்த மாதிரி ஒரு பக்தனை... நான்...''


சீடரை அந்த வாக்கியத்தை முடிக்க விடாமல் கையமர்த்தினார் பெரியவர்...

 

""லோகத்துல எதுவுமே சாசுவதம் இல்ல,'' என்று சொல்லிவிட்டு நெட்டுயிர்த்தார்.சீடருக்கு இப்போது கொஞ்சம் பயமாகவே இருந்தது; ஆனால், ஒன்றும் பேசவில்லை.


ராகவன், அந்த ஸ்வாமிஜியின் அத்தியந்த சீடர். 40 வருடங்களுக்கு முன் தபால் துறையில் சாதாரண வேலையில் இருந்தார். மும்பைக்கு அருகே ஒரு ஊருக்கு அவரை மாற்றியிருந்தனர். அப்போது அவருக்குத் திருமணம் ஆகியிருந்தது; மனைவி மதுரையில் இருந்தாள்.


ஒருமுறை மதுரைக்கு வந்துவிட்டு, தான் வேலை செய்யும் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தவர், தூக்கக் கலக்கத்தில் தான் இறங்க வேண்டிய ஊருக்கு 20 கி.மீ., முன்னால் ஏதோ பெயர் தெரியாத ஸ்டேஷனில் இறங்கி விட்டார்; ரயிலும் கிளம்பி விட்டது.
இனிமேல் அந்த ஊருக்கு அடுத்த ரயில் வர மாலை வரை ஆகும் என்பதைத் தெரிந்து கொண்ட ராகவன் அந்த ஊரில் என்ன விசேஷம் என்று விசாரிக்க, அனைவரும் இந்த ஸ்வாமிஜியின் மடத்தைக் கைகாட்டினர்.


காலை குளித்து முடித்ததும் நேராக மடத்துக்குப் போய் விட்டார் ராகவன். ஸ்வாமிஜியின் காலில் விழுந்து வணங்கினார். ராகவனை சில நிமிடங்கள் உற்றுப் பார்த்தார் ஸ்வாமிஜி.


"ஊர் தெரியாம வந்தாலும் சரியான இடத்துக்குத் தான் வந்துருக்கே!' ராகவனுக்கு ஒன்றும் புரியவில்லை.

 

"நீ திரும்பி உடனே மதுரைக்குப் போ. உனக்கு நல்ல காலம் பொறந்தாச்சு!' அப்படியே செய்தார் ராகவன். மதுரைக்கு அவர் வந்த போது அவரது மனைவி பிரசவ வேதனையில் துடித்துக் கொண்டிருந்தாள். ஆண் குழந்தை பிறந்தது. ஆடிட்டராக இருந்த ராகவனின் மைத்துனர், அவருடைய வேலையை ராஜினாமா செய்துவிட்டு அவரை சி.ஏ., படிக்கச் சொன்னார். ராகவனும் ஆடிட்டர் ஆனார்.


மூன்று குழந்தைகளைப் பெற்று, படிக்க வைத்து, திருமணமும் செய்து முடித்து விட்டு இப்போது நிம்மதியாக சென்னையில் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறார்.


அந்த ஸ்வாமிஜியையே தன் குருவாக வரித்துக் கொண்டார் ராகவன். அவர் கேட்காமலேயே குரு அருள் பாலித்ததால், அன்று முதல் குருவிடம் எதுவும் கேட்பதில்லை என்று மனதுக்குள் விரதம் பூண்டிருந்தார். எந்த பிரச்னைகள் வந்த போதும், எனக்கு இது வேண்டும் என்று கேட்கவேயில்லை ராகவன்.


ஸ்வாமிஜியாகத் தெரிந்து கொண்டு நல்ல வார்த்தை சொன்னால் கேட்டுக் கொள்வார். மாதம் ஒரு முறை ஸ்வாமிஜி எங்கு முகாமிட்டிருந்தாலும் வந்து பார்த்து ஆசி வாங்கிச் செல்வது ராகவனின் வழக்கம்.இப்போது சென்னையில் முகாமிட்டிருந்தார் ஸ்வாமிஜி.


இரண்டு நாட்கள் கழித்து ஸ்வாமிஜியைப் பார்க்க மீண்டும் வந்திருந்தார் ராகவன். சீடரைப் பார்த்து அர்த்தம் பொதிந்த புன்னகை பூத்தார் ஸ்வாமிஜி.


""என்னப்பா ஏதாவது வேணுமா? இப்படி திடீர்ன்னு வந்திருக்கே?''


""ஒரு தப்பு நடந்து போச்சு. பெரியவா என்ன மன்னிக்கணும்.''

