நாகர்கோவில்: தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் காங்., தலைவர் சோனியா பற்றி அவதூறாக பேசியதாக முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம், மேல்புறம் ஒன்றிய தி.மு.க., சார்பில் களியக்காவிளையில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், தலைமை கழக பேச்சாளர் வாகை முத்தழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முத்தழகன் பேசும் போது ஜெ., பற்றியும், காங்., தலைவர் சோனியா பற்றியும் கடுமையாக விமர்சித்து பேசினார். அப்போது, கூட்டத்தில் நின்ற அ.தி.மு.க., மற்றும் காங்கிரசார் எதிர்ப்பு தெரிவித்தனர். சிலர் மேடை நோக்கி கல்வீசினர். இதனால், பொதுக்கூட்டம் தடைபட்டது. தக்கலை டி.எஸ்.பி., சுந்தர்ராஜ் தலைமையில் போலீசார், தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,வினரை கலைத்தனர்.இதுகுறித்து விளவங்கோடு தொகுதி அ.தி.மு.க., செயலர் உதயகுமார், இளைஞர் காங்., தலைவர் பிரேயர் பிரின்ஸ் கொடுத்த புகாரின் பேரில், சுரேஷ்ராஜன் மற்றும் முத்தழகன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.