கடல் ஆமைகள் பாதுகாப்பு மீனவர்களிடம் விழிப்புணர்வு
மாமல்லபுரம்:இனப்பெருக்கத்திற்காக கடற்கரைக்கு வரும் கடல் ஆமைகளை பