வரலாறு
பாணாசுரன் என்ற அசுரனை அழிப்பதற்காக பார்வதி பராசக்தியாக அவதாரம் எடுத்தாள். பூமியில் பராசக்தியாக பிறந்த பார்வதிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமணம் நள்ளிரவில் நிச்சயிக்கப்பட்டது. சிவபெருமான் பராசக்தியை திருமணம் செய்து கொள்வதற்காக புறப்பட்டார்.
திருமணம் நடந்தால் பாணாசுரனை அழிப்பதில் சிக்கல் ஏற்படும் என்பதால் நாரதர் சேவலாக உருவெடுத்து கூவினார். விடிந்து விட்டதாக நினைத்த சிவபெருமான் பாதி வழியிலேயே சுசீந்திரத்திற்கு திரும்பினார். திருமணத்திற்காக காத்திருந்த பராசக்தி இதனால் கோபமடைந்தார். திருமண வைபவங்கள் ரத்து செய்யப்பட்டது. பின்னர் பராசக்தி பாணாசுரனின் தீய சக்திகளோடு போர்புரிய துவங்கினார். மேலும் பாணாசுரன் பராசக்தியை தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தினான். இதில் நடந்த போரில் பாணாசுரனை பராசக்தி வதம் செய்தாள். பின்னர் திருமணமே செய்து கொள்ளாமல் இருந்ததால் கன்னியாகுமரி என்ற பெயர் வந்தது.
அரபிக்கடல், வங்கக்கடல், இந்திய பெருங்கடல் கலக்கும் முக்கடல் சங்கமமாகும் கடற்கரையில் அமைந்துள்ள கன்னியாகுமரி அம்மனின் பெயராலேயே கன்னியாகுமரி என்ற பெயர் வந்தது. கன்னியாகுமரி பாரம்பரிய வைத்தியங்களான சித்தவைத்தியம், ஆயுர்வேதம், வர்மக்கலைக்கு பெயர் போனதாகும்.
கன்னியாகுமரி கலை மற்றும் பக்திக்கான சிறந்த இடமாக கருதப்படுகிறது. மேலும் வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகவும் கருதப்படுகிறது. கன்னியாகுமரி, சேர, சோழ, பாண்டிய மற்றும் நாயக்க மன்னர்களின் ஆட்சியின் கீழ் இருந்துள்ளது. இங்குள்ள கோயில்கள் மன்னர்களால் கட்டப்பட்டதாகும்.
பின்னர் கன்னியாகுமரி வேணாட்டின் ஒரு பகுதியாக பத்மநாபபுரத்தை தலைமையகமாக கொண்டு செயல்பட்டது. 1949ம் ஆண்டு கன்னியாகுமரி திருவாங்கூர்-கொச்சி மாநிலத்தில் சேர்க்கப்பட்டது. இந்த நேரத்தில் கன்னியாகுமரியை தமிழகத்துடன் சேர்க்க கோரி நேசமணி தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டது. 1956ம் ஆண்டு மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது கன்னியாகுமரி தமிழகத்துடன் இணைக்கப்பட்டது. தென்னிந்தியாவில் கி.பி.52ல் 12 அப்போஸ்தலர்களில் ஒருவரான செயின்ட் தாமஸ் வந்த பின்னர் தான் கிறிஸ்தவ மதம் பரவ துவங்கியது. 16ம் நூற்றாண்டில் இங்கு வந்த ஐரோப்பிய மத போதகர்கள் கிறிஸ்தவ மதத்தை பரப்பினார்கள். செயின்ட் பிரான்சிஸ் சேவியர் இவர்களில் முக்கியமானவர் ஆவார்.
கன்னியாகுமரி கடலில் சூரியோதயம் மிக பிரசித்தி பெற்றதாகும். இந்தியாவிலேயே சூரியோதயம் மற்றும் சூரிய அஸ்தமனத்தை பார்க்கக்கூடிய இடம் இது மட்டுமே. சித்ராபவுர்ணமி அன்று சூரிய அஸ்தமனம் மற்றும் முழு நிலா தோன்றுவதை ஒருங்கே காணலாம்.
இட அமைப்பு : கன்னியாகுமரி கடல்மட்டத்தில் இருந்து சராசரி உயரத்தில் உள்ளது. இதன் கிழக்கு மற்றும் வடக்கு பகுதியில் திருநெல்வேலி மாவட்டமும், மேற்கு மற்றும் வடமேற்கு பகுதியில் கேரளாவும் உள்ளன.
போக்குவரத்து வசதி : எல்லா நகரங்களில் இருந்தும் கன்னியாகுமரிக்கு பஸ் மற்றும் ரயில் வசதி உள்ளது.
அருகிலுள்ள விமான நிலையம் : திருவனந்தபுரம் (கன்னியாகுமரியில் இருந்து 85 கி.மீ தொலைவில்)
நாகர்கோவில்:
கன்னியாகுமரியிலிருந்து 19 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. மாவட்டத்தின் தலைநகராகவும் இருக்கிறது.இங்குள்ள நாகராஜா கோவில் பார்க்கத்தக்கது. இதன் வாயிலின் முகப்பு சீன முறையில் அமைந்த விகாரங்கள் பெளத்த பாணியைக் காண்பிக்கிறது. இக்கோயிலிலுள்ள தூண்களில் சமண தீர்த்தங்கர்களான மகாவீரர், பார்சுவநாதரின் உருவங்களைக் காணலாம். நாகராஜாவே முக்கிய கடவுள். இக்கோவில் முற்காலத்தில் சமணக் கோயிலாக இருந்திருக்கும் என்பது அறிஞர்கள் முடிவு. நாகர்கோவில் நகராட்சி 1900 ஆம் ஆண்டளவில் ஏற்பட்டது. இந்நகராட்சியின் பகுதிகள் வடசேரி, வடிவீஸ்வரம், கோட்டாறு, ஒழுகினசேரி ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது. பல கல்வி நிலையங்கள் மருத்துவமனை, போக்குவரத்திற்கும் மையமாக இருக்கின்றது. மாவட்டத் தலைநகரானதால் தொழில், வணிக நிலையமாகவும் விளங்கி வருகிறது.