திருவனந்தபுரம் கரமனையில் சத்தியவாகீஸ்வரர் கோயில் உள்ளது. இங்குள்ள கோமதியம்மனுக்கு வஸ்திரம் சாத்தி அரளிமாலை சாத்தினால் நீண்ட கால நோய் நீங்குவதோடு ஆரோக்கியமுடன் வாழலாம். கோயிலுக்கு காணிக்கையாக பக்தர்கள் தரும் அரிசி அல்லது நெல் அன்னதானம் செய்யப்படுகிறது. இதனால் சத்தியவாகீஸ்வரரை அன்னதான சிவன் என அழைக்கின்றனர்.
அனந்தன் காட்டிலுள்ள ஆற்றங்கரையில் கரமகரிஷி என்பவர் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். இந்த ஆறு மகரிஷியின் பெயரால் 'கரமனை' எனப்பட்டது. பிற்காலத்தில் மழை இல்லாமல் ஆறு வறண்டது. அப்போது அங்கு சிவலிங்கத்தை பூஜித்த அர்ச்சகரின் கனவில் தோன்றி, ''சிவலிங்கம் உக்கிரத்துடன் இருப்பதால், அருகில் அம்மன் சிலையை பிரதிஷ்டை செய்ய வேண்டும். அதற்கான சிலை மதுரை மீனாட்சியம்மன் கோயில் பொற்றாமரை குளத்தில் மூழ்கி கிடக்கிறது. அதை பிரதிஷ்டை செய்'' என சிவன் தெரிவித்தார்.
மன்னரிடம் கனவு குறித்து அர்ச்சகர் தெரிவிக்க, மதுரையில் இருந்து அம்மன் சிலை வரவழைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதையடுத்து மழை பெய்து ஆற்றில் வெள்ளம் பெருகியது. இங்கு சிவனுக்கு சத்தியவாகீஸ்வரர் என்றும், தெற்கு நோக்கி பிரதிஷ்டை செய்த அம்மனுக்கு 'கோமதி' என பெயரிட்டு வழிபட்டனர்.
தை மாத திருவிழாவின் போது பக்தர்கள் விருப்பம் நிறைவேற அரிசி அல்லது நெல்லை காணிக்கையாக அளிக்கின்றனர். இதற்காக பத்துப்படி(15 கிலோ) அளவு கொண்ட 'பறை' என்னும் பாத்திரம் இங்குள்ளது. அதன் மூலம் அன்ன தானம் அளிக்கப்படுகிறது. கோமதியம்மனுக்கு புரட்டாசி நவராத்திரியில் லட்சார்ச்சனை நடக்கும். கால்நடைகள் நலமுடன் இருக்க நந்தீஸ்வரருக்கு பச்சரிசியால் மாகாப்பு சாத்துகின்றனர். கணபதி, சுப்பிரமணியர், தர்மசாஸ்தா, நாகர், ஆஞ்சநேயர் சன்னதிகள் உள்ளன.
எப்படி செல்வது : திருவனந்தபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து நாகர்கோவில் ரோட்டில் 3 கி.மீ.,
விசேஷ நாள்: விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி தை பிரம்மோற்ஸவம் மகாசிவராத்திரி
நேரம்: அதிகாலை 5:15 - 11:30 மணி; மாலை 5:30 - 8:45 மணி
தொடர்புக்கு: 0471 - 234 5667
அருகிலுள்ள தலம்: திருவனந்தபுரம் அனந்த பத்மநாபசுவாமி கோயில் 7 கி.மீ.,
நேரம்: அதிகாலை 4:15 - 12:00 மணி; மாலை 5:00 - 8:00 மணி
தொடர்புக்கு: 0471 - 245 0233