உள்ளூர் செய்திகள்

இயற்கை வேளாண்மை

கத்தரி சாகுபடியில் நஞ்சில்லாத காய்கறிகளை உற்பத்தி செய்ய வேண்டும். இதற்கு நமக்கு தயாராக இருப்பது இயற்கை முறை சாகுபடியாகும். சாகு படிக்கு தேவைப்படும் நாற்றங்கால் பரப்பு 25 அடி நீளம். அகலம் 4 அங்குலம் உயரம் கொண்டதாக இருக்க வேண்டும். நாற்றங்காலுக்கு 500 கிலோ நன்கு மக்கிய தொழு உரம் இடவேண்டும். இதோடு அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா இவைகளை ஒரு கிலோ வீதம் போடவேண்டும். காய்கறி செடியில் மிகக்கொடிய வாடல் நோயினை கட்டுப்படுத்த டிரைகோடெர்மா விரிடி என்னும் இயற்கை சம்பந்தப்பட்ட பூசணக்கொல்லி ஒரு கிலோ அளவினை நாற்றங்காலுக்கு இட்டு மண்ணினை நன்கு கொத்திவிட வேண்டும். ஒரு ஏக்கரில் 200 கிராம் விதை விதைக்க வேண்டும். அடுத்து நடவு வயல் தயாரிப்பதற்கு நல்ல வடிகால் வசதி உண்டாவதற்கு உளி கலப்பையால் உழுதுவிட வேண்டும். நன்கு மக்கிய தொழு உரம் 15 டன் போட்டு உழுது பார்சால் போட வேண்டும்(இரண்டரை அடி x இரண்டு அடி).நாற்றங்காலில் நல்ல திடமான 28 நாள் வயதுடைய நாற்றினை எடுத்து வயலில் நடவேண்டும். (பாருக்கு பார் இரண்டரை அடி) செடிக்கு செடி 2 அடி. நடவு நட்ட 21, 42, 63, 84 ஆகிய நாட்களில் ஒவ்வொரு முறையும் ஒரு டன் மக்கிய தொழு உரம், ஒரு கிலோ பாஸ்போ பாக்டீரியா, ஒரு கிலோ டிரைக்கோடெர்மா விரிடி இவைகளைக் கலந்து வயலில் போட்டுபாசனம் செய்ய வேண்டும். நடவு நட்ட மூன்றாவது வாரம் கழித்து மாதம் இரு முறை உயிர் பூச்சிக்கொல்லி மருந்துகளான பவேரியா பாசியானா. இதனை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 3 மில்லி அளவு கலந்து தெளிக்க வேண்டும். இந்த மருந்தானது செடிகளைத் தாக்கும் காய்ப்புழுக்களுக்கு வியாதியை உண்டாக்கி அவைகளை மடியச் செய்துவிடும். செடியில் பூச்சிகள் தாக்கும் சேதத்தினைத் தவிர்க்க வாரம் ஒரு முறை 'பைட்டோபிராட்' என்னும் பூச்சி விரட்டியை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 மில்லி அளவு கலந்து தெளிக்கவும். இது போடுவதால் விஷமருந்து போடுவதை தவிர்க்கவும். பூமிக்கு பாசனம் செய்து நன்கு கொத்திவிட்டு மக்கிய தொழு உரம் இடவேண்டும். கத்தரி நட்ட 75வது நாளிலிருந்து 120 நாட்கள் வரை அறுவடை வரும். ஏக்கரில் 65 கிலோ கொண்ட மூடை 135 கிடைக்கும். வளரும் செடிகளுக்கு காலத்தில் பாசனம் செய்ய வேண்டும். இயற்கை முறையை அனுசரிக்கும்போது பாசன முறையில் செலவு மிச்சம் ஏற்படும். பாசன நீர் கிரகிக்கப்பட்டு பூமி உலர்ந்தவுடன் ஆட்களை வைத்து கத்தரி செடியை சுற்றி பூமியை தளர கொத்திவிட வேண்டும். இதனால் கத்தரி மகசூல் மேலும் அதிகரிக்கும்.லாப நஷ்ட விவரங்கள்: இயற்கை முறை சாகுபடியில் செலவு ரூ.22,000 ஆகும். காய்கள் விற்பனையில் ரூ.68,000 கிடைக்கும். நிகர லாபம் ரூ.46,000 கிடைக்கும். இயற்கை முறை சாகுபடியை தொடர்ந்து செய்யும்போது சாகுபடி செலவு குறையும். வரவு அதிகரிக்கும். லாபம் கூடுதலாக இருக்கும். இனி விவசாயிகள் காய்கறி சாகுபடியில் இயற்கை முறை சாகுபடியை தொடர்ந்து செய்ய வேண்டும். வருங்காலத்தில் இயற்கை முறை சாகுபடிதான் மிகவும் ஏற்றது. அந்த இயற்கை முறை சாகுபடியை செய்வதற்கு சக்தியை கொடுப்பது நுண்ணுயிர்களும் உயிர் உரங்களும் ஆகும்.-எஸ்.எஸ்.நாகராஜன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !