ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்
பெருமைபெறும் நினது புகழ் பேசவேண்டும்
பொய்மை பேசா திருக்க வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான
பேய் பிடியா திருக்க வேண்டும்
மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும்
உனை மறவா திருக்க வேண்டும்
மதி வேண்டும் நின்கருணை நிதி வேண்டும்
நோயற்ற வாழ்வுனான் வாழ வேண்டும்
தருமமிகு சென்னையிற் கந்தகோட்டத்துள்
வளர் தலமோங்கு கந்த வேளே
தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே.
உடலும் மனமும் நன்றாக இருக்கவும், வாழ்க்கையில் ஏற்படும் பிரச்னை தீரவும், நல்லவேலை கிடைக்கவும் என பல பல காரணங்களுக்காக கடவுளை நினைக்கிறோம். ஆனால் வாய் ஒன்று சொல்லும், மனம் வேறு ஒன்றை நினைக்கும் மனிதர்கள் தான் இங்கு அதிகம். அது பக்தியா....இல்லை.
ஒரே சிந்தனையுடன் கடவுளின் திருவடியை நினைக்க வேண்டும் என ஆரம்பித்து அவரின் புகழை பேசுதல், பொய்பேசாமல் இருத்தல், பிறர் பொருளுக்கு ஆசைப்படாமல் இருத்தல், நல்லறிவு பெறுதல், நோயில்லாத வாழ்வு என வேண்டும் என சென்னையில் அருள் செய்யும் கந்தவேளே ! குளிர்ந்த முகத்தை உடைய, துாய்மையான மணிகளில் சிறந்த சைவமணியே, சண்முகத்தெய்வமணியே எனக்கு நீ யாவற்றையும் அருள வேண்டும் என மக்களுக்காக வேண்டுகிறார் வடலுார் வள்ளலார்.