Home இதை எனது முதல் பக்கமாக்கு | வணக்கம்...வணக்கம்... யூ.எஸ்.ஏ தினமலர் வாசகரே ..! Get FontSite Map |

தினமலர்

அன்புடன் அந்தரங்கம் - அனுராதா ரமணன்

 

BACK

அன்புள்ள சகோதரி —

 

வணக்கம். என் வயது 60; என் தாய் மாமன் மகள் வயது 55. என் 25வது வயதில் தன் மகளை எனக்கு திருமணம் செய்ய நினைத்தார் என் மாமா. அவருக்கு பிறந்த நான்கு பெண்களில் இரண்டாவது இவள். என்னை திருமணம் செய்து கொள்ள விரும்பாமல், வேறு ஜாதி பையனை காதல் திருமணம் செய்து கொண்டாள் அவள். இது நடந்தது 35 ஆண்டுகளுக்கு முன். காதல் திருமணம் செய்து இரண்டு குழந்தைகள் பிறந்தன.


அரசு ஊழியரான அவளது கணவன் அவளுக்கு செய்த கொடுமைகள் சொல்லிமாளாது. கணவன், மனைவி உறவு கெட்டு, பாழாய் போய் தனித்தனியாக பிரிந்து, வாழும் சூழ்நிலை ஏற்பட்டது.

 

பிரிந்த கணவன் சின்ன வீடு செட்டப் செய்து, குழந்தை ஒன்றும் பெற்றுக் கொண்டார். நல்லா முன்னுக்கு வந்த நபர். தன் கெட்ட நடத்தையாலும், குடிப்பழக்கத்தாலும் வாழ்க்கையை கெடுத்துக் கொண்டு இறந்து போனார்.என் மாமன் மகள் தொடர்பு எனக்கு 30 ஆண்டுகளுக்கு மேலாக விட்டுப் போய் விட்டது. தன் கணவர் இறந்து போன பின், தன் கணவன் வழியாக வர வேண்டிய பொருளாதார விஷயங்களுக்காக என் உதவியை நாடினார்.


இதனால் எனக்கும், அவருக்கும் விட்டுப் போன நட்பு மலர்ந்து, மிக நெருக்கம் ஏற்பட்டு, உடலுறவு வரை சென்று உயிருக்கு உயிராய் பழகினோம். அவள் தன் மேலான உயிரை என்னிடம் ஒப்படைத்துள்ளதாய் கூறினாள்.பணவரவு கிடைக்கப் பெற்றது. மகன்கள் வேலைக்குச் சென்று வருவாய் நிலை நல்லதாக அமைந்தது. திடீரென என் உறவை துண்டித்துக் கொண்டார். இப்பொழுது என்னை பார்க்கவே விரும்பவில்லை. குழம்பில் போட்ட கருவேப்பிலையாக என்னை பயன்படுத்தி, என் மனதை கெடுத்து தூக்கமின்மையை ஏற்படுத்தி விட்டாள்.


நான் திருமணம் ஆனவன். நல்ல மனைவி உள்ளார். அவள் உறவால் மகிழ்ந்த நான் இன்று படும்பாடு மிகவும் கஷ்டமாக உள்ளது. அவள் என்னை உதாசீனம் செய்ததை எண்ணி, எண்ணி இரவு, பகல் முழுவதும் அவள் நினைப்பில் தூக்கமின்றி கஷ்டப்படுகிறேன். ஏன், எனக்கு அவள் துரோகம் செய்தாள் என்று நினைத்து, மிகவும் வேதனைப்படுகிறேன். இது எனக்கு தேவை தானா? அவளால் எனது மன நிம்மதி போயிற்று. இதை எப்படி சரி செய்வது சொல்லுங்கள் சகோதரி.

 


— இப்படிக்கு,
சகோதரன்.

 

 

அன்புள்ள சகோதரருக்கு-

 

உங்கள் கடிதம் கிடைத்தது. படித்தேன்... ஆன வயசுக்குக் கொஞ்சம் கூட அறிவே இல்லாமல் ஒரு பெண்ணிடம் மனசையும், உடம்பையும் கொடுத்து விட்டு, இப்போது அவளை நினைத்து, நினைத்து தூக்கமில்லாமல் தவிப்பதாக எழுதியிருக்கிறீர்களே... இது உங்களுக்கே நியாயமாய் படுகிறதா? இப்போது தான் மனைவி நல்லவள் என்பதும் அவளுடன் வாழ்ந்த வாழ்க்கையின் மதிப்பும் புரிகிறதா?