 

திடுக்கிட்டார் சீடர். பெரியவர் முகத்தில் புன்னகை மாறவில்லை.


""நேத்து எனக்குத் தெரியாம அவ நாடி ஜோஸ்யக்காரன்கிட்ட நாடி பாத்திருக்கா. அவன் என் குழந்தைகள்ல யாரோ ஒத்தருக்கு

கண்டம். அதனால நான் எங்க குலதெய்வமான திருப்பதிக்குப் போகணும்ன்னு சொல்லிட்டானாம்.''


புன்முறுவலுடன் சொன்னார் ஸ்வாமிஜி...


""குலதெய்வத்தை எப்போ வேணும்னாலும் போய்ப் பார்க்கலாம்; தப்பில்ல. ஆனா, ஒரு ஜோஸ்யக்காரன் சொன்னாங்கறதுக்காக போகணுமா... அன்பா சேவிக்க வேண்டிய தெய்வத்தை பயத்துல நடுங்கிண்டே சேவிக்கணுமா?''


மீண்டும் ஒருமுறை பெரியவரை விழுந்து வணங்கிவிட்டுப் புறப்பட்டார் ராகவன். சீடரை நோக்கி மறுபடியும் புன்னகைத்தார் பெரியவர்.


இது நடந்து ஒரு வாரம் இருக்கும். கசங்கிய ஆடையும், கலங்கிய கண்களுமாக ஸ்வாமிஜியை பார்க்க வந்திருந்தார் ராகவன்...


""எனக்குப் பெரியவா மட்டும் தானே கதின்னு நெனச்சிட்டு இருந்தேன். இப்படி நீங்க என்னை கைவிட்டீங்களே, இது நியாயமா?''


""என்னப்பா நடந்தது?''


""வடக்கே ஆடிட்டுக்காகப் போன என் மாப்பிள்ளைய யாரோ தீவிரவாதிகள் கடத்திட்டு போய்ட்டாங்களாம். உயிருக்கே ஆபத்துன்னு பேசிக்கிறாங்க. என் பொண்ணு, அவளுக்கு இன்னும் முப்பது வயசு கூட ஆகல, "ஓ'ன்னு கதறிட்டு இருக்கா, என் பொண்டாட்டி நான் தான் இதுக்கெல்லாம் காரணம்ன்னு கத்திட்டு இருக்கா.


""நாடி ஜோஸ்யக்காரன் சொன்ன மாதிரி நான் திருப்பதிக்கு போயிருந்தா, இந்த ஆபத்து வந்திருக்காதாம். இப்படி அம்போன்னு என்ன விட்டுட்டீங்களே! நான் என்ன பாவம் பண்ணேன்...''


""...''


""பெரியவாள நம்பி நான் பட்டது எல்லாம் போதும். நான் இப்பவே அந்த நாடி ஜோஸ்யக்காரன் சொன்ன மாதிரி திருப்பதிக்குப் போய் தரிசனம் பண்ணப் போறேன். என் மாப்பிள்ளைய பத்திரமா திருப்பிக் கொடுன்னு அந்த வெங்கடாஜலபதியக் கேக்கப் போறேன்.''


படபடவென்று பொரிந்து தள்ளிவிட்டுக் கிளம்பி விட்டார் ராகவன்.


மறுநாள் அதிகாலையே தனியாக திருப்பதிக்குக் கிளம்பினார். மாலையில் தான் அவருக்குத் தரிசனம் கிடைத்தது. நல்ல கூட்டம். கர்ப்பக்கிரகத்தின் படியில் அவர் கால் வைத்த போது அவரது உடலெல்லாம் சிலிர்த்தது. கருணைக் கடலாக நின்று கொண்டிருந்த வேங்கடவனைப் பார்த்தார்.


பெருமாள், இவரைப் பார்த்துப் புன்னகைப்பது போன்ற ஒரு உணர்வு. இன்னும் கொஞ்சம் அருகே சென்றவுடன் இவரைப் பார்த்து பணிவுடன், "உனக்கு என்னப்பா வேணும்?' என்று கேட்பது போல் தோன்ற, "ஓ'வென்று கதறி விட்டார் ராகவன். தன் குருதான் இங்கே வேங்கடவனாகக் காட்சியளிக்கிறாரோ என்று தோன்றியது. அந்த சிலிர்ப்பில் அவருக்கு தன்னிலை மறந்து போயிற்று; அழுது கொண்டேயிருந்தார்.


"ஜருஹண்டி, ஜருஹண்டி' என்று காவலர் அவரை உந்தித் தள்ளியபோது தான் அவருக்கு தன்னுணர்வு வந்தது. கண்களில் நீர் பொங்க, ""வேங்கடரமணா, உன்னை நான் நிம்மதியா ரொம்ப நேரம் பாக்கணும். அந்த பாக்கியத்த எனக்குப் பிச்சை போடுப்பா; வேற எதுவும் வேண்டாம்,'' என்று வேண்டிக் கொண்டார்.


கோவிலை விட்டு வெளியே வந்த போதுதான், "ஐயோ மாப்பிள்ளைக்கு ஒன்றும் ஆகக் கூடாது என்று வேண்டிக் கொள்ளவில்லையே...' என்று அவருக்கு உரைத்தது. மனம் சிந்திக்கும் திறனையே இழந்து விட்டிருந்தது. கண்களில் நீர் வழிய இருந்த இடத்திலேயே கல்லாகச் சமைந்து போயிருந்தார் ராகவன்.


பக்கத்தில் ஒரு பெரியவர் வந்து உட்கார்ந்தார். ராகவன் அழுவதை வேடிக்கை பார்த்தவர் —


""என்ன பகவான சரியாப் பாக்க முடியலேன்னுதான் அழுதுட்டு உக்காந்திருக்கீங்களா? கூட வாங்க. தரிசனத்துக்கு ஏற்பாடு பண்றேன்!''


ஒன்றும் தோன்றாமல் அவருடன் சென்றார் ராகவன்.


அன்று இரவு அந்த பெரியவர் தயவில் ஏதோ உண்டைக்கட்டி உணவாகக் கிடைத்தது. கோவிலுக்குப் பக்கத்தில் இருந்த ஒரு கல்கட்டடத்தில் படுத்துக் கொண்டார். இந்த இளம் வயதில் அவரது ஒரே பெண் வாழ்விழந்து விடுவாளோ என்ற பயத்தில் அவருக்குத் தூக்கம் வரவில்லை.


மூன்று மணிக்குத் தான் லேசாக கண் அசந்தார். மூன்றரை மணிக்கு அவரை யாரோ எழுப்பினர். ""இன்னும் அரை மணி நேரத்துல குளிச்சித் தெளிச்சி தயாரா இருக்கணும். தரிசனத்துக்குக் கிளம்பணும்,'' இயந்திர தனமாக குளித்து விட்டு வேறு உடை மாற்றி காத்திருந்தார் ராகவன்.


அவரை அங்கே அழைத்து வந்தவர் ஓடி வந்தார்...


""நீங்க நரி முகத்துல முழிச்சிருக்கங்க. அங்கே கோஷ்டில அஞ்சு பேர் போகணும். அதுக்கு ஒரு ஆள் குறையுதாம். அந்த ஆளா நீங்க போயிடுங்க. பகவானப் பக்கத்துல இருந்து பாக்கணும்ன்னு உங்களுக்கு எழுதியிருக்கு.''


மற்ற நான்கு பேரும் எங்கிருந்தோ வந்து சேர்ந்தனர். ராகவனை அவர்களுக்கு அறிமுகப்படுத்திவிட்டு விலகிக் கொண்டார் அந்தப் பெரியவர். ஐந்து பேரும் வேக, வேகமாக கோவிலை நோக்கி நடக்கத் துவங்கிய போது காலை மணி நான்கு.
கோவிலுக்கு சிறிது தூரத்திற்கு முன் அவர்கள் நின்றனர். அப்போது எங்கிருந்தோ ஒரு கார் வந்தது. அதை எல்லாம் கவனிக்கும் மன நிலையில் இல்லை ராகவன். அவரது மனதில் ஒரு பாதியை அவரது பெண்ணின் வாழ்க்கையும், மறுபாதியை அவரது குருவும் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தனர். காரில் இருந்து இறங்கிய ஒருவர் கையில் இருந்த செல் போனில் பேசினார்.
அடுத்த ஐந்தாவது நிமிடம். மேளதாளங்கள் முழங்க, திருப்பதி தேவஸ்தானத்தில் தலைமை நிர்வாக அதிகாரி வந்து கொண்டிருந்தார். எம்பெருமானின் பல்லக்கு பரிவாரங்கள் அங்கே வந்து சேர்ந்தன. இந்த ஆரவாரத்தைக் கவனிக்கும் நிலையில் கூட இல்லை ராகவன்.


காருக்கு அருகில் சென்ற அந்த அதிகாரி, உள்ளே அமர்ந்திருந்தவரை நோக்கி பணிவாக வணங்க, உள்ளிருந்தவர் புன்னகையுடன் கீழே இறங்கினார். அவரைப் எம்பெருமானின் பல்லக்கில் வர வேண்டுமென்று அதிகாரி கேட்டுக் கொண்டார். அதை வேண்டாம் என்று மறுத்த அவர், பல்லக்கைப் பிடித்துக் கொண்டு பின்னாலேயே நடந்து வருவதாகச் சொன்னார்.


