கோபிசெட்டிபாளையம்:கோபி பகுதியில் பயிரிடப்பட்டுள்ள வாழையில் இலைப்புள்ளி நோய் தாக்குதல் அதிகரித்துள்ளதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கோபி சுற்று வட்டாரத்தில் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசனத்துக்குட்பட்ட , நல்லகவுண்டன்பாளையம், கோபிபாளையம், வாணிப்புத்தூர், போடிசின்னாம்பாளையம், பங்களாபுதூர் உள்ளிட்ட இடங்களில், 2,000 ஹெக்டேரில் வாழை பயிரிடப்பட்டுள்ளது. ரொபஸ்ட்ரா, கதளி, தேன் வாழை ஆகிய ரகங்கள் அதிகம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. வாழையில் இலைப்புள்ளி நோய் தாக்குதலும், சிறு இலை வைரஸ் நோய் தாக்குதலும் அதிகம் தென்படுகிறது. இலைப்புள்ளி நோய் தாக்கிய வாழையில், இலை கருகிய நிலையில் காணப்படுகிறது. படிப்படியாக இலை கருகி, வாழைக்கன்று அழிந்து விடும் நிலையில் உள்ளது. விவசாயிகள் கூறியதாவது: வாழைக்கன்றுகளை 12 முதல் 15 ரூபாய் வரை கொடுத்து வாங்கி வருகிறோம். குழி வெட்டு கூலி, நடவுக்கூலி என, ஏக்கருக்கு 50 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது. தொடர்ந்து பராமரிப்பு செலவு தனி. ஆயிரக்கணக்கில் செலவு செய்து வாழை பயிரிட்டுள்ள நிலையில், இலைப்புள்ளி நோய் பரவலாக தாக்கியுள்ளது. நடவு செய்து சில வாரங்களான வாழைக்கன்று முதல், குலை தள்ளும் நிலையில் உள்ள பெரிய மரம் வரை இலைப்புள்ளி நோய் தாக்கியுள்ளது. இலைகள் கருகி, மரமே அழிந்து விடும் நிலையில் உள்ளது. வாழை மரங்கள் அழிந்து விட்டால், ஏக்கருக்கு 80 ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்படும். இலைப்புள்ளி நோயை கட்டுப்படுத்த தோட்டக்கலை துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர் பொங்கியண்ணன் கூறியதாவது: கோபி தாலுகாவில் 2,000 ஹெக்டேரில் வாழை பயிரிடப்பட்டுள்ளது. இலைப்புள்ளி நோயை கட்டுப்படுத்த ஒரு லிட்டர் தண்ணீரில், 2.5 கிராம் மேங்கோசைட் மற்றும் ஒட்டும் திரவம் ஆகியவற்றை கலந்து, ஏக்கருக்கு 15 டேங்க் தெளிக்க வேண்டும். மீண்டும் பத்து நாள் கழித்து மருந்து அடிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் இலைப்புள்ளி நோய் கட்டுப்படும். காற்றின் மூலம் பரவும் இலைப்புள்ளி நோய் தாக்கிய இலைகளை முற்றிலும் அகற்றி எரிக்க வேண்டும். இந்நோய்க்கு காரணமான பூஞ்சை, காற்றில் பரவும் தன்மை கொண்டதால், ஒருங்கிணைந்த நோய் கட்டுப்பாடு முறையை விவசாயிகள் கையாள வேண்டும். நோய் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து வேளாண் விரிவாக்க அலுவலர்களை அணுகி தெரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.