உங்களுடைய மன நிம்மதியை எவளோ ஒருத்தி வந்து சிதைக்கவில்லை. உங்கள் வேதனைக்கு நீங்களே தான் காரணம். இல்லையா பின்னே?


ஏதோ, மாமன் மகள், தன் கணவரின் மரணத்துக்குப் பின், வர வேண்டிய பொருளாதார விஷயங்களுக்காக உங்களை நாடினாள். நீங்கள், உறவு முறையைக் கருத்தில் கொண்டு, அவளுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து விட்டு ஒதுங்க வேண்டியது தானே... ஏன், அவள் விரித்த வலையில் விழுந்தீர்கள்?


யோசித்துப் பாருங்கள். உங்களுக்குள் அந்த, "உறவு' இருந்ததினாலேயே, அவளுக்கு வேண்டிய உதவிகள் வேகமாகக் கிடைத்தது. யாரைப் பார்க்க வேண்டுமோ பார்த்து, பேப்பரை எங்கே நகர்த்த வேண்டுமோ நகர்த்தி, "அவள் உங்களை கருவேப்பிலையாக உபயோகப்படுத்திக் கொண்டாள்!' எனப் புலம்பும் உங்களுக்கு, "ஏமாளி' பட்டம் கட்டியது அவள் இல்லை சகோதரரே... ஏமாறத் தயாராக நீங்கள் இருந்தது தான் காரணம்!


தாலிகட்டிய மனைவி, உங்களை உயிரினும் மேலாக நேசித்துக் கொண்டு, உங்களுக்காக பூஜைகள், விரதங்கள் செய்து, உங்கள் வாய்க்கும், உடம்புக்கும் ஏற்ற வகையில் சமைத்துப் போட்டு அப்பிராணியாக வீட்டில் வளைய வந்து கொண்டிருக்க-
என்றைக்கோ ஆசைப்பட்டவள் இன்றைக்கு ஆறிய பழங்கஞ்சியாக, திரிந்த பாலாக எதிரில் வந்து நின்றால், வயசு, அனுபவ ஞானம் சகலத்தையும் உதறி விட்டு அவளை உயிருக்கு உயிராக நேசிப்பதா?


இப்போதும் சொல்கிறேன்... உங்கள் மாமன் மகள் உங்களுக்கு துரோகம் புரிவதற்கு முன், நீங்கள் உங்கள் மனைவிக்கு துரோகம் புரிந்தீர்கள். அதன் பயனை இப்போது அனுபவிக்கிறீர்கள். இதை எப்படி சரி செய்வது என்று வேறு கேட்டிருக்கிறீர்கள். மனைவியைக் காதலியுங்கள். அவளை உட்கார வைத்து ஒரு காபி போட்டுத் தாருங்கள். சமையலறையில் அவள் வியர்த்து வழிய சமைத்துக் கொண்டிருக்க, ஹாலில் உட்கார்ந்து கற்பனையில் மாமன் மகளுடன் நீங்கள் சல்லாபிக்காதீர்கள். மனைவிக்கு உதவியாய் காய் நறுக்குவது, தேய்த்த பாத்திரங்களை எடுத்து அடுக்குவது, துவைத்த துணிகளை மடித்து வைப்பது, தனிமை கிடைத்தால். மனைவியின் பாதங்களை இதமாய் பிடித்து அமுக்குவது...


அவளை வெளியே அழைத்துச் சொல்வது, இரவில் அவளை அணைத்து ஒரு குழந்தை போல உறங்குவது... செய்யுங்கள். மாமன் மகளை மறுபடியும் பார்க்கவோ, பேசவோ செய்யாதீர்கள். நமக்கு உரியது எதுவோ, அதன் மீதே அன்பு செலுத்துங்கள்.

 

— இப்படிக்கு,

அனுராதா ரமணன்.

BACK

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font        | 
  மின்னஞ்சல்  |   | 



முதல் பக்கம்
வாசகர் கடிதம் International Edition Font Help ? Advertisment Tariff

Dinamalar Publications
Copyright 2008 www.dinamalar.com. All rights reserved. Designed and Hosted by Web Division,Dinamalar  
coordinator@dinamalar.in and webmaster@dinamalar.in