மதுரை: ""சட்டசபை தேர்தலில் காங்., தோல்விக்கு முக்கிய காரணம் சகவாச தோஷம்,'' என, காங்., முன்னாள் மாநில தலைவர் இ.வி.கே.எஸ்.இளங்கோவன் குமுறினார்.
மதுரையில் அவர் நமது நிருபருக்கு அளித்த பேட்டி: முதல்வராக பதவி ஏற்ற ஜெயலலிதாவுக்கும், எதிர் கட்சி தலைவராக பதவி ஏற்கவுள்ள விஜயகாந்த்துக்கும் வாழ்த்துக்கள். தேர்தலில் மக்கள் பணத்திற்கு சோரம் போய் விடுவரோ என பயந்த நேரத்தில், தன்னிச்சையாக ஓட்டளித்து தமிழகம் பெருமை பெற சிறப்பாக பணியாற்றினர். நடக்க இருந்த தவறுகளையும், தில்லுமுல்லுகளையும் தடுத்த பெருமை தேர்தல் கமிஷனுக்கு கிடைத்துள்ளது. தமிழகத்தின் மின் பற்றாக்குறையை போக்குவது முதல் வேலை என ஜெயலலிதா கூறியது பாராட்டுக்குரியது. தடையில்லாத மின்சாரம் இருந்தாலே பல பிரச்னைகள் இருக்காது. தொழில் வளம் பெறும். விவசாயிகள் மகிழ்ச்சி அடைவர்.
தேர்தலில் 63 நாயன்மார்களாக காங்., வேட்பாளர்கள் போட்டியினர். தற்போது பஞ்ச பூதங்களாக வெற்றி பெற்றுள்ளனர். காங்., தோல்வியை ஆராய்வது இப்போது சரியாக இருக்காது. இந்நிலை ஏற்படும் என தேர்தலுக்கு முன்பே தெரியும். இனி நடப்பவையாவது நல்லவையாக இருக்க வேண்டும் என தொண்டர்கள் எதிர்பார்க்கின்றனர். தங்கபாலு பதவி விலக மேலிடம் உத்தரவிட்டது. காங்.,க்கு புதிய தலைவரை சோனியா விரைவில் அறிவிப்பார். சட்டசபை தேர்தலில் காங்., தோல்விக்கு "சகவாச தோஷம்' தான் முக்கிய காரணம். மக்கள் லஞ்ச லாவண்யம் ஒழிக்கப்பட வேண்டும். குடும்ப அரசியல் வளர்ந்து விட கூடாது என்பதற்காக தேர்தலில் ஓட்டளித்தனர். சோனியா யாரை தலைவராக அறிவித்தாலும், அதை ஏற்று காங்கிரசை வளப்படுத்த தொண்டர்கள், தலைவர்கள் ஒன்றாக இணைந்து செயல்பட பாடுபடுவேன். இவ்வாறு கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE