சென்னை : இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, எழும்பூரில் உள்ள அந்நாட்டு வங்கியைச் சூறையாடிய மர்ம நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர். நேற்று மதியம், 1:45 மணிக்கு, மூன்று ஆட்டோக்களில், 10க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் வங்கிக்கு வந்தனர். "ராஜபக்ஷேவை இந்தியாவுக்குள் அனுமதிக்காதே' என, கோஷம் எழுப்பியபடி, அங்கு காவலுக்கு இருந்த ஆயுதப்படை காவலர் முத்தையாவை தள்ளிவிட்டு, உருட்டுக் கட்டைகளுடன் உள்ளே புகுந்த மர்ம நபர்கள், கண்ணாடிகள் மற்றும் அங்கிருந்த கம்ப்யூட்டர்களை அடித்து நொறுக்கினர். இதை தடுக்க முயன்ற வங்கி ஊழியர்கள், ஜெகன், 25, மரியராஜேஷ், 25, இருவரையும் தாக்கினர். இதில், படுகாயம் அடைந்த அவர்கள், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்த புகாரின் பேரில், எழும்பூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். இதேபோல், ராஜபக்ஷே வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தி.நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான கோவிலை முற்றுகையிட முயன்ற, தமிழர் எழுச்சி இயக்கத்தினர், 15 பேரை, போலீசார் கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE