பி.ராமராஜன், வள்ளியூர், திருநெல்வேலி.
*அன்னதானம் செய்தால் பாவம் தீருமா?
நிச்சயமாக தீரும். ஆனால் அறிந்தே பாவம் செய்தவருக்கு பலனளிக்காது.
எஸ்.மணிகண்டன், ஒட்டன்சத்திரம், திண்டுக்கல்.
*சீறி வந்த நல்ல பாம்பை அடித்த போது தப்பித்து விட்டது. பரிகாரம் என்ன?
செவ்வாயன்று ராகுகாலத்தில் (மதியம் 3:00 - 4:30 மணி) முருகனுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி சிவப்பு மலர்களால் அர்ச்சனை செய்யுங்கள்.
கே.சந்திரா, வில்லிவாக்கம், சென்னை.
*அங்கப்பிரதட்சணம் செய்வது ஏன்?
உலகமே கைவிட்ட நிலையிலும் மனம் தளராமல் 'நல்லதே நடக்கும்' என்ற நம்பிக்கையுடன் கடவுளைச் சரணடைந்து முறையிடுவது அங்கப்பிரதட்சணம்.
ஆர்.கேசவன், ராஜபாளையம், விருதுநகர்.
*கடவுள் வழிபாட்டில் மிருகங்களை பலியிடலாமா?
பலியிடக் கூடாது. 'அன்பே சிவம்' என்கிறார் திருமூலர். நாமும் அதைப் பின்பற்றி வழிபடுவது நல்லதே.
எல்.கிருஷ்ணவேணி, புவனகிரி, கடலுார்.
*ஸ்ரீராமரை இளைஞராகவும், கிருஷ்ணரை குழந்தையாகவும் வழிபடுவது ஏன்?
ராமர் இளைஞராக இருந்த போது ராவணனை அழித்தார். கிருஷ்ணர் குழந்தையாக இருந்த போது பூதனை, காளிங்கன் என்ற அசுரர்களை அழித்தார். இதை போற்றும் விதமாக நாமும் வழிபடுகிறோம்.
எம்.பரமேஸ்வரன், ஜனக்புரி, டில்லி.
*கோயிலில் பூப்போட்டு பார்த்து திருமணம் நடத்தலாமா?
பெரியவர்கள் சம்மதத்துடன், மணமக்கள் ஒருவரை ஒருவர் ஏற்க முன்வந்தால் மட்டுமே பூப்போட்டு பார்த்து திருமணம் நடத்தலாம்.
டி.வைசாலி, சென்னபட்னா, பெங்களூரு.
*பூஜையின் போது நேரும் தவறுகளை சரிசெய்ய என்ன செய்யலாம்?
பூஜை முடிந்ததும் மூன்று முறை சுவாமியை வலம் வந்து, ஐந்து முறை விழுந்து நமஸ்காரம் செய்யுங்கள்.
வி.மகாலிங்கம், மறைமலைநகர், காஞ்சிபுரம்.
*வாழ்வில் இகபர சுகம் பெற வழியுண்டா?
இகம் என்றால் மண்ணுலக வாழ்க்கை. பரம் என்றால் விண்ணுலக வாழ்க்கை. இரண்டிலும் துன்பம் இன்றி வாழ்வதே இகபர சுகம். கடவுளின் திருவடியைச் சரணடைந்தால் அந்நிலை கிடைக்கும்.
கே.விக்னேஷ், வில்லுக்குறி, கன்னியாகுமரி.
*சடாரியை தலையில் வைப்பது ஏன்?
பெருமாளின் திருவடியைத் தாங்கி நிற்பது சடாரி. இதை தலையில் தாங்கினால் காமம், குரோதம், பேராசை, மயக்கம், ஆணவம், பொறாமை எனும் ஆறு தீயகுணங்கள் நீங்கும்.
எம்.நிவேதா, வடக்கிபாளையம், கோயம்புத்துார்.
*இறந்த நபர் மீண்டும் இறப்பது போல கனவு வந்தால்...
நடந்ததை அடிக்கடி சிந்திப்பதால் மனதில் ஏற்பட்ட தாக்கமே கனவாக வருகிறது. இதை பொருட்படுத்தாதீர்.