முஸ்லிம் மாணவர்களுக்கு தனி மருத்துவக் கல்லூரி வேண்டும் | Dinamalar

முஸ்லிம் மாணவர்களுக்கு தனி மருத்துவக் கல்லூரி வேண்டும்

Added : டிச 11, 2010 | கருத்துகள் (20) | |
சென்னை : ""முஸ்லிம் சமுதாய மாணவர்களுக்காக, தமிழகத்தில் மருத்துவக் கல்லூரி அமைக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநாட்டில், அதன் தலைவர் காதர் மொய்தீன் பேசினார். இந்திய யூனியன் முஸ்லிக் லீக் கட்சியின் மாநில மாநாடு, சென்னை தாம்பரத்தில் நேற்று நடந்தது. மாநாட்டில், முதல்வர் கருணாநிதிக்கு ""நானிலம் போற்றும் நல்லிணக்க

சென்னை : ""முஸ்லிம் சமுதாய மாணவர்களுக்காக, தமிழகத்தில் மருத்துவக் கல்லூரி அமைக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநாட்டில், அதன் தலைவர் காதர் மொய்தீன் பேசினார்.


இந்திய யூனியன் முஸ்லிக் லீக் கட்சியின் மாநில மாநாடு, சென்னை தாம்பரத்தில் நேற்று நடந்தது. மாநாட்டில், முதல்வர் கருணாநிதிக்கு ""நானிலம் போற்றும் நல்லிணக்க நாயகர்'' என்ற விருது வழங்கப்பட்டது. மாநாட்டில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் காதர் மொய்தீன் பேசியதாவது:தமிழகத்தில் உள்ள 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜமாத்துகள் ஒருங்கிணைந்து பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதை, அவர் நிறைவேற்றுவார் என்று நம்புகிறோம். முஸ்லிம் சமுதாயத்திற்காக தமிழகத்தில் மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும். நாங்கள் பல கோரிக்கைகளை முதல்வரிடத்தில் வைத்திருக்கிறோம். அதை நிறைவேற்ற சட்டத்திலே இடம் இருக்கிறதோ இல்லையோ. முதல்வர் இதயத்திலே எங்களுக்கு இடம் கொடுத்து, பல கோரிக்கைகளை நிறைவேற்றித் தந்துள்ளார்.இந்த ஆட்சியின் சாதனைகளை விளக்கி இந்திய யூனியன் முஸ்லிக் லீக் கட்சி, வரும் ஜனவரி முதல் தமிழகத்தில் யாத்திரை நடத்த உள்ளது. சிறையில் இருக்கும் முஸ்லிம் சமுதாய இளைஞர்களை, அவர்களின் நன்னடத்தையை பொறுத்து விடுதலை செய்ய, முதல்வர் ஆவண செய்ய வேண்டும். அவர்களால் சமுதாயத்திற்கு மீண்டும் எந்த ஒரு தீங்கும் வராது. அதற்கு நான் முழு பொறுப்பேற்றுக் கொள்கிறேன்.இவ்வாறு காதர் மொய்தீன் பேசினார்.


விருதை பெற்றுக் கொண்ட முதல்வர் கருணாநிதி பேசியதாவது:சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில் உருது, அரபு மொழியை பாதுகாக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். உருது மொழியை பாதுகாப்பது சம்பந்தமான கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.வெளிநாடு வாழ் தமிழர்களுக்காக, அகதிகள் மறுவாழ்வு இயக்குனரகத்தை, அகதிகள் மறுவாழ்வு மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் ஆணையரகம் என்று பெயர் மாற்றம் செய்ய அரசு முடிவெடுத்துள்ளது. இதைத் தொடர்ந்து, வெளிநாடு வாழ் தமிழர் நல வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த 70 ஆண்டுகாலமாக தி.மு.க., - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறவு நீடிக்கிறது. இந்த அணி என்றைக்கும் நீடிக்கும்.இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசினார்.


மாநாட்டில், மத்திய ரயில்வே இணை அமைச்சர் அகமது, துணை முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், அன்பரசன் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில நிர்வாகிகள், ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநில நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். மாநாட்டிற்கு முன்னதாக, ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்ட பேரணி நடந்தது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X