அதிபர் சர்தாரியை வெளியேற்ற பாக்., ராணுவ ஜெனரல்கள் சதி
நவம்பர் 04,2009,00:00 IST
வாஷிங்டன்: "பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரியை, ஜனநாயக மற்றும் அரசியல் ரீதியாக பதவியில் இருந்து வெளியேற்ற, அந்நாட்டு ராணுவ ஜெனரல்கள் சதி செய்து வருகின்றனர்' என, அமெரிக்க புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, அமெரிக்க புலனாய்வு நிறுவனத்தைச் சேர்ந்த ஸ்ட்ராட்போர் என்பவர் கூறியதாவது: பாகிஸ்தானில், தலிபான்கள் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர். சமீபகாலமாக அங்கு பயங்கரவாத தாக்குதல் அதிகரித்துள்ளது. இதைக் கட்டுப்படுத்த முடியாமல், அந்நாட்டு அரசு மிகவும் பலவீனமாக உள்ளது. அதனால், ராணுவ புரட்சி இல்லாமல், அதிபர் சர்தாரிக்கு எதிராக ராணுவத்தினரின் ஆதரவை திரட்டி, அவரே தன் பதவியை விட்டு விலகும் வகையில் செய்ய ராணுவ ஜெனரல்கள் முற்பட்டுள்ளனர். இதற்கான வேலைகளிலும் இறங்கியுள்ளனர். அவர்களின் முக்கிய நோக்கம் சர்தாரியை பதவியை விட்டு இறக்குவது; தற்போதைய அரசை கலைப்பது அல்ல. கடந்த 1985ம் ஆண்டு முதல் 1999ம் ஆண்டு வரை, நான்கு அரசுகளை பாக்., ராணுவம் கலைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு ஸ்ட்ராட்போர் கூறினார்.