மனிதனாக பிறந்தவர்களுக்கு இரண்டு கடன்கள் இருக்கும். ஒன்று பிறவிக்கடன். மற்றொன்று இந்த பிறவியில் தேவைக்காக பிறரிடம் வாங்கும் பொருள்கடன். இவற்றில் இருந்து ஒரே சமயத்தில் விடுபட வேண்டுமா வாருங்கள் திருச்சேறை என்னும் சிவத்தலத்திற்கு...
சிவனடியார்களான சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவரால் பாடல் பெற்ற தலங்களை 'தேவார தலம்' என்பர். தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கோயில் இது. 158 வது தேவாரத்தலமாக விளங்கும் இத்தல சுவாமியின் திருநாமம் சாரபரமேஸ்வரர். அம்பாளின் திருநாமம் ஞானாம்பிகை. மனிதன் மேன்மை அடைய அறிவு அவசியமானது. அதனை சிவபெருமான் அருளுவதால் இவருக்கு செந்நெறியப்பர் என்னும் மற்றொரு பெயர் உண்டு.
மகாபாரதத்தில் எரியும் அரக்கு மாளிகையில் இருந்து வெளி வருவதற்கு பாண்டவர்களுக்கு யோசனை கூறியவரும், குந்திக்கு உபதேசம் செய்தவருமான தவுமிய முனிவர் மோட்சம் பெற்ற தலம். ஆண்டுதோறும் மாசி 13, 14, 15 தினத்தில் சூரிய ஒளியானது சுவாமி அம்பாள் பாதங்களில் நேரடியாகபடுகிறது. இக்கோயிலில் மட்டுமே சிவதுர்கை, வைஷ்ணவி துர்கை, விஷ்ணு துர்கை என ஒரே சன்னதியில் அருள் பாலிக்கின்றனர்.
பிரகாரத்தில் விநாயகருக்கு அருகே இருக்கும் ரிணவிமோசன சிவலிங்கத்திற்கு பதினொரு திங்கள் கிழமை வில்வ மாலை சாற்றி அர்ச்சனை செய்து வழிபட வறுமை நீங்கும். செல்வ வளம் கொழிக்கும். அஷ்டமி அன்று பைரவருக்கு வடை மாலை சாற்றி சகஸ்ர நாம அர்ச்சனை செய்து வழிபட தீவினைகளுக்கு தீர்வு, வியாபாரத்தில் முன்னேற்றம், நவக்கிரக தோஷம் நீங்குதல் போன்றவற்றிற்கு கைமேல் பலன் கிடைக்கும். சோழ மன்னர்கள் திருப்பணி செய்துள்ளனர். பிரகாரத்தில் விநாயகர், நடராஜர், தட்சிணாமூர்த்தி, பைரவர், சனிபகவான் சன்னதி உள்ளன. தலமரம் மாவிலங்கை. தீர்த்தம் மார்க்கண்டேய தீர்த்தம்.
எப்படி செல்வது: கும்பகோணத்தில் இருந்து 15 கி.மீ.,
விசேஷ நாள்: வைகாசி விசாகம், மார்கழி திருவாதிரை, மாசி சிவராத்திரி
நேரம்: காலை 7:00 - 12:00 மணி; மாலை 5:00 - 8:00 மணி
தொடர்புக்கு: 99426 37759
அருகிலுள்ள தலம்: கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோயில் 19 கி.மீ.,
நேரம்: காலை 6:00 - 12:30 மணி; மாலை 4:30 - 9:00 மணி
தொடர்புக்கு: 0435 - 242 0276