உள்ளூர் செய்திகள்

வலையில் ஒரு இதயம்! (5)

முன்கதை: அம்மாவுடன் மன நல மருத்துவரை சந்தித்து, திரும்பிய ஸ்ருதி படுக்கையில் விழுந்து, கல்லுாரி நினைவுகளில் மூழ்கி போனாள். வகுப்பறை சம்பவங்கள் நிழலாடின. இனி -முதல் நாள் வகுப்பிற்கு, ஸ்ருதியும், பூர்ணாவும் இணைந்தே சென்றனர். மூன்றாம் வரிசையில் அமர்ந்தனர்.'ஏன் சோகமா இருக்கிற ஸ்ருதி...' 'எப்பவுமே முதல் வரிசையில தான் உட்காருவேன்; அது தான் பிடிக்கும்...''எங்க உட்காந்தா என்ன; வகுப்பை கவனிக்க போறோம்...''அப்படி இல்லை... நான் எப்போதும், எல்லாத்துலயும் முதலாவதா இருப்பேன்...' என்றாள் ஸ்ருதி.'ஓ... உட்காரும் இடம் முக்கியமில்ல; வாங்குற மதிப்பெண் தான் முக்கியம்...' சிரித்தாள் பூர்ணா.வகுப்பில் மாணவர்கள் அறிமுகப்படுத்திக் கொண்டனர்; தமிழகத்துல இருந்து, இரண்டு மாணவியரும், ஒரு மாணவனும் இருப்பதை கவனித்தாள் ஸ்ருதி. மொழி ரீதியாக, தனிமை இல்லை என்ற உணர்வு மனதை மலர வைத்தது.முதல்நாள் என்பதால், வகுப்புகள் பெரிதாக நடக்கவில்லை.அறிமுகமில்லாத கூட்டத்தில், துணையாக இருந்தாள் பூர்ணா. வகுப்பு முடிந்ததும், 'டில்லியில் படித்த, சீனியர் இங்க இருக்கிறாள், அவளை பார்த்துட்டு வர்றேன்...' என்று கிளம்பினாள். தனியாக இருந்த ஸ்ருதி, அலைபேசியில் அத்தையை அழைத்தாள்.'எப்படி போச்சு முதல் நாள்...''சுவாரசியமா எதுவுமில்லை அத்தை; சாப்பாடு தான் எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கல...''உப்பு சப்பு இல்லாமல் இருக்கா...' 'எதை தொட்டாலும் இனிப்பா இருக்கு; பிடிக்கவே இல்ல...''போக போக பழகிடும்...''ஹூம்...''அந்த குழம்பு வேண்டாம்; இந்த கூட்டு வேண்டாம்ன்னு, வீட்டில் எப்படி எல்லாம் சேட்டை செய்வ; இப்ப தெரியுதா...' என சிரித்தாள் ப்ரியா.'போங்க அத்தை...''ஒரு விஷயம் யோசிச்சு பாரு... உனக்கு மட்டும் இல்ல; அங்க இருக்குற எல்லாருக்குமே அது தான் சாப்பாடு. ஒரு வாரத்துல, நீயும் பழகிடுவ...'பேசியபடியே, மைதானம் அருகில் வந்திருந்தாள் ஸ்ருதி.யாரோ அழைக்க, திரும்பி பார்த்தாள். கும்பலாக, நின்றிருந்த மாணவர்கள், கையசைத்து கூப்பிட்டனர்.சீனியர்கள் என புரிந்து, அலைபேசி இணைப்பை துண்டித்து, அவர்கள் அருகில் சென்றாள். 'புது மாணவியா...' என்றாள் ஒரு பெண்.'ம்...''காதலனுடன் பேசிட்டிருக்கியா...' என்று கேட்டாள் இன்னொருத்தி. 'இல்ல, என் அத்தை கூட...' 'பாய் ப்ரெண்ட்ஸ் இருக்காங்களா...''இல்லை' என்பது போல தலையசைத்தாள்.'வாயை திறந்து பேச மாட்டியா...''இல்லை...' என்றாள் ஸ்ருதி.'இதோ... இவன் பெயர் சர்மா; என்னோட பாய் ப்ரெண்ட்; வேணும்னா இவன உனக்கு விட்டுத் தருகிறேன்; இவள் உனக்கு, 'ஓ.கே.,யா சர்மா...' என கிண்டல் அடித்தாள்.'இங்கே, ராக்கிங் ரூல் ஒண்ணு இருக்கு தெரியுமா... ஜூனியர் மாணவியர், ஒரு வாரம் துப்பட்டா போட கூடாது...'சட்டென்று துப்பட்டாவை கழட்டி, சுருட்டி வைத்தாள் ஸ்ருதி.'பேர் என்ன...''ஸ்ருதி...' 'எந்த ஊரு...' என்றான் ஒருவன். 'சென்னை...'அதுவரை, ஆங்கிலத்தில் போய் கொண்டிருந்த உரையாடல், சட்டென தமிழுக்கு மாறியது.'தமிழகமா... நானும் தமிழ் தான்; துப்பட்டாவ போட்டுக்கோ; ஏய்... எங்க ஊரு பொண்ணு... விடுங்கப்பா...' என்றான் ஒருவன்.'நன்றி அண்ணா...' என்றாள் ஸ்ருதி.'அண்ணான்னு எல்லாம் சொல்லாத... என் பெயர் ராஜா; இரண்டாம் ஆண்டு படிக்கிறேன். சொந்த ஊர் திருநெல்வேலி...'இருவரும் கை குலுக்கினர்; மற்றவர்களும் நட்பாய் அறிமுகப்படுத்தி கை குலுக்கினர். 'ஒரு வாரம் இப்படித்தான் சீனியர் எல்லாம் கலாய்ச்சு, 'ராக்கிங்' செய்துக்கிட்டு இருப்பாங்க, கண்டுக்காத... எந்த உதவியா இருந்தாலும் கேளு...' என்றான் ராஜா.இருவரும், அலைபேசி எண்ணை பரிமாறினர். விடைபெற்றாள் ஸ்ருதி; அவளுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. மரங்கள் நிறைந்த கல்லுாரி வளாகம், செழுமையாய் இருந்தது. விளையாட்டு மைதானங்கள் இருந்தன. சிமென்ட் பெஞ்சில் அமர்ந்து, 'செல்பி' எடுத்து, அதை அம்மாவுக்கும், அத்தைக்கும் அனுப்பினாள் ஸ்ருதி.விடுதி அறைக்கு வந்த போது, 'ஹாய்...' என்று, வாட்ஸ் ஆப் குறுஞ்செய்தி ஒன்று வந்தது. 'யாராக இருக்கும்' என யோசித்தாள். புகைப்படத்தை பார்த்து கண்டுபிடித்து விடலாம் என நினைத்து, 'மிஸ்டர் எக்ஸ்' என்ற பெயரை பதிவு செய்து, வாட்ஸ் ஆப்பில் முகப்பு படத்தை பார்த்தாள்; ஆளில்லாமல், ஒரு இருசக்கர வாகன படம் மட்டும் இருந்தது. 'ராஜாவா...' என்று கேள்வி அனுப்பினாள். 'இல்லை, கண்டுபிடி...' பதில் வந்தது; குழம்பிப் போனாள் ஸ்ருதி.- தொடரும்...ரவி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !