PUBLISHED ON : நவ 14, 2025

சர்க்கரை நோய் என்பது தற்காலிகமானது அல்ல; நீண்ட கால
வாழ்வியல் நிலை என்பதை உணர்ந்துகொள்ளவேண்டும். சர்க்கரை அளவை கட்டுக்குள்
வைத்தக்கொண்டால், ஆரோக்கியமான வாழ்க்கை வாழமுடியும் என்கிறார் நீரிழிவு
மற்றும் நாளமில்லா சுரப்பிகள் நோய் மருத்துவர் டாக்டர் ஸ்ரீனிவாசன்.
மேலும், அவர் கூறியதாவது:
சர்க்கரை நோயை 'வாழ்வியல் மாற்றம்' என்று புரிந்துகொள்வது, நோயாளிகளுக்கு
இது ஒரு தண்டனை அல்ல, மாறாக உடல் நலனில் அதிக அக்கறை செலுத்துவதற்கான ஒரு
வாய்ப்பு என்ற நேர்மறையான மனநிலையை அளிக்கிறது.
உலக அளவில்
ஆரோக்கியம் சார்ந்த சவால்களில் சர்க்ரை நோய் தாக்கம் முக்கிய இடத்தில்
உள்ளது. அபாயகரமான புற்றுநோய் இறப்பு விகிதத்தைவிட சர்க்கரை நோயின் பாதப்
பிரச்னைகளால் ஏற்படும் இறப்பு விகிதமானது தற்போது அதிகமாக உள்ளது. இதனால்,
சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், இதயம், சிறுநீரகம், நுரையீரல்,
மூளை போன்ற உடல் உறுப்புகளுக்குக் கொடுக்கும் அதே முக்கியத்துவத்துடன்
தங்கள் கால் பாதங்களைப் பேணுவதும் மிகவும் இன்றியமையாதது.
சர்க்கரை நோயாளிகளுக்கு உண்டாகும் ஆணிக்கால்கள், பாதப் புண்கள், சிரைக்
குழாய் புண்கள், சார்கோட் சிதைவு, பூஞ்சைத் தொற்றுகள் போன்ற பாதப்
பிரச்னைகள் காரணமாகவே, 85 சதவீதம் கால்களை அகற்றும் நிலை ஏற்படுவதாகக்
கூறப்படுகிறது. ஆயினும், ஆரம்ப நிலையில் உருவாகும் சிறிய நரம்பியல் பாதப்
புண்களை உரிய நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை அளித்தால், கால்களை அகற்ற
வேண்டிய சூழலை முழுமையாகத் தவிர்த்துவிட முடியும் தவறாமல் ஆறு மாதங்களுக்கு
ஒரு முறை பாதப் பரிசோதனைகளை செய்துகொள்ளவேண்டும்.
வீட்டிலேயே
தினமும் கண்ணாடி உதவியுடன் கால்களை பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். சிறப்பு
பாதுகாப்பு காலணிகளை அணிவது, நகங்களை வளைவாக அல்லாமல் நேராக வெட்டுவது,
வெறும் கால்களுடன் தரையில் நடப்பதை தவிர்ப்பது போன்ற பழக்கவழக்கங்களை
சரியாக பின்பற்றவேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

