நாமக்கல் : மஞ்சள் பயிரில் மகசூல் அதிகரிக்க தொழில் நுட்ப முறைகளை கடைபிடிக்க வேண்டும், என எருமப்பட்டி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அசோகன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: எருமப்பட்டி வட்டாரத்தில், மஞ்சள் பரவலாக சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. விதை மஞ்சள் விதைப்பதற்கு முன், கார்பன்டசிம் மருத்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஒரு கிராம் வீதம் கலந்து, நீரில் இருபது நிமிடம் உலர வைத்து பின் நடவு செய்ய வேண்டும். விதை மஞ்சளை துண்டாக வெட்டாமல், முழு மஞசளாக பயன்படுத்த வேண்டும். நடவின் போது, ஏக்கருக்கு உயிர் பூஞ்சானக்கொல்லியான ட்ரைக்கோடெர்மா விரிடியை இரண்டு கிலோ என்ற அளவில் தொழு எருவுடன் கலந்து ஈரம் இருக்கும் போது, வயலில் தூவ வேண்டும். மேலும், மூன்றாம் மாதம் மீண்டும் ஒரு முறை கொத்தி மண் அணைக்கும் போது, ஏக்கருக்கு ஒரு கிலோ ட்ரைக்கோடெர்மா விரிடி இடவேண்டும். இந்த தொழில் நுட்ப முறைகளை பின்பற்றினால், மஞ்சளில் தோன்றும் கிழங்கு அழுகல் நோயை தவிர்க்கலாம். மஞ்சளுக்கு அடியுரமாக, ஏக்கருக்கு தொழு உரம் நான்கு டன், நான்கு கிலோ அசோஸ்பைரில்லம், நான்கு கிலோ பாஸ்போபேக்டீரியா, 80 கிலோ வேப்பம்புண்ணாக்கு, 22 கிலோ யூரியா, 150 கிலோ சூப்பர் பாஸ்பேட், 12 கிலோ பொட்டாஷ் ஆகிய உயரங்களை இடவேண்டும். மஞ்சள் நீண்டகால பயிராததால், மேலுரமாக ஒவ்வொரு முறையும், 22 கிலோ யூரியா மற்றும் 12 கிலோ பொட்டாஷ் உரத்தை நான்கு மறை கொடுக்கலாம். நடவு செய்த 30வது, 60வது, 90வது மற்றும் 120வது நாட்களில் இடவேண்டும். நடவு செய்த, 30வது நாளில் மேலுரம் இடும்போது அதனுடன், 12 கிலோ பெர்ரஸ் சல்பேட் மற்றும் ஆறு கிலோ ஜிங்க் சல்பேட் இடுவதால், செடிகளில் தோன்றும் நுண்ணூட்டச்சத்து பற்றாக்குறையை தவிர்த்து மகசூல் அதிகரிக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.