பின் அந்த கோஷ்டியோடு சென்றார் ராகவன்.


உள்ளே அந்த கோஷ்டிக்கு ராஜ மரியாதை. நேரே வேங்கடவன் சன்னிதிக்கு அழைத்துச் சென்றனர். தரிசனத்துக்காகக் காத்துக் கொண்டிருந்த பக்த கோடிகள் அந்த மனிதரை வணங்குவதைக் கூட ராகவன் கவனிக்கவில்லை.


நிமிர்ந்து பார்த்தார் ராகவன். முன்னால் வேங்கடவன், திருமலையுடையான் ஸர்வாலங்கார பூஷிதனாக அபய ஹஸ்தனாக நின்று கொண்டிருந்தான். சன்னிதியில் வேறு யாரையுமே அனுமதிக்கவில்லை.


"உனக்கு என்னப்பா வேணும்?' என்று வேங்கடவன் மீண்டும் கேட்பது போல் இருந்தது. கண்களில் நீர் வழிய கைகூப்பி அரற்றிக் கொண்டிருந்தார் ராகவன். அந்த ஐந்து பேரும் அந்த சன்னிதியிலேயே அமர்ந்து கொண்டனர். ராஜமரியாதையோடு வந்த அந்த மனிதர், குலசேகரப்படியைத் தாண்டி உள்ளே போய் வேங்கடவனுக்குப் பூஜை செய்தார்.


கண் குளிர 40 நிமிடங்கள் தரிசனம். உருகி விட்டார் ராகவன்.


பூஜை முடிந்து வெளியே வந்தனர். அவர்கள் வெளியே வந்த பின் தான் மற்ற பக்தர்களை உள்ளே அனுமதித்தனர். அவர்கள் கோவிலை விட்டு வெளியே வரும் போது அரையிருட்டாக இருந்தது, ""அண்ணா வாங்கோ. அவர ஒரு நமஸ்காரம் பண்ணிருவோம்.''


பக்கத்தில் இருந்தவர் குரல் கேட்டு அவரோடு போய் அங்கு நின்றிருந்தவரின் கால்களில் வீழ்ந்து வணங்கினார் ராகவன்.
""என்னப்பா, நீ கேட்டது கெடச்சதா?''


பழகிய குரல் கேட்டுத் திடுக்கிட்டு நிமிர்ந்தார் ராகவன். ஸ்வாமிஜி; அவருடைய குரு.


""குருகிட்டயும், பகவான்கிட்டயும் ஒண்ணுமே கேக்க வேண்டாம்ப்பா. அவாளா பாத்து உனக்கு என்ன வேணுமோ, அதத் தருவா. நீ போய் இன்னிக்கு பேப்பர் வந்திருந்தா வாங்கிண்டு மடத்துக்கு வா!''


விம்மியபடி பேப்பர் விற்கும் கடைக்கு ஓடினார் ராகவன். அப்போது தான் பேப்பர் வந்திருந்தது. முதல் பக்கத்தில் கட்டம் கட்டிப் போட்டிருந்த செய்தியைப் பார்த்தார் ராகவன்.


"கடத்தப்பட்ட சென்னை ஆடிட்டர் மீட்பு. எல்லைப் பாதுகாப்புப்படை வீரரின் தீரச் செயல்!'


ஸ்வாமி என்று பெருங்குரலில் அரற்றிய ராகவனை ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார் கடைக்காரர்.



 

 

 

02.  புத்தி வந்தது!
- அருண்வாரியார்

பாண்டிச்சேரி சட்டசபை வளாகத்திற்கு எதிரில் தான் அந்தப் பூங்கா இருந்தது. நேரம் நள்ளிரவைத் தொட்டுக் கொண்டிருந்ததால், பூங்கா வெறிச்சோடிக் கிடந்தது. காவலாளிகள் இருவர் ஒதுக்குப்புறமான இடத்தில், டம்ளர்களில் சரக்கை ஊற்றி, "ரா'வாக அடித்துக் கொண்டிருக்க, சிமென்ட் பெஞ்சில் உறக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தான் மஞ்சினி.


"ஒரேயடியாக உறங்க உறுதியானதொரு முடிவை எடுத்த பிறகும், மீண்டும் விழித்துத் தொலைக்கும் இந்த தற்காலிக உறக்கம் அவசியம் தானா?' என்று மஞ்சினியின் மனசாட்சி கேலியாகச் சிரித்தது.


மஞ்சினிக்கு உலகத்தைப் பார்க்கவே வெறுப்பாக இருந்தது. உலகத்தில் உள்ளவர்கள் ஒவ்வொருவருமே உற்சாகமாகவும், உல்லாசமாகவும் இருக்க, தான் மட்டுமே பிரச்னையோடு பிணைக்கப்பட்டிருப்பதாகத் தோன்றியது. பாழாய்ப் போன பசி வேறு வயிற்றைக் கிள்ளியது. சாப்பிட்டு இரண்டு நாட்களாகி விட்டது.


"சாகத் துணிந்தவனுக்குச் சாப்பாட்டைப் பற்றிய நினைப்பு வரலாமா? சட்டுபுட்டுன்னு செத்துத் தொலையேன்!' என்று கிண்டலடித்தது மனசாட்சி.

 

 

"இருப்பா. கொஞ்சம் பொறு...' என்று மனசாட்சியுடன் மன்றாடினான் மஞ்சினி.


"எதுக்குப்பா பொறுக்கணும்? வாழப் போறியா? சொல்லு. நான் உன் வழிக்கே வரலை. கடற்கரை காந்தி சிலைக்கு பின்னால குதிச்சு தற்கொலை பண்ணிக்கறதுன்னு முடிவெடுத்துட்டே. அதைச் செயல்படுத்த என்ன தயக்கம்? ஏன், மீனமேஷம் பார்த்துகிட்டிருக்கே?'


"அது சரி. பின்னால குந்திகிட்டு குடிச்சிட்டிருக்குற குமரவேல் யார் தெரியுமில்லே. பக்கத்து வீட்டுக்காரன். இப்ப நான் எழுந்து போனா, என்ன, ஏதுன்னு விசாரிச்சு கிட்டுப் பின்னாலேயே வந்து உயிரெடுப்பான்!'


"ஏம்பா இன்னாபா சொல்றே? நல்ல விசியம் தானே! உயிரைக்கடல் தண்ணி எடுத்தா என்ன? குமரவேல் எடுத்தா என்ன? எப்படியும் சாகத் தானே போறே?'


"செத்துடறேன்பா, செத்துடறேன். இப்பத் தான் ரெண்டு ரவுண்டு முடிச்சிருக்கானுக. இன்னும் ரெண்டு ரவுண்ட்ல

பிளாட்டாயிருவாங்க. உடனே, எந்திரிச்சுப் போய் குதிச்சிடறேன்பா. ப்ளீஸ்!'


இப்படி தற்கொலை முடிவை மஞ்சினி எடுப்பதற்கான மூலகாரணமே அண்ணி அங்கையற்கண்ணி தான்.


அண்ணி மட்டும் அப்படியொரு காரியத்தைச் செய்யாமலிருந்தால், அவனுக்கு இப்படியொரு எண்ணமே எழுந்திருக்காது.
மஞ்சினிக்கு அப்பா - அம்மா கிடையாது. அண்ணன் சம்பந்தம் தான் அப்பா; அண்ணி அங்கையற்கண்ணி தான் அம்மா.


அப்பா, அம்மா இல்லையென்று மஞ்சினியும் கவலைப்பட்டதில்லை. அண்ணனும், அண்ணியும், அம்மா, அப்பாவை விட அதிகமான அன்பைச் சொரிந்து தான் அவனை வளர்த்தனர்; படிக்க வைத்தனர்; பாசத்தைப் பொழிந்தனர்.


சம்பந்தனும், அங்கையற்கண்ணியும் பெற்ற பிள்ளைகளுக்குக் கூட அந்த வீட்டில் அவ்வளவு உரிமையும், சுதந்திரமும் கிடையாது. அவ்வளவு உரிமைகளோடும், சுதந்திரத்தோடும் இருந்தான் மஞ்சினி.


எல்லாம் மூன்று வருடங்களுக்கு முன்பு வரை.


பட்டம் பெற்றிருந்த மஞ்சினியை தான் பணிபுரிந்து கொண்டிருந்த மில் முதலாளியிடம் அழைத்துச் சென்று, தன் தம்பிக்கு மில்லில் காலியாக இருக்கும் சூப்பர்வைஸர் பணியைப் போட்டுத் தருமாறு கேட்டான் சம்பந்தம்.


மஞ்சினியை ஏற, இறங்கப் பார்த்தார் முதலாளி. சம்பந்தனையும் பார்த்தார்... "இவனா உன் தம்பி?' என்றார்.


"ஆமாம், முதலாளி...' என்றான் சம்பந்தம்.


