ஜாதிவாரி கணக்கெடுப்பு அவசியமா? பா.ஜ., - எம்.பி., மஞ்சுநாத் கேள்வி!
ராம்நகர்: ''இது ஜனநாயக நாடு. எனவே ஜாதி வாரி கணக்கெடுப்புக்கு எந்த மகத்துவமும் இல்லை,'' என, பா.ஜ., - எம்.பி., மஞ்சுநாத் தெரிவித்தார்.ராம்நகரில் நேற்று அவர் கூறியதாவது:நமது அரசியல் சாசனமே, ஜாதி நடைமுறை தேவையில்லை; அனைத்து ஜாதிகளும் ஒன்றே என, கூறுகிறது. இச்சூழ்நிலையில் ஜாதி கணக்கெடுப்பு அவசியமா என்பது தெரியவில்லை. இது ஜனநாயக நாடு. எனவே ஜாதி வாரி கணக்கெடுப்புக்கு எந்த மகத்துவமும் இல்லை.கல்வி மற்றும் மக்களின் வாழ்க்கைத்தரம் குறித்து, ஆய்வு செய்யுங்கள். ஆனால் ஜாதிகளுக்கிடையே விரிசலை ஏற்படுத்தாதீர்கள். அனைத்து ஜாதியிலும் ஏழைகள் உள்ளனர். அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் பணிகள் நடக்க வேண்டும். நாட்டில் ஜாதி வேற்றுமை இருக்க கூடாது என்பது, அரசியல் சாசனத்தின் நோக்கமாகும்.திடீரென ஜாதி வாரி கணக்கெடுப்பு அறிக்கையை அங்கீகரிப்பதை விட, இது பற்றி முதலில் விவாதிக்க வேண்டும். சட்டசபை, மேல்சபையில் சமர்ப்பித்து விவாதிக்க வேண்டும். வல்லுநர்கள், சிந்தனையாளர்கள், பொது மக்களின் கருத்துகளை கேட்டறிய வேண்டும். சட்டசபை கமிட்டி அமைத்து, ஆய்வு செய்ய வேண்டும். அரசு அவசர முடிவு எடுப்பது சரியல்ல.இவ்வாறு அவர் கூறினார்.