தாய் என்பவள் குழந்தைகள் நலனில் அக்கறை காட்டுபவள். உலகத்திற்கே தாயாகிய பராசக்தி கருணையை சொல்லித்தெரிய வேண்டுமா... தன்னிடம் சரணடைந்தவர்களின் விருப்பப்படி அவளே பீகார் மாநிலம் கைமூர் மாவட்டம் கவுராவில் கோயில் கொண்டு திகழ்கிறாள். 608 அடி உயர குன்றின் மீது ஆட்சி செய்யும் இவளது திருவிளையாடல் அற்புதமானது.
ஒருசமயம் முண்டா, சண்டா என்ற அசுரர்கள் இப்பகுதியை ஆட்சி செய்து வந்தனர். அவர்களுடைய கொடுமையை தாங்காமல் இப்பகுதியில் உள்ள அனைவரும் தேவி பார்வதியிடம் முறையிட்டனர். துர்கை வடிவம் தாங்கி அவர்களை அடக்கி ஆட்கொண்டாள். ஞானம் பெற்ற அவர்கள் ''எங்கள் நினைவாக நீயே இங்கு நிரந்தரமாக இருந்து இப்பகுதியை ஆட்சி செய்ய வேண்டும்'' என வேண்டிக்கொண்டனர்.
அதனாலே அவர்களுடைய பெயராலே முண்டேஸ்வரி கைமூர் மலையிலும், சண்டேஸ்வரி மதுரானா மலையிலும் கோயில் கொண்டுள்ளனர். இதனை குப்த வம்சத்தை சார்ந்தவர்கள் நிறுவியுள்ளனர் என்பது வரலாறு. மிகவும் பழமையான இக்கோயிலை தொல்லியல் துறையினர் 1915ல் இருந்து கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.
கோயிலுக்கு செல்ல மலைப்பாதை வழி உள்ளது. சிவன் கோயிலாக இருந்தாலும் அம்பாளுக்கே சிறப்பான வழிபாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. கருவறையில் சிவபெருமான் எண் பட்டை லிங்கத்திருமேனியிலும், அம்பாள் எருமையின் மீது பத்து கைகளுடன் காட்சி தருகிறாள்.
சுவாமி அம்பாளை தரிசிப்பவர்களுக்கு முன்னேற்றம் உறுதி. கோயிலின் நுழைவு வாயிலின் கதவுகளில் துவாரபாலகர்கள், கங்கா, யமுனா மற்றும் பல்வேறு தேவதையின் வடிவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. மற்ற கோயில்களை போல் இல்லாமல் நான்கு பக்கம் ஜன்னல்களுடன் அமைக்கப்பட்ட இக்கோயிலுக்கு கோபுரம் இல்லை. சிவராத்திரியில் பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள் வழிபட வருகின்றனர். விநாயகர், சூரியன், விஷ்ணுவிற்கு சன்னதிகளும் உள்ளன.
எப்படி செல்வது: வாரணாசியில் இருந்து 102 கி.மீ.,
விசேஷ நாள்: ராமநவமி, நவராத்திரி, சிவராத்திரி
நேரம்: காலை 6:00 - இரவு 8:00 மணி
தொடர்புக்கு: 82875 28979
அருகிலுள்ள தலம்: வாரணாசி விசுவநாதர் கோயில் 102 கி.மீ.,
நேரம்: அதிகாலை 4:00 - இரவு 11:00 மணி
தொடர்புக்கு: 0542 - 239 2629