தை அமாவாசையை முன்னிட்டு முன்னோர் வழிபாட்டுக்குரிய தலங்கள் இங்கு இடம் பெற்றுள்ளன.
ராமேஸ்வரம்
ராவணனை கொன்ற பாவம் போக்க ராமர் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்ட தலம் ராமேஸ்வரம். இங்கு ராமர் பூஜித்த ராமலிங்கமே மூலவராக உள்ளது. அனுமன் பிரதிஷ்டை செய்த சிவலிங்கம் 'விஸ்வ லிங்கம்' எனப்படுகிறது. காசி யாத்திரை செல்வோர் இங்குள்ள தீர்த்தங்களில் நீராடி சுவாமிக்கு கங்கையால் அபிஷேகம் செய்தால் மட்டுமே யாத்திரை சென்ற புண்ணியம் சேரும். கோயிலுக்கு எதிரிலுள்ள கடலுக்கு 'அக்னி தீர்த்தம்' எனப்பெயர். பிதுர் தர்ப்பணம் செய்வோர் அமாவாசையன்று தீர்த்தங்களில் நீராடி இங்கு வழிபடுகின்றனர்.
மதுரையில் இருந்து 200 கி.மீ., தொடர்புக்கு: 04573 - 221 223
பாபநாசம்
நவகைலாயத் தலங்களில் முதன்மையானது பாபநாசம் பாபநாசநாதர் கோயில். தாமிரபரணியின் கரையிலுள்ள இத்தலத்தில் சிவபார்வதியின் மணக்கோலத்தை அகத்தியர் தரிசித்தார். கருவறையின் பின்புறத்தில் கல்யாண சுந்தரர் எனப்படும் சிவபெருமானும், அருகில் மனைவி லோபமுத்திரையுடன் அகத்தியரும் உள்ளனர். கங்கை நதி தன்னிடம் சேரும் பாவங்களை ஆண்டுக்கு ஒருமுறை தாமிரபரணியில் நீராடி போக்குவதாக ஐதீகம். தமிழ்ப்புத்தாண்டு நாளில் இந்நிகழ்ச்சி சிறப்பாக நடக்கிறது. பாபநாச நாதர் சிற்பம் ருத்திராட்சத்தால் ஆனது என்பது சிறப்பு. அமாவாசையன்று தாமிரபரணியில் நீராடி முன்னோரை வழிபடுவது சிறப்பு.
திருநெல்வேலியில் இருந்து 50 கி.மீ., தொடர்புக்கு: 04634 - 223 268
பண்ணாரி மாரி
வனப்பகுதியில் மேய்ந்த பசு ஒன்று வேங்கை மரத்தடியில் தானாக பால் சுரந்தபடி நின்றிருந்தது. இதை அறிந்த பசுவின் உரிமையாளர் அந்த இடத்திலுள்ள புற்றின் அடியில் சுயம்பு திருமேனி ஒன்று இருப்பதைக் கண்டார். விஷயமறிந்த ஊர் மக்கள் கூடிய போது அங்கிருந்த பக்தர் ஒருவர் ஆவேசத்துடன், 'இங்கு பண்ணாரி மாரியம்மனாக நான் குடியிருக்கிறேன்'' என வாக்களித்தார். அதனடிப்படையில் அம்மன் கோயில் கட்டப்பட்டது. பிரசாதமாக புற்றுமண் தரப்படுகிறது. செவ்வாய், வெள்ளி, அமாவாசை நாட்களில் வழிபடுவது சிறப்பு.
சத்தியமங்கலத்தில் இருந்து 15 கி.மீ., ஈரோட்டில் இருந்து 77 கி.மீ., தொடர்புக்கு: 04295 - 243 366
அனுமந்தபுரம் வீரபத்திரர்
தட்சனின் யாகத்தை நிறுத்த வீரபத்திரரை அனுப்பினார் சிவபெருமான். தட்சனின் தலையை வீரபத்திரர் வெட்ட, அவனது தலை யாகத்தீயில் விழுந்தது. இதைக் கண்ட தட்சனின் தந்தையாகிய பிரம்மாவின் ஆணையால் ஆட்டின் தலை தட்சனுக்குப் பொருத்தப்பட்டது. அங்கிருந்து சினத்துடன் புறப்பட்ட வீரபத்திரர் பூலோகத்தில் அனுமந்தபுரம் வெற்றிலை தோட்டத்தில் தங்கி சாந்தம் அடைந்தார். அந்த இடத்தில் கோயில் கட்டப்பட்டது. அமாவாசையன்று தீர்த்தத்தில் நீராடி சுவாமிக்கு வெற்றிலை மாலை சாத்துகின்றனர்.