"உனக்கும் அஞ்சாறு வருஷம் சர்வீஸ் இருக்கும்ன்னு நெனக்கிறேன். இந்த மில்லும் தொடர்ந்து நடக்கணும்ன்னு விரும்பறேன்!' என்றார் முதலாளி.


புரியாமல் முதலாளியைப் பார்த்தான் சம்பந்தம்.


"என்ன புரியலைல்ல. இவனை இங்க வேலைக்குச் சேர்த்தா, ஒரே வருஷத்துல மில்லை மூட வெச்சிருவான்யா. நீ மட்டும் இல்லே, உன்னோட வேலை பாக்குற நானூறு தொழிலாளிகளும் நடுத்தெருவுல நிக்கணும். தம்பி. சிவப்புக் கட்சி ஆளுய்யா, சிவப்புக் கட்சி ஆளு!'


"நெஜம்மாவா சொல்றீங்க?' என்று கேட்டான் சம்பந்தம், முதலாளியைப் பார்த்து.


"என்னை ஏன் கேக்குறே? உன் தம்பிகிட்டேயே கேளேன்!'


"அண்ணே! இவரு எனக்கு வேலை கொடுக்க மாட்டாரு. வாங்கண்ணே போலாம். இவங்களால் தொழிலாளிங்களோட

 உழைப்பையும், உதிரத்தையும் சுரண்டுற வர்க்கம்ணே...' என்றான் மஞ்சினி.
 

"பார்த்தியா! உம் முன்னாலேயே வர்க்கம், மூலம்ன்னு என்னென்னமோ சொல்றான். நான் மட்டும் இல்லே சம்பந்தம். இந்த

 பாண்டிச்சேரியில எந்த முதலாளியும் உன் தம்பிக்கு வேலை கொடுக்க மாட்டான். ஊருக்கே தெரிஞ்ச விஷயம், உனக்குத் தெரியலையேங்கறது தான் என் ஆதங்கம். போ! போ! போய் நீ உன் வேலையைப் பாரு. உன் தம்பியை அவன் கடைபிடிக்குற, பின்பற்றுற சித்தாந்தமே காப்பாத்தும்!'


மற்றவர்கள் தானே மஞ்சினிக்கு வேலை தரமாட்டார்கள். அவனே நாலு பேருக்கு வேலை தரும் நிலைக்குக் கொண்டு வந்துவிட்டால்?


பூரணாங்குப்பத்தில் பூர்வீகமாக இருந்த வீட்டை அடமானமாக வைத்து ஐந்து லட்ச ரூபாய் கடன் வாங்கி மஞ்சினிக்கு முதலியார் பேட்டையில் ஒரு கடை வைத்துக் கொடுத்தான் சம்பந்தம்.


ஒரே வருடம். ஒரே ஒரு வருடத்தில், "கடை'யும் காலியானது; வங்கியில் வாங்கியிருந்த கடனைத் திருப்பிக் கட்ட முடியாமல் வீடும் பறிபோனது. ஒரு வார்த்தை கூட பேச இல்லை சம்பந்தம்.


கடை காலியான பிறகு மஞ்சினிக்குக் கட்சி ஆபீஸே கதி என்று ஆனது.


காலையில் எழுந்திருப்பான். குளித்து முடித்து அண்ணி தரும் டிபனைச் சாப்பிட்டுவிட்டுக் கிளம்பி விடுவான். இரவு எப்போது திரும்புவான் என்று அவனுக்கே தெரியாது.


வெறுமனே ஊர் சுற்றி வெட்டிக்கதை பேசி, ஊர்வலம், பொதுக்கூட்டம், மாநாடு, போஸ்டர் ஒட்டுவது என்று கண்ட, கண்ட நேரத்தில் வந்து கதவைத் தட்டி சோறு போடு என்றால், ஒருநாள், இரண்டு நாள் என்றால் பொறுத்துக் கொள்ளலாம். அதுவே, வழக்கம் என்றால் யாரால் பொறுத்துக் கொள்ள முடியும்?


அன்று வீடு திரும்பிய மஞ்சினி கதவைத் தட்டிய போது, கதவு திறக்கப்படவில்லை; உள்ளே இருந்து குரல் மட்டும் வெளியே வந்தது...


"திண்ணைல பாயும், தலைகாணியும், ஒரு தட்டுல சோறும், சொம்புல தண்ணியும் வெச்சிருக்கு. அப்படியை சாப்பிட்டுட்டு, அங்கேயே படுத்துத் தூங்கு...' என்ற அண்ணி அங்கையற்கண்ணியின் குரல் மட்டும் வெளியே வந்தது...


கவலைப்படவில்லை மஞ்சினி.


