வெடிமருந்து விற்பனையில் நடக்கும் முறைகேடுகளால், தமிழகத்தின் அமைதிக்கு பெரும் ஆபத்து காத்திருக்கிறது. மதுரையில் பா.ஜ., மூத்த தலைவர் அத்வானியை கொல்ல பயங்கரவாதிகள் பைப் வெடிகுண்டு வைத்த சம்பவத்துக்கு பிறகாவது, மத்திய அரசின் வெடிமருந்து கட்டுப்பாட்டுத்துறை, மாநில வருவாய்த்துறை மற்றும் போலீஸ் துறையினர் உஷாரடைய வேண்டும்.
ஊழல் மற்றும் கறுப்பு பணத்துக்கு எதிராக பிரசார யாத்திரை மேற்கொண்டிருக்கும் பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, கடந்த மாதம் 28ம் தேதி மதுரை - ராஜபாளையம் சாலையில் திருமங்கலம் அருகேயுள்ள ஆலம்பட்டி தரைமட்ட பாலம் வழியாக செல்லவிருந்தார். இவரது பயணத்திட்டத்தை அறிந்த பயங்கரவாதிகள், பாலத்தின் கீழ் பைப் வெடிகுண்டை வைத்து நாசவேலை செய்திருந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் குண்டு கைப்பற்றப்பட்டு, தகுந்த நேரத்தில் சதித்திட்டம் முறியடிக்கப்பட்டது.விசாரணை நடத்திய சி.பி.சி.ஐ.டி.,(சிறப்பு புலன்விசாரணைக் குழு)யினர் மதுரை, சிம்மக்கல் பகுதியைச் சேர்ந்த இஸ்மத், நெல்பேட்டையைச் சேர்ந்த அப்துல் ரகுமான், சென்னையைச் சேர்ந்த அல்டாப் உள்ளிட்டோரை கைது செய்தனர். இந்நபர்கள், சில ஆண்டுகளுக்கு முன் கர்நாடக மாநிலம், பெங்களூரில் தமிழக அதிரடிப்படை போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதி இமாம்அலியின் ஆதரவாளர்கள் என போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
அத்வானியை கொல்ல திட்டமிட்ட பயங்கரவாதிகளுக்கு வெடிமருந்துகளை சப்ளை செய்தவர்கள் யார் என்ற கோணத்திலும் சி.பி.சி.ஐ.டி., (எஸ்.ஐ.டி.,) விசாரிக்கிறது. பணத்துக்காக பயங்கரவாதிகளுக்கு வெடிமருந்துகள் விற்கப்பட்டதா அல்லது சதித்திட்டத்துக்கு உடந்தையாக இருந்து சப்ளை செய்தனரா என்ற மர்மம் நீடிக்கிறது. இதற்கிடையே, மதுரையில் நடந்த சதிச்செயல் எதிரொலியாக, தமிழகம் முழுவதும் வெடிமருந்து டீலர்கள், சப் - டீலர்களின் குடோன்களில் போலீசார், வருவாய் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். வெடிமருந்து கொள்முதல் அளவு, விற்பனை அளவு, கையிருப்பு அளவை ஆய்வு செய்தனர். ஒவ்வொரு முறையும் ஏதாவது அசம்பாவிதம் நடந்தபிறகே இதுபோன்ற ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. வழக்கமான ஆய்வுகள் முறைப்படி நடப்பதில்லை.
