நாம் செய்யும் செயல்கள் அனைத்தையும், கடவுள் எப்போதும் கவனித்துக் கொண்டிருக்கிறார். தன்னை ஒருவரும் பார்க்கவில்லை என்று நினைத்து மறைவில் செய்யும் பாவங்களைச் செய்பவர்கள் அவரது கொடிய தண்டனையில் இருந்து தப்ப முடியாது. அறிஞனாக இருப்பவன் அறியாதவர்களைக் கண்டு ஏளனம் செய்வது கூடாது. பிறரை மதிப்புக்குறைவாக நினைப்பவன் ஒருநாளும் நல்ல அறிஞனாக இருக்க முடியாது. கடவுளை துன்பம் வந்த போது மட்டும் நினைப்பதும் பின்பு மறந்து விடுவதும் பலரது வழக்கமாக உள்ளது. விடாப்பிடியாக ஒவ்வொரு நாளும் கடவுள் வழிபாடு செய்வதை அன்றாடக் கடமையாக கொள்ளுங்கள். நிச்சயம் அவன் அருளுக்கு பாத்திரமாவீர்கள். தன்னைப் போல பிறரையும் நேசிப்பவனே நல்ல மனிதன். பிறரை வெறுப்பவனை தெய்வமும் வெறுத்து விடும். அன்பிருக்கும் இடத்தில் மட்டுமே ஆண்டவன் குடிகொள்கிறான். மனத்தூய்மை பெற நினைப்பவன் தொண்டு செய்து வாழ்வதில் தன்னை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். தொண்டினால் மனம் பக்குவமும், தூய்மையும் பெறுகிறது.