* வாழ்க்கையில் யார் ஒழுங்குமுறைகளைக் கடைபிடிக்கிறார்களோ அவர்கள் தான் வெற்றியைத் தழுவுகிறார்கள். ஒழுக்கமில்லையெனில் வெற்றி பெறுவது சாத்தியமில்லை. உயர்ந்த குணங்களை வளர்த்துக் கொண்டு, அவற்றைக் கடைபிடித்து வாழ வேண்டுமென்று ஒவ்வொருவரும் எண்ணத் தொடங்கினால் போதும். இவ்வுலகில் உள்ள பிரச்னைகள் அனைத்திற்கும் தீர்வு கண்டுவிடலாம். இது மிகவும் அவசியமான ஒன்று. ஆனால், பிரச்னைகளுடன் வாழ்ந்தே பழக்கப்பட்டுள்ள நாம், பிரச்னைகள் எதுவுமே இல்லையென்றால் பயந்து போகிறோம். "இனி நான் என்ன செய்வேன்' என்று கவலைப்படத் தொடங்கி விடுகிறோம்.
* நாம் ஆற்ற வேண்டிய கடமைகள் எளிமையானவையாக, தினசரி செய்ய வேண்டியனவாக இருக்கலாம். அல்லது மற்றவர்களுக்காக நாம் செய்ய வேண்டியனவாக இருக்கலாம். அவை எத்தகையனவையாக இருப்பினும், அவற்றை செய்வதில் உறுதியுடன் இருக்குமாறு வேதங்கள் நமக்குக் கூறுகின்றன.
* மற்றவர்கள் எதைச் செய்கிறார்கள் அல்லது செய்யாமல் இருக்கிறார்கள் என்று ஆராய முற்படாதீர்கள். உங்களுடைய கடமைகளை முறையாகக் செய்வதில் மட்டும் கவனம் செலுத்துங்கள். நம் கடமைகளைச் செய்யும் பொழுது, மற்றவர் தம் கடமைகளைச் சரிவர செய்கிறாரா இல்லையா என்பது பற்றி நாம் கவலைப்படக் கூடாது. அதேபோல் கடமைகளைச் செய்வதில், சொந்த விருப்பு வெறுப்பு இருக்கக்கூடாது.
* ஒரு குறிப்பிட்ட வேலையை நாம் செய்யும் பொழுது அதைச் செய்வது நமது கடமை என்ற மனப்பாங்குடன் செய்யவேண்டும். நம்முடைய கடமைகளை எதற்காகவும் விட்டுக் கொடுக்காமல் செய்ய வேண்டும். வீட்டிலோ அல்லது
வெளியிலோ நமக்கென்று விதிக்கப் பட்டுள்ள கடமைகளை நாம் உறுதியுடன் செய்ய வேண்டும். மேலும் இச்சையினால் தூண்டப்பட்ட செயல்களை நாளடைவில் சிறிது சிறிதாகக் குறைத்துக் கொள்ள வேண்டும்.
-தேஜோமயானந்தர்