விழுப்புரம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிங்கப்பெருமாள் கோயிலில் இருந்து 10 கி.மீ., தொடர்புக்கு: 044 - 2746 4325
கன்னியாகுமரி
முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் பகவதியம்மன் கோயில் கொண்டிருக்கிறாள். பாணாசுரனின் கொடுமையால் வருந்திய தேவர்கள் அம்பிகையின் உதவியை நாடினர். குமரிப்பெண்ணால் மட்டுமே தனக்கு மரணம் நேர வேண்டும் என பிரம்மாவிடம் வரம் பெற்ற அசுரனை அழிக்க அம்பிகை, குமரியாக வடிவெடுத்து தவத்தில் ஈடுபட்டாள். தவபலத்தால் சக்கராயுதத்தை ஏவி அசுரனை வதம் செய்தாள். இங்கு அமாவாசையன்று நீராடி தர்ப்பணம் செய்வோருக்கு முன்னோரின் ஆசி கிடைக்கும்.
தொடர்புக்கு: 04652 - 246 223
பவானி சங்கமம்
ஈரோட்டுக்கு அருகிலுள்ள பவானிஆறும் காவிரியாறும் கூடும் இடமே பவானி சங்கமம். இங்கு வேதாம்பிகையுடன் சங்கமேஸ்வரர் அருள் புரிகிறார். சம்பந்தரால் பாடல் பெற்ற இதனை திருநணா, பவானி கூடல் என அழைப்பர். இலந்தை மரம் தல விருட்சமாக இருப்பதால் வதரிகாசிரமம் என்றும், காவிரி, பவானி, அமுதநதி கூடுவதால் பவானி முக்கூடல் என்றும் சொல்வர். இங்கு நீராடி சுவாமியை வழிபடுவோரை பாவம், நரகம் ஒருபோதும் தீண்டுவதில்லை.
ஈரோட்டில் இருந்து 15 கி.மீ., தொடர்புக்கு: 98432 48588, 04256 - 230 192
அச்சிறுப்பாக்கம் ஆட்சிபுரீஸ்வரர்
திரிபுர அசுரர்கள் என்னும் தாருகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி என்னும் மூவரையும் அடக்க எண்ணிய சிவபெருமான் தேரில் புறப்பட்டார். அப்போது முதற்கடவுளான விநாயகரை பூஜிக்க வேண்டும் என்ற நியதியை அவர் மறந்தார். இதையறிந்த விநாயகர் தேர்ச்சக்கரத்தின் அச்சை முறித்து சிவனைத் தடுத்தார். உண்மையை உணர்ந்த சிவனும் அக்கறையுடன் விநாயகரை தியானிக்க தேர் நகன்றது. தேரின் அச்சு முறிந்த இடமான அச்சிறுபாக்கத்தில் கோயில் அமைக்கப்பட்டது. ஆட்சிபுரீஸ்வரர் என்னும் பெயருடன் சிவன் இருக்கிறார். அமாவாசையன்று வழிபட்டால் தடையின்றி முயற்சி நிறைவேறும்.
* காஞ்சிபுரத்தில் இருந்து 70 கி.மீ.,
* செங்கல்பட்டில் இருந்து 48 கி.மீ.
தொடர்புக்கு: 98423 09534, 044 - 2752 3019
ஆனைமலை மாசாணி
ஆனைமலை அடிவாரத்தில் ஆழியாற்றின் கரையில் குறுநில மன்னரான நன்னனுக்குரிய மாமரம் ஒன்று இருந்தது. அதில் பழங்களை யாரும் பறிக்கக் கூடாது என்பது அரசரின் கட்டளை. ஒருநாள் ஆற்றில் நீராடிய கர்ப்பிணி, ஆற்றில் மிதந்த மாம்பழத்தை எடுத்து சாப்பிட்டாள். அவளுக்கு மரண தண்டனை விதித்தான் நன்னன். ஊரார் அவளுக்கு மயானத்தில் சயனகோலத்தில் உருவம் அமைத்து வழிபடத் தொடங்கினர். உப்பாற்றின் வடகரையில் மாசாணியம்மன் 17 அடி நீளத்தில் தெற்கே தலை வைத்து கபாலம், சர்ப்பம், திரிசூலம், உடுக்கை ஏந்தியிருகிறாள். நீதி தெய்வமான இவளை அமாவாசையன்று வழிபட பலன் இரட்டிப்பாகும்.
பொள்ளாச்சியில் இருந்து 14 கி.மீ., தொடர்புக்கு: 04253 - 282 337, 283 173