புனே:""ஜனநாயகத்தை பொறுத்தவரை, பிரதமரின் வார்த்தை தான் இறுதியானதாக இருக்க வேண்டும். பிரதமர் மன்மோகன் சிங் அப்படித் தான் செயல்படுவார் என நினைத்தேன். ஆனால், அவர் அப்படிச் செயல்படவில்லை. அவரின் வார்த்தைக்கு இங்கு மதிப்பே இல்லை,'' என, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி கூறினார்.
ஊழலுக்கு எதிராக, நாடு முழுவதும் ரத யாத்திரை மேற்கொண்டுள்ள, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, நேற்று மகாராஷ்டிரா மாநிலம் புனேவுக்கு வந்தார்.
அங்கு, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:சுவிட்சர்லாந்தில் உள்ள வங்கிகளில், கறுப்புப் பணத்தை பதுக்கி வைத்துள்ள இந்தியர்களின் பெயர் பட்டியலை பிரான்சு அரசு, சமீபத்தில் இந்திய அரசிடம் அளித்தது. ஆனால், இந்த பட்டியலை வெளியிடுவதற்கு, மத்திய அரசு மறுத்து வருகிறது. இதன் மூலம், கறுப்புப் பண விவகாரத்தில், தீவிரமாக செயல்படுவதை அரசு விரும்பவில்லை என தெரியவருகிறது.கறுப்புப் பணத்தை பதுக்கி வைத்துள்ளவர்களின் பெயர்களை வெளியிடுவதில் என்ன தயக்கம்? இந்த விவகாரத்தை, பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடரில் எழுப்புவோம். இந்தியாவும், சுவிட்சர்லாந்தும் வரி விதிப்பு தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இந்த ஒப்பந்தம், அடுத்தாண்டு ஏப்ரலில் தான் அமலுக்கு வரும்.
கறுப்புப் பணத்தை பதுக்கி வைத்துள்ளவர்கள், அவற்றை வேறு ஒரு வங்கிக் கணக்கிற்கு மாற்றி விடுவதற்கு, அவர்களுக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதா? இந்த விவகாரத்தில், அரசின் நடவடிக்கை, சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.ஆளும் கட்சி, வாரிசு அரசியலை ஏற்றுக் கொண்டு விட்டது. நமக்கு இது அதிர்ச்சியாக இல்லாவிட்டாலும், உலக அளவில், இது விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது. ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதா, பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படும் என நம்புகிறேன். ஹசாரே பரிந்துரைத்த ஜன் லோக்பால் மசோதாவில், சில குறைகள் உள்ளன.இதைப் பற்றி ஹசாரே குழுவிடம் தெரிவித்து விட்டோம். இருந்தாலும், ஊழலுக்கு எதிராக அவர்கள் போராட்டம் நடத்துவதால், இந்த குறைகளை வெளிப்படையாக தெரிவிக்க, நாங்கள் விரும்பவில்லை. பிரதமர் பதவி வகிப்போரும், லோக்பால் மசோதா வரம்பிற்குள் கொண்டு வரப்பட வேண்டும் என்பது தான், எங்களின் நிலைப்பாடு.
ஜனநாயகத்தைப் பொறுத்தவரை, பிரதமரின் வார்த்தை தான் இறுதியானதாக இருக்க வேண்டும். மன்மோகன் சிங் அப்படித் தான் செயல்படுவார் என நினைத்தேன். ஆனால், அது நடக்கவில்லை. அவரின் வார்த்தைக்கு இங்கு மதிப்பே இல்லை. "நான் இறப்பதற்குள், ராகுலை பிரதமராக பார்த்து விட வேண்டும்' என, காங்., பொதுச் செயலர் திக் விஜய் சிங் கூறியுள்ளார். இதற்கு சிரிப்பைத் தான், பதிலாகக் கூற முடியுமே தவிர, வேறு எதையும் கூற முடியாது.இவ்வாறு அத்வானி கூறினார்.