வெற்றி மீது வெற்றி வந்து...
மார்ச் 09,2023,11:10  IST

எங்கே வாழ்க்கை தொடங்கும், இது தான் பாதை, இது தான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது. எப்படியோ போகும் பாதையில் கல், மண், முள் என்ற பிரச்னைகள் இல்லாமல் இருந்தாலே போதும். நமது முகத்தில் புன்னகை நிரந்தரமாக தங்கிவிடும். இந்த புன்னகை வேண்டுமா... திருவள்ளூர் மாவட்டம் தீர்த்தீஸ்வரர் கோயிலுக்கு வாருங்கள்.
மூன்று நிலை ராஜகோபுரத்தை கடந்து கோயிலுக்குள் கால் வைத்தவுடன், பறவைகள் எழுப்பும் இனிமையான ஓசை நம்மை வரவேற்கும். பிறகு தீர்த்தீஸ்வரர் தரிசனம். அவரது சன்னதியில் நிற்கும்போது நிம்மதியை உணர முடியும். பின் சன்னதியை வலம் வந்தால் வள்ளி, தெய்வானையுடன் இருக்கும் சுப்பிரமணியரை தரிசிக்கும் பேறு கிடைக்கும். அதோடு திரிபுர சுந்தரி அம்பாளையும் சேவிக்கலாம்.
இங்கு சுவாமிக்கும், அம்பாளுக்கும் இடையே சுப்பிரமண்யர் சன்னதி உள்ளது. இந்த அமைப்பை 'சோமாஸ்கந்தர்' என்கிறோம். இப்படி மூவரையும் தரிசிப்பது விசேஷம்தானே!
இனி கோயிலின் வரலாறு பற்றி தெரிந்து கொள்வோம். மூர்த்தி, தீர்த்தம், தலம் என மூன்றிலும் சிறந்து விளங்கும் இத்தலம் புராணத்தில் தீர்த்தபுரி என்று அழைக்கப்பட்டது. மது, கைடபர் என்ற அரக்கர்கள் ரிஷிகளுக்கு இடையூறு செய்து வந்தனர். இவர்களை அழிக்க திருமாலிடம் முறையிட்டனர் ரிஷிகள். அவரும் சக்ராயுதத்தை ஏவி அரக்கர்களை வதம் செய்தார். வேதத்தில் சிறந்த அவர்களை அழித்ததால், திருமாலுக்கு தோஷம் ஏற்பட்டது. எனவே இங்கு வந்து தீர்த்தீஸ்வரரை வேண்டி தோஷம் நீங்கப்பெற்றார் திருமால். இதனால் மூலவர் 'மால்வினை தீர்த்தர்' என்று அழைக்கப்படுகிறார்.
ஒரு சமயம் காஞ்சி மஹாபெரியவர் இங்கு ஒரு மண்டலம் தங்கி, சுவாமி தரிசனம் செய்தார். அப்போது அந்த மகான் சொன்னதாவது: மகிழ மரம், மால் வினை தீர்த்தரை வலம் வந்து வணங்கினால், மரத்தில் இருந்து மகிழம் பூ உதிர்வதுபோல் பக்தர்களது வாழ்விலும் துன்பங்கள் உதிரும். பவுர்ணமி, மகம் நட்சத்திர நாளில் கோயிலின் அருகில் குளத்தில் நீராடி, தீர்த்தீஸ்வரரை தரிசனம் செய்தால் சகல தோஷம் தீரும். பங்குனி அமாவாசை முதல் மூன்று நாட்களுக்கு தீர்த்தீஸ்வரர் மீது சூரியக்கதிர் படர்கிறது. மகிழ மரம் தல விருட்சமாக உள்ளது.
வரசித்தி விநாயகர், வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியர், தர்ம சாஸ்தா, பால தண்டாயுதபாணி, நவக்கிரகம், நடராஜர், கால பைரவர் சன்னதிகளும் உண்டு. ஒருமுறை சென்று வாருங்கள். எடுக்கும் முயற்சி அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள்.

எப்படி செல்வது: திருவள்ளூர் பஸ் ஸ்டாண்டில் இருந்து 5 கி.மீ.,
விசேஷ நாள்: பவுர்ணமி பிரதோஷம், அமாவாசை மஹா சிவராத்திரி
நேரம்: காலை 6:00 - 11:30 மணி; மாலை 4:30 - 8:30 மணி
தொடர்புக்கு: 70933 21811; 95008 43667
அருகிலுள்ள தலம்: திருநின்றவூர் இருதயாலீஸ்வரர் கோயில் 17 கி.மீ.,
நேரம்: காலை 6:30 - 12:30 மணி; மாலை 4:30 - 8:30 மணி
தொடர்புக்கு: 94441 64108

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X