2வது மாடியில் இருந்து குதித்த குற்றவாளி பலி போலீசாரிடமிருந்து தப்பிக்க முயன்றபோது பரிதாபம்
காரைக்கால்: கேரள மாநில போலீசாரிடம் இருந்து தப்பிக்க 2வது மாடியில் இருந்து குதித்த கொலை முயற்சி வழக்கு குற்றவாளி இறந்தார். கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம், வடக்கு பரவூரை சேர்ந்தவர் ஜக்கோ மகன் மனோஜ்,47; வழிப்பறி, அடிதடி மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் சம்பந்தப்பட்ட இவரை எர்ணாகுளம் போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். மனோஜ், புதுச்சேரிக்கு உட்பட்ட காரைக்காலில் பதுங்கியிருப்பது தெரிய வந்தது. அதன்பேரில், காரைக்காலுக்கு வந்த எர்ணாகுளம் போலீசார், மனோஜை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். அதில் கிடைத்த தகவலின்பேரில், எர்ணாகுளம் போலீசார், காரைக்கால் நகர போலீசார் உதவியுடன், கடந்த 15ம் தேதி இரவு, பிரெஞ்சு ஆசிரியர் வீதியில் உள்ள அப்பார்மென்ட் 2வது மாடி அறையில் தங்கியிருந்த மனோஜை பிடிக்க அறைக்கதவை தட்டினர். அறைக்கதவை திறந்த மனோஜ், போலீசை கண்டதும் தான் வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டியபடி வெளியே வந்தவர், மாடியில் இருந்து கீழே குதித்து தப்ப முயன்றார். அதில் படுகாயமடைந்த அவரை, போலீசார் மீட்டு, சிகிச்சைக்காக காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு, அவரை பரிசோதித்த டாக்டர், வரும் வழியிலேயே இறந்து விட்டதை உறுதி செய்தார். அதன்பேரில் காரைக்கால் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.