விழிக்காவிடில் பெரும் ஆபத்து: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான கல் குவாரிகள் உள்ளன. இங்கு உடைக்கப்படும் பாறைகள் புளூ மெட்டல் மற்றும் "டஸ்ட்'டாக (துகள்) மாற்றப்பட்டு கட்டடம் கட்டுமானம், பாலங்கள், சாலை உள்ளிட்ட பொதுப்பணிகளுக்கு சப்ளையாகின்றன. பாறைகளை உடைக்க ஜெலட்டின் வெடிமருந்து டெட்டனேட்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன. வெடிமருந்துகளை இருப்பு வைத்திருக்கவும், கையாளவும் இரண்டு, மூன்று பெயர்களில் லைசென்ஸ் பெற்றிருக்கும் கல் குவாரி அதிபர்கள், தங்களுக்கு தேவையான வெடிமருந்துகளை டீலர்களிடம் கொள்முதல் செய்கின்றனர்; இங்கு தான் முறைகேடு துவங்குகிறது.குவாரி அதிபர்களின் தேவைக்கும் அதிகமாகவும் சில நேரங்களில் வெடிமருந்துகள் சப்ளை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.வழக்கமாக குறைந்த அளவிலேயே வெடிமருந்து கொள்முதல் செய்யும் லைசென்ஸ்தாரர்களின் பெயரில் போலி ரசீதுகளை போடும் டீலர்கள், அதிகமாக வெடிமருந்து கேட்கும் நபர்களுக்கு கூடுதல் விலைக்கு விற்று விடுகின்றனர். இவ்வாறு டீலரிடம் கொள்முதல் செய்யப்படும் வெடிமருந்துகளை "இ - வெகிக்கிள்' (எக்ஸ்ப்ளோசிவ் வெகிக்கிள்) என்றழைக்கப்படும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை வசதி கொண்ட வாகனத்தில், குவாரிகளுக்கு எடுத்துச் செல்வது கிடையாது. பாதுகாப்பு விதிகளை அப்பட்டமாக மீறி கார், ஜீப், வேன்களில் எடுத்துச் செல்கின்றனர். இதனால், சாலையில் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து நேரிடும் அபாயம் உள்ளது.
தனி நபர்களுக்கு விற்பனை: லைசென்ஸ் இல்லாத நபர்களுக்கு வெடிமருந்துகளை விற்கக்கூடாது என்பது விதி.லைசென்ஸ் பெற்ற நபர்களே வாங்கிச் சென்றாலும் பாறையை உடைக்க, கிணறு வெட்ட அவர்களாகவே வெடி வைத்துவிட முடியாது; அதற்கென லைசென்ஸ் பெற்ற நபர்களும் (ஷார்ட் பயரர்) உள்ளனர். ஆனால், வெடிமருந்து டீலர்களில் சிலர் அதிக லாபத்தையே நோக்கமாக கொண்டு, லைசென்ஸ் இல்லாதவர்களுக்கும் வெடிமருந்துகளை விற்று விடுகின்றனர். இதற்கான "கணக்கை' நேர்செய்ய, லைசென்ஸ் பெற்றவர்களின் பெயரில் போலி விற்பனை ரசீது போட்டு விடுகின்றனர்.
பயங்கரவாதிகளுக்கு வசதி: டீலர்களின் முறைகேடான செயல்கள் பயங்கரவாத செயல்களுக்கு பெரிதும் துணை போகின்றன. சதித்திட்டத்தை அரங்கேற்ற திட்டமிடும் உள்ளூர் பயங்கரவாதிகள், கூடுதல் தொகையை கொடுத்து எளிதாக வெடிமருந்துகளை வாங்கிவிடுகின்றனர். அதன்பின், எங்காவது ஓரிடத்தில் குண்டுவெடிப்பு அல்லது சதிச் செயல்கள் நடந்ததும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தூக்கம் கலைந்து எழுகின்றனர். கோவை நகரில் கடந்த 1998, பிப்., 14ல் நடந்த தொடர் குண்டுவெடிப்புக்கு கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து பல ஆயிரம் கிலோ வெடிமருந்துகள் கோவைக்கு கடத்தி வரப்பட்டு பைப் வெடிகுண்டு, டீ கேன் குண்டு, பார்சல் குண்டுகள் தயாரிக்கப்பட்டன. குண்டு வெடிப்பு நிகழ்ந்ததும் மைசூரு வெடிமருந்து வியாபாரி ரியாசுர் ரகுமான் கைது செய்யப்பட்டார்; வெடிமருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகளின் முறையாக அவரது குடோனில் ஆய்வு நடத்தியிருந்தால் குண்டு வெடிப்பு சதியை தடுத்திருக்க முடியும். அலட்சியத்தால் குண்டுவெடிப்பு நிகழ்ந்து 58 பேர் உயிரிழந்து, 250 பேர் காயமடைந்தனர்.இச்சம்பவத்தை தொடர்ந்து அடுத்த சதிச்செயலாக மதுரையில் அத்வானிக்கு குறி வைக்கப்பட்டது. இதில், 7 கிலோ ஜெலட்டின், டெட்டேனேட்டர்கள் பயன்படுத்தப்பட்டன. இச்சம்பவம், லைசென்ஸ் பெறாத தனி நபர்களுக்கும் வெடிமருந்துகள் தாராளமாக சப்ளையாவதை உறுதிப்படுத்தியுள்ளது. இதன்பிறகாவது, வெடிமருந்து கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் உஷாரடைந்து தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்பை பலப்படுத்த வேண்டும். இல்லாவிடில், தமிழகத்தில், பயங்கரவாத செயல்கள் மீண்டும் தலைதூக்கும்.
வெடிமருந்து முறைகேடுகள் குறித்து, ஓய்வு பெற்ற கூடுதல் டி.ஜி.பி., ஒருவர் கூறியதாவது:டீலர்களின் வெடிமருந்து குடோன்களை அவ்வப்போது ஆய்வு செய்து, பாதுகாப்பு விதிகளை அமல்படுத்தும் அதிகாரம் வெடிமருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள், தாசில்தார் அந்தஸ்துக்கும் குறையாக வருவாய் அதிகாரிகள், டி.எஸ். பி.,கள், ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர்களுக்கு உண்டு. இவர்கள், வெடிமருந் து குடோ ன்களில் குறி த்த கால இடை வெளியில் சோத னை நட த்த வே ண்டும். டீலர்களில் பலரும் "நெ.2 பிசினஸ்' (முறைகேடான விற்பனை) செய்ய வாய்ப்பிருக்கிறது. அதிகாரிகள் சோதனை நடத்தும்போது வெடிமருந்து சட்டத்தின்படி வரையறுக்கப்பட்ட அளவில் மட்டுமே வெடிமருந்துகள் அந்த குடோனில் கையாளப்படுகிறதா, கூடுதலாக இருப்பு வைக்கப்பட்டுள்ளதா, போலி ரசீது புத்தகங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதா, வெடிமருந்து இருப்பு வைக்கப்பட்டிருக்கும் "மெகஸின்'களில் கூடுதல் எண்ணிக்கையில் வெடிமருந்துகள் வைக்கப்பட்டுள்ளதா, கடந்த காலங்களில் எவ்வளவு வெடிமருந்துகள் விற்பனையாகியுள்ளன, தற்போது விற்பனை அதிகரித்திருந்தால் அதற்கான காரணம் என்ன, என்று பல கோணங்களிலும் ஆராய வேண்டும். லைசென்ஸ் பெற்ற நபர்களின் பெயரில் போலி ரசீதுகளை போட்டு விற்பனை செய்யவும் வாய்ப்புள்ளதால், சம்பந்தப்பட்ட லைசென்ஸ்தாரர்களிடமும் நேரடியாக விசாரிக்க வேண்டும்.
முறைகேடு நடந்திருந்தால் வெடிமருந்து கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பி, "டீலர்ஷிப்' லைசென்சை ரத்து செய்ய பரிந்துரைக்க வேணடும்.அப்போதுதான், பயங்கரவாதிகளுக்கு வெடிமருந்து சப்ளையாகாமல் தடுக்க முடியும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக இதுபோன்ற முறையான சோதனைகள் பெரும்பாலான இடங்களில் நடப்பதில்லை. இதன் காரணமாக, சதிச்செயல் நடப்பதற்கான வாய்ப்புகள் உருவாகின்றன. மதுரையில் பா.ஜ., தலைவர் அத்வானியை குறிவைத்து, பாலத்தின் கீழ் குண்டு வைக்கப்பட்ட பின்னணியிலும், வெடிமருந்து டீலரின் முறைகேடு இருக்க வாய்ப்புள்ளது. இச்சதிச்செயலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு வெடிமருந்து சப்ளை செய்த டீலர் யார், இதுபோன்ற முறைகேடு எவ்வளவு காலமாக நடந்து வந்திருக்கிறது என்பதை கண்டறிந்தால் பல தகவல்கள் வெளியாகக்கூடும்.
