மலையை சிவபெருமானாகவும் நதியை அம்பாளாகவும் வழிபடுவது ஹிந்து சமய மரபு. பக்தர்கள் மலையை முக்கிய நாட்களில் வலம் வருவர். ஆனால் மலையை நதி மட்டும் சூழ்ந்துள்ள தலம் எது தெரியுமா வாங்க... கர்நாடகா மாநிலம் திருகோகர்ணத்திற்கு. இத்தலத்தில் மலையை தரிசிக்க மட்டுமே முடியும்.
சிவபெருமானை நோக்கி சிவபக்தனான ராவணன் கடும் தவம் புரிந்தார். அதன்பயனாக ஆத்ம லிங்கத்தை பெற்று இலங்கை எடுத்துச் சென்றான். இதைக்கண்ட தேவர்களின் வேண்டுகோளின்படி விநாயகர் ஒரு தந்திரம் செய்து அந்த லிங்கத்தை கீழே வைக்கச் செய்தார். அவர் மீண்டும் அதை எடுக்க முயற்சித்தும் அது முடியவில்லை.
ராவணன் எடுக்க முயற்சித்தும் அந்த லிங்கத்திருமேனியானது பசுவின் காது போல வளைந்து நீண்டது. அதனால் இத்தலத்து மூலவர் மகாபலேஸ்வரர், கோகர்ணேஸ்வரர் என பெயர் பெற்றார். அன்றிலிருந்து இத்தலம் (கோ - பசு, கர்ணம் - காது) திருக்கோகர்ணம் என அழைக்கின்றனர். சிறிய மூலவரான சுவாமி சன்னதிக்கு பின்புறம் அம்பாள் சன்னதி உள்ளது. பிரம்மன், அகத்தியர், காமதேனு, மார்க்கண்டேயர், சரஸ்வதி, வசிட்டர், நாகராஜன் போன்றோரும் வழிபாடு செய்துள்ளனர். பாரதத்திலுள்ள சக்தி பீடங்களில் இதனை கர்ண பீடம் என்பர்.
துளுவ நாடு என்கிற கர்நாடகாவில் தேவார பாடல் பெற்ற தலம் இது ஒன்றேயாகும். ஞானசம்பந்தர், அப்பர், கபிலதேவநாயனார், சேக்கிழார் போன்றோர் சுவாமியை போற்றி பாடியுள்ளனர். இங்குள்ள கோடி தீர்த்தம், கடலில் நீராடி ஒரு தரம் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுப்பது கோடி முறை புண்ணியத்தை தரும். சுவாமியை தரிசிக்க வரும் பக்தர்களே இங்கு மூலஸ்தானத்தில் மலரிட்டு பூஜை செய்யலாம் என்பது சிறப்பு. இத்தலத்தில் உள்ள கோகர்ண குகையில் 33 தீர்த்தங்கள் உள்ளன. தலமரம் வில்வம்.
எப்படி செல்வது: மங்களூருவில் இருந்து 225 கி.மீ.,
விசேஷ நாள்: நவராத்திரி, சிவராத்திரி
நேரம்: காலை 6:00 - 2:00 மணி; மாலை 5:00 - 8:00 மணி
தொடர்புக்கு: 94823 31354
அருகிலுள்ள தலம்: உடுப்பி கிருஷ்ணர் கோயில் 182 கி.மீ.,
நேரம்: அதிகாலை 5:00 - 11:00 மணி; மாலை 5:00 - 9:00 மணி
தொடர்புக்கு: 0820 - 2520 598