PUBLISHED ON : மே 24, 2026

பி.பொன்விழி, கோவை: 'என் வீட்டுப் பணியாளர்கள், 'விசில்' சின்னத்துக்கு தான் ஓட்டு போட்டனர்...' என, முதல்வர் விஜயிடம், ம.தி.மு.க., வைகோ வெளிப்படையாக கூறி இருப்பது பற்றி...
தன்னை மதித்து, மரியாதை கொடுத்தால், தங்கத்தட்டில் வைத்துத் தாங்கும் இளகிய மனம் படைத்தவர், வைகோ. விஜயை, இளம் தலைவராக, துடிப்பு மிக்கவராக, நேரில் பார்த்ததும், வெள்ளந்தியாக, உண்மையை சந்தோஷமாக பகிர்ந்து விட்டார்!
ஏ.அப்துல்பக்கார், புதுக்கோட்டை: புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சபாநாயகர், ஜே.சி.டி.பிரபாகர், தன் நன்றி உரையில், முதல்வரை ஏகமாகப் புகழ்ந்து, 'இந்திய துணைக் கண்டத்திற்கே எதிர்காலத்தில் தலைமையேற்று, விஜய் வழிநடத்துவார்...' என்று புகழாரம் சூட்டுகிறாரே...
சபாநாயகர் செய்வது, மிகவும் தவறு. நடுநிலையுடன் செயல்பட வேண்டியது, சபாநாயகரின் முழுமுதற் கடமை!
* ம.ரங்கராஜன், மதுரை: தமிழக முதல்வர் விஜய், 'சென்ற ஆட்சியின் நிதிநிலை பற்றி, வெள்ளை அறிக்கை வெளியிடுவேன்...' என்று கூறியுள்ளது பற்றி...
வெள்ளை அறிக்கை வெளிவந்தால், கடந்த ஆட்சியின் அத்தனை, 'அதிரி புதிரி' வேலைகளும் அம்பலமாகிவிடும். அதற்கு பயந்து தான், சம்பந்தப்பட்டவர், 'பார்த்து நடந்துக்குங்க' என்பது போல், கொந்தளித்து அறிக்கை வெளியிட்டார்!
கி.பாலமுருகன், ராமநாதபுரம்: சந்தித்த முதல் தேர்தலிலேயே, விஜய் முதல்வர் ஆகிவிட்டாரே?
முதல்வர் ஆனது, மாபெரும் புரட்சி தான். ஆனால், தன்னைச் சுற்றி சரியான ஆலோசகர்களை நியமித்து, அவர்களின் ஆலோசனையுடன், எல்லா மந்திரிகளையும் சரியான முறையில் வழிநடத்தி, அடுத்த, ஐந்து ஆண்டுகளுக்கு நல்லாட்சி வழங்க வேண்டும்!
எம்.பாஸ்கர், தஞ்சாவூர்: 'முகத்தை மூடிக்கொண்டு சென்றது யார்?' என, சட்டசபையில் கேள்வி கேட்ட, தே.மு.தி.க., - எம்.எல்.ஏ., பிரேமலதா பற்றி...
சட்டசபை என்பது, அரசியல் பேசும் களமல்ல; மக்கள் பிரச்னைகளைத் தீர்க்கும் உபாயம் குறித்து பேசப்பட வேண்டிய சபை! பா.ம.க., - எம்.எல்.ஏ., சவுமியா, என்ன அழகாய், தன் கருத்துக்களை எடுத்து வைத்தார், பாருங்கள்! சம்பந்தப்பட்ட அனைவரும், சவுமியாவிடம் பாடம் கற்கலாம்!
* ரா.ராஜ்மோகன், திண்டிவனம்: புதிய அரசு பொறுப்பேற்ற கையோடு, குற்றவாளிகள், 300 பேரை, ஒரே இடத்தில் கூட்டி, 'சட்டங்கள் கடுமையாக்கப்பட்டுள்ளன; இனி ரவுடித்தனம், பொறுக்கித்தனம் செய்தால், கடுமையான நடவடிக்கை பாயும்...' என, எச்சரித்திருக்கிறாரே, திருச்சி மாவட்ட எஸ்.பி., செல்வ நாகரத்தினம்... இது வரவேற்புடையது தானே!
மிகமிக வரவேற்கத்தக்கது. கடந்த காலங்களில், 'நேற்றைய கொலைகள்' என்ற தலைப்பில் செய்தி வெளியிட வேண்டிய சூழல் இருந்தது; இனி, அந்த நிலை மாறி, 'மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்ட மக்கள்' என, செய்தி வெளியிடலாம் போலிருக்கிறது!
ஆர்.ஜெயலட்சுமி, நெல்லை: 'தினமலர் கருத்துக்கணிப்பு மட்டுமே உண்மை; த.வெ.க.,விற்கு, 34.2 சதவீதம் ஓட்டு விழுந்துள்ளது...' என்பதை, தமிழக தேர்தல் முடிவுகள் நிரூபித்துள்ளது பற்றி...
தினமலர், உண்மையின் உரைகல் என்பது, புதிதாக அரசியலில் நுழைந்திருப்பவர்களுக்கும் புரியட்டும்!
ப.த.தங்கவேலு, பண்ருட்டி: காங்கிரஸ், விஜயுடன் கூட்டணி வைத்திருந்தால், அக்கூட்டணி அறுதிப் பெரும்பான்மை பெற்றிருக்கும். காங்கிரசும், 30-40 தொகுதிகளில் ஜெயித்து இருக்கும் அல்லவா!
விஜய், கட்சியின் முதல் மாநாட்டை நடத்தியபோதே, 'கூட்டணிக்கு வருபவர்கள் வரலாம்...' என அழைப்பு விடுத்தார். மாநில காங்., தலைவர்கள் பலரும் அதற்கு செவிசாய்த்து, மேலிடத்திடம் கோரிக்கை வைத்தனர். சோனியாவும், மாநில காங்.,கின், செல்வப்பெருந்தகையும் தான் அதை தடுத்து விட்டனரே!