உள்ளூர் வெடிமருந்து டீலர்கள், தன்னிச்சையாக முறைகேட்டில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் மிக, மிக குறைவு. வெடிமருந்து தயாரிப்பு கம்பெனியில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் மெயின் டீலர்களின் துணை இருப்பதற்கான சாத்தியக்கூறுகளும் உள்ளன. காரணம், வெடிமருந்து தயாரிப்பு கம்பெனியில் இருந்து வெளியே அனுப்பப்படும் ஒவ்வொரு கிராம் வெடிமருந்துக்கும் கணக்கு விவரங்கள் பராமரிக்கப்படுகின்றன. எனவே, நாசவேலை தடுப்பு கண்காணிப்பு நடவடிக்கையை வெடிமருந்து உற்பத்தி கம்பெனிகளில் இருந்து குவாரிகளுக்கு சப்ளை செய்யும் டீலர்கள் வரை தொடர வேண்டும். தமிழகத்தில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வலுப்படுத்தும் போது, அண்டை மாநிலங்களில் இருந்து கடத்தி வரவும் வாய்ப்புள்ளது. இதனால், மாநில எல்லைச் சாலைகளில் சோதனை நடவடிக்கைகளை இடைவிடாது மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு, ஓய்வு பெற்ற கூடுதல் டி.ஜி.பி., தெரிவித்தார்.
மூட்டை மூட்டையாக பறிமுதல்: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் போலி ஆவணம் மூலமாக விற்பனை செய்யப்பட்ட வெடிமருந்துகள், போலீசாரின் சோதனையில் அடுத்தடுத்து பிடிபட்டுள்ளன.
*கடந்த 2010, ஜன.,16ல் சேலம், ஜலகண்டாபுரத்திலுள்ள தனியார் மில்லில் சோதனை நடத்திய போலீசார் 20 ஜெலட்டின், 40 எலக்ட்ரானிக் டெட்டனேடர்களை பறிமுதல் செய்து, வெங்கிடு என்பவரை கைது செய்தனர்.
*2010, மார்ச் 2ல் தர்மபுரி, பென்னாகரம், பாப்பாரபட்டியில் செல்லபாண்டி என்பவரது வீட்டில் 20 ஜெலட்டின் உள்ளிட்ட வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.
*2010, ஏப்.,5ல் நீலகிரி மாவட்டம், கூடலூர், கீழ்நாடுகானி கிராமத்திலுள்ள ஒரு வீட்டில் சோதனை நடத்திய போலீசார் 38 ஜெலட்டின், 118 டெட்டனேட்டர்கள், 110 பியூஸ் ஒயர்களை பறிமுதல் செய்து, சுப்ரமணியம் என்பவரை கைது செய்தனர்.
*2010, ஆக.,14ல் அரச்சலூரில் சோதனை நடத்திய போலீசார் மணி என்பவரது வீட்டில் இருந்து 100 ஜெலட்டின் மற்றும் டெட்டனேட்டர்களை கைப்பற்றினர்.
*2011, ஏப்.,21ல், தேனி மாவட்டம், குமுளி - கம்பம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் டவுன் பஸ்சில் 12 மூட்டைகளாக கடத்தி வரப்பட்ட 600 ஜெலட்டின்களை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, மொக்கைராஜ் என்பவர் கைது செய்யப்பட்டார். மேற்கண்ட சம்பவங்கள் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. வெடிமருந்து டீலர்களுக்கு கூடுதல் விலை கொடுத்து வெடிமருந்துகளை வாங்கிச் சென்றுள்ளனர். பாறை உடைக்க, கிணறு வெட்ட என, பல்வேறு காரணங்களை பிடிபட்டவர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், வெடிமருந்துகளை கையாள்வதற்கான லைசென்ஸ் பெறாத நபர்களுக்கு, வெடிமருந்துகளை முறைகேடாக விற்பனை செய்துள்ள சம்பவம் போலீசாரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
கூடுதல் தொகை கொடுத்தால் போதும் யாருக்கு வேண்டுமானாலும் வெடிமருந்து கிடைக்கும் என்ற வாய்ப்பை பயங்கரவாதிகள் பயன்படுத்திக்கொள்ள ஆரம்பித்தால் தமிழகத்தின் நிலை என்னாவது, என்ற அச்சம் போலீசுக்கும் உள்ளது. இதுகுறித்து டி.எஸ்.பி., ஒருவர் கூறுகையில், "லைசென்ஸ் பெறாத நபர்களுக்கு வெடிமருந்துகளை விற்பனை செய்த டீலர்கள் குறித்து முறைப்படி அறிக்கை அனுப்புகிறோம். ஆனால், முறைகேட்டில் ஈடுபட்ட டீலர்களின் லைசென்ஸ் ரத்து செய்யப்படுவதில்லை. இதுவே, முறைகேடுகள் அதிகரிக்க காரணம்' என்றார்.
-நமது சிறப்பு நிருபர்-