சகலகலாவல்லி மாலையை படித்தால் கல்வி வளம் பெருகும்.
வெண்டாமரைக்கன்றி நின்பதந் தாங்கவென் வெள்ளையுள்ளத்
தண்டா மரைக்குந் தகாது கொலோ சகமேழும் அளித்து
உண்டா னுறங்க ஒழித்தான் பித்தாக உண்டாக்கும் வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே! சகலகலாவல்லியே!
நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும்
பாடும் பணியிற் பணித்தருள்வாய் பங்கயா சனத்திற்
கூடும் பசும்பொற் கொடியே! கனதனக் குன்று மைம்பாற்
காடும் சுமக்கும் கரும்பே! சகலகலாவல்லியே!
அளிக்கும் செந்தமிழ்த் தெள்ளமு தார்ந்துன் னருட்கடலில்
குளிக்கும் படிக்கென்று கூடுங் கொலோ உளம் கொண்டு தெள்ளித்
தெளிக்கும் பனுவல் புலவோர் கவிமழை சிந்தக் கண்டு
களிக்கும் கலாப மயிலே! சகலகலாவல்லியே!
துாக்கும் பனுவல் துறை தோய்ந்த கல்வியும் சொற்சுவைதோய்
வாக்கும் பெருகப் பணித்தருள்வாய் வடநுாற் கடலும்
தேக்கும் செந்தமிழ்ச் செல்வமும் தொண்டர்செந் நாவினின்று
காக்கும் கருணைக் கடலே! சகலகலாவல்லியே!
பஞ்சப் பிதந்தரு செய்ய பொற்பாத பங்கேருகமென்
நெஞ்சத் தடத்தல ராததென்னே நெடுந் தாட்கமலத்
தஞ்சத் துவச முயர்த்தோன் செந்நாவு மகமும் வெள்ளைத்
தஞ்சத் தவிசொத் திருந்தாய்! சகலகலாவல்லியே!
பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொற் பனுவலும்யான்
எண்ணும் பொழுதெளி தெய்தநல் காயெழு தாமறையும்
விண்ணும் புவியும் புனலும் கனலும் வெங்காலும் அன்பர்
கண்ணும் கருத்தும் நிறைந்தாய்! சகலகலாவல்லியே!
பாட்டும் பொருளும் பொருளாற் பொருந்தும் பயனுமென்பாற்
கூட்டும்படி நின் கடைக்கண் நல்காய்; உளம் கொண்டு தொண்டர்
தீட்டும் கலைத்தமிழ்த் தீம்பால் அமுதந் தெளிக்கும் வண்ணம்
காட்டும் வெள்ளோதிமப் பேடே! சகலகலாவல்லியே!
சொல்விற் பனமும் அவதான மும்கவி சொல்லவல்ல
நல்வித்தை யுந்த தடிமை கொள்வாய் நளினாசனஞ்சேர்
செல்விக் கரிதென் றொரு காலமும் சிதையாமை நல்கும்
கல்விப் பெருஞ் செல்வப் பேறே! சகலகலாவல்லியே!
சொற்கும் பொருட்கும் உயிராமெய்ஞ் ஞானத்தின் தோற்றமென்ன
நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்நிலந் தோய்புழைக்கை
நற்குஞ் சரத்தின் பிடியோடு அரசன்ன நாணநடை
கற்கும் பதாம் புயத்தாளே! சகலகலாவல்லியே!
மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னருமென்
பண்கண்ட அளவிற் பணியச்செய் வாய்படைப் போன் முதலாம்
விண்கண்ட தெய்வம் பல்கோடி உண்டேனும் விளம்பலுன் போல்
கண்கண்ட தெய்வம் உளதோ சகலகலாவல்லியே!