வழக்கம் போல ஜாலியாக சுற்றிக் கொண்டிருந்தான் இப்படியே ஒரு வருடம் ஓடியது.எதிர்பாராத திருப்பம் மூன்று நாட்கள் முன் தான் மஞ்சினியின் வாழ்க்கையில் ஏற்பட்டது.


தோழர்களோடு, அணுசக்தி ஒப்பந்தம் குறித்து அளவளாவிவிட்டு, அமெரிக்க ஏகாதிபத்தியம் இந்தியாவில் ஊடுருவதற்கு சிஞ்சிற்றும் இடம் கொடுக்கக் கூடாது என அனல் தெறிக்கக் கலந்துரையாடி விட்டு, மஞ்சினி வீடு திரும்பிய போது நேரம் நள்ளிரவைத் தொட்டிருந்தது.


அடுத்த நாள் அதிகாலை ஆறு மணிக்கு மரக்காணத்தில் மஞ்சினி இருந்தாக வேண்டும். அங்கு அன்று நடைபெறவிருந்த ஒருநாள் அடையாள உண்ணாவிரதத்திற்கான சகல பொறுப்புக்களும் மஞ்சினியின் தலை மீது சுமத்தி வைக்கப்பட்டிருந்தது. நான்கு மணிக்குப் புறப்பட்டால் தான் சரியாக இருக்கும்.


வீட்டுத் திண்ணையில் மூடி வைக்கப்பட்டிருந்த தட்டைக் கையில் எடுத்தான் மஞ்சினி. தட்டு லேசாக இருந்தது. திறந்து பார்க்க தட்டு காலியாக இருந்தது திடுக்கிட்டான் மஞ்சினி.


இங்கே சோறு வைக்கப்பட்டிருக்கும் விஷயம் தெரிந்த எந்தப் பிச்சைக்காரனோ சோற்றைத் தின்று தட்டை காலி செய்துவிட்டுச் சென்றிருப்பதாகக் கருதிக் கொண்டான். சரி. தண்ணீரையாவது குடித்துவிட்டுப் படுப்போம் என்று சொம்பை எடுத்தான். சொம்பும் காலியாக இருந்தது.


பாயை விரித்துத் தலயணையை வைத்துப் படுத்தான். தூக்கம் வரவில்லை. பசி வயிற்றைக் கிள்ளியது.
சோறு வேளைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கும் போது உணர முடியாத பசியை, சோறு இல்லை என்ற போது மஞ்சினியால் உணர முடிந்தது.


பாக்கெட்டிலிருந்து பேப்பரையும், பேனாவையும் எடுத்தான்.


"அண்ணி! நேற்று நீங்கள் வைத்திருந்த சாப்பாட்டை யாரோ எடுத்து சாப்பிட்டு இருக்கின்றனர். இன்று முதல் வேறு ஏதாவது மாற்று ஏற்பாடு செய்யவும், மஞ்சினி!' என்று எழுதி நான்காக மடித்து தட்டில் மூடி வைத்துவிட்டு, விடிகாலை நான்கு மணிக்கு எழுந்து போனான்.


மரக்காணம் நிகழ்ச்சியை முடித்து மஞ்சினி வீடு திரும்பிய போது மணி 11.00. அதிசயமாக வாசலில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. திண்ணையில் பாயும், தலையணையும், தட்டும், சொம்பும் இருந்தன.


அவசர, அவசரமாக அகோரப் பசியோடு தட்டைத் திறந்தான் மஞ்சினி. அதில் சோறு இல்லை; நான்காக மடிக்கப்பட்ட ஒரு காகிதம் தான் இருந்தது.


திடுக்கிட்டான் மஞ்சினி. என்னடா இது. மஞ்சினிக்கு வந்த சோதனை! நாம் நேற்று வைத்து விட்டுப் போன காகிதம் தட்டில் அப்படியே இருக்கிறதே! கடிதத்தை அண்ணி பார்க்கவில்லையோ, படிக்கவில்லையோ...


சிந்தனை சிக்கலாக சிறகடிக்க, தட்டில் இருந்த காகிதத்தை எடுத்துப் பிரித்துப் பார்த்தான். அது அவன் எழுதி வைத்து விட்டு சென்ற கடிதமல்ல; அதில் இருந்தது அண்ணியின் கையெழுத்து.


அதில், "நேற்று சாப்பாட்டை யாரும் எடுத்து சாப்பிடவில்லை; நானே சாப்பாடு வைக்கவில்லை. இனி ஒவ்வொரு நாளும் இந்த தட்டில், நூறு ரூபாய் வைத்தால் தான் அடுத்த நாள் சாப்பாடு கிடைக்கும்-அண்ணி...' என்று எழுதப்பட்டிருந்தது.


நொறுங்கிப் போனான் மஞ்சினி. இனி வாழ்வதில் அர்த்தம் இல்லை என்று தீர்மானித்தான். காந்தி சிலைக்குப் பின்னால் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொள்வது என்ற உறுதியான முடிவோடு இறுதியாக பார்க் பெஞ்சில் படுத்துக் கொண்டிருந்தான். பக்கத்து வீட்டுக் குமரவேல், "பிளாட்' ஆவதற்காகக் காத்துக் கொண்டிருந்தான்.


எப்போது உறங்கினானோ தெரியாது.


மஞ்சினியை ஒருவன் உலுக்கிக் கொண்டிருந்தான். எழுந்து உட்கார்ந்து, ""யார்யா நீ? என்ன வேணும்? ஏன்யா என்னை எழுப்பினே?

'' என்று கேள்விகளை அடுக்கினான் மஞ்சினி.


""மிஸ்டர் உனக்கு ஆங்கிலம் தெரியுமா?'' என்றான் அவன் பிரெஞ்ச் மொழியில்.


""ஆங்கிலம், பிரெஞ்ச், ஜெர்மன், தமிழ் எல்லாம் தெரியும். அதுக்கு என்ன இப்போ?'' என்றான் மஞ்சினியும் பிரெஞ்ச் மொழியில் வேதனை கலந்த வெறுப்போடு.


""நன்றி. தயவு செய்து இந்த தந்தி பாரத்தை ஆங்கிலத்தில் பூர்த்தி செய்து கொடுங்கள். எனக்கு ஆங்கிலம் தெரியாது...'' என்றான் அந்த பிரெஞ்சுக்காரன் பிரெஞ்ச் மொழியில்.


அவனை ஆச்சர்யமாகப் பார்த்தான் மஞ்சினி.


சாவதற்கு முன் ஒரு நல்ல காரியத்தைத்தான் செய்து விட்டுச் செத்துப் போடுவாமே என்று எண்ணி, அவனிடமிருந்து தந்தி படிவத்தையும், பேனாவையும் வாங்கினான்.


அவன் பிரெஞ்ச் மொழியில் சொன்னதன் பொருளை உள்வாங்கி அதை அப்படியே ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து, தந்தி

 படிவத்தில் பூர்த்தி செய்து கொடுத்தான்.


படிவத்தை வாங்கிக் கொண்ட அந்த பிரெஞ்சுக்காரன் நன்றி சொல்லிவிட்டு, மஞ்சினியின் கையில் நூறு ரூபாய் நோட்டைக் கொடுத்தான்.


பரவசமானான் மஞ்சினி. தந்தி ஆபீஸ் வாசலில் அவனது நண்பர்கள் நான்கு பேர் நின்று கொண்டிருப்பதாகவும், அவர்களுக்கும் இதுபோல தந்தி படிவத்தை ஆங்கிலத்தில் பூர்த்தி செய்து கொடுக்க வருமாறும் வேண்டினான்.


மந்திரித்து விட்ட கோழி மாதிரி அந்த பிரெஞ்சுக்காரனின் பின்னால் சென்றான் மஞ்சினி.


அரைமணி நேரத்தில் அவனது கையில் ஐந்து நூறு ரூபாய் நோட்டுக்கள் சேர்ந்திருந்தன.


உற்சாகமானான் மஞ்சினி.


ச்சே! அநியாயமாக செத்துப் போக இருந்தோமே!


இனி நமது வாசம் தந்தி ஆபீஸ் வாசல் தான். நைட் டென் டு மார்னிங் சிக்ஸ் டியூட்டி. ஒரு நாளைக்கு 50 கிடைச்சாலும் லாபம் தான். 500 கிடைச்சாலும் அதிர்ஷ்டம் தான்; பொழுது விடிஞ்சதும் முதல் வேலையா அண்ணிகிட்ட இந்த 500 ரூபாயைக் கொடுத்து அஞ்சநாள் சாப்பாட்டுக்கு ஏற்பாடு பண்ணிக்கணும்.


இன்னும் யாராவது வருகின்றனரா என்று எதிர்பார்க்கத் துவங்கினான் மஞ்சினி.
 


* * *

 

*********************************

BACK NEXT

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font        |   மின்னஞ்சல்   |  | 

முதல் பக்கம்
வாசகர் கடிதம் International Edition Font Help ? Advertisment Tariff

Dinamalar Publications
Copyright 2008 www.dinamalar.com. All rights reserved. Designed and Hosted by Web Division,Dinamalar  
coordinator@dinamalar.in and webmaster@dinamalar.in