கோபிசெட்டிபாளையம் : கோபி சுற்று வட்டாரத்தில் வாழையில் ஊடுபயிராக பயிரிடப்பட்ட வெள்ளரி பழம் அறுவடை தீவிரமாக நடக்கிறது. பழம் ஒன்று, 10 முதல், 50 ரூபாய் வரை விற்கப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.கோபி அரக்கன்கோட்டை, தடப்பள்ளி, கீழ்பவானி, குண்டேரிப்பள்ளம் அணை பாசனப் பகுதிகளான பங்களாப்புதூர், காசிபாளையம், கொங்கர்பாளையம், வாணிப்புத்தூர், விநோபா நகர், பெரும்பள்ளம் அணை பாசனப் பகுதிகளான கெம்ப நாயக்கன்பாளையம், பெரியகொடிவேரி, டி.ஜி.புதூர் பகுதிகளில் நெல், கரும்பு, வாழை மற்றும் மஞ்சள் பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது.விவசாய கூலியாட்கள் பற்றாக்குறை காரணமாக தோட்டக்கலை பயிர்களான காய்கறிகளை விவசாயிகள் பயிரிடுகின்றனர். கத்தரிக்காய், வெண்டை, தக்காளி, பாகற்காய், காலிஃபிளவர், புடலை, சின்ன வெங்காயம், பூசணி வகைகள், முள்ளங்கி, கீரை வகைகள் மற்றும் பூ வகைகள் வகைகளை அறுவடை செய்ய கூலியாட்கள் தேவை இல்லை. குடும்ப உறுப்பினர்களே பெரும்பாலும் அறுவடை செய்கின்றனர். தோட்டக்கலை பயிர்கள் மூலம் அதிகளவில் லாபமும் கிடைக்கிறது.கோபி, நம்பியூர் மற்றும் டி.என்.பாளையம், கள்ளிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஃபிப்ரவரி மாத இறுதியில் வாழை, மஞ்சளில் ஊடு பயிராக வெள்ளரி செடி பயிரிடப்பட்டது. 90 நாட்கள் பயிரான செண்டு வெள்ளரி, நன்கு விளைச்சலாகி மும்முரமாக அறுவடை நடக்கிறது. கோவை, அவினாசி, ஈரோடு உள்ளிட்ட பகுதிக்கு அதிகளவில் அனுப்பப்படுகிறது. வெள்ளரி பழம் ஒன்று, 10 முதல், 50 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.விவசாயிகள் கூறியதாவது:பெண்களுக்கு, 150 முதல், 200 ரூபாய் வரை கூலி கொடுத்தால் கூட வேலைக்கு வரத் தயங்குகின்றனர். பல ஆண்டுகளாக விவசாய கூலி செய்யும் நபர்கள் மட்டுமே பணிபுரிகின்றனர். இளைய தலைமுறையினர் விவசாயப் பணிக்கு வருவதில்லை. விவசாய கூலியாட்கள் பற்றாக்குறையால், தோட்டக்கலை பயிர்களான காய்கறி மற்றும் பூ வகைக்கு மாறி உள்ளோம்.வெள்ளரி சாகுபடிக்கு ஏக்கருக்கு, 15 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது. தினசரி, 200 முதல், 500 பழம் விளைச்சலாகிறது. ஒரு பழம், 10 முதல், 50 ரூபாய் வரை விற்பனை செய்கிறோம். கோபியில் இருந்து கோவை, அவினாசி, ஈரோடு உள்ளிட்ட பகுதிக்கு அனுப்புகிறோம். ஏக்கருக்கு ஒரு கிலோ விதை பயன்படுத்தலாம்.அக்னி வெயில் அதிகமாக உள்ளதால் ஜூஸ் தயாரிக்க அதிகளவில் வெள்ளரி பயன்படுகிறது. வாழையில் ஊடுபயிராக பயிரிட்டுள்ளதால், விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.