சென்னை : வயிற்றுக்குள் மறைத்து வைத்து தங்கம் கடத்தியவர் கைது செய்யப்பட்டார். புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் அப்துல்லா(47). இவர் இன்று காலை ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் விமானம் மூலம் கொழும்புவில் இருந்து சென்னை வந்தார். இலங்கையில் இருந்து வரும் விமானத்தில் ஒருவர் தங்கம் கடத்தி வருவதாக விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அதிகாரிகள் உஷாராகி தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதில் அவர்களுக்கு அப்துல்லா மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரது பைகளை சோதனை செய்ததில் ஒன்றும் கிடைக்கவில்லை. இதனையடுத்து அவரை தனியாக அழைத்து சென்று சோதனை நடத்தியததல் அவர் வயிற்றுக்குள் வித்தியாசமான பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவரிடம் விசாரணை செய்யப்பட்டது. விசாரணையில் அப்துல்லா, 130 கிராம் எடையுடைய 7 தங்கக்கட்டிகளை கடத்தி வந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு 20 லட்சரூபாய். இதனையடுத்து அப்துல்லாவை அதிகாரிகள் கைது செய்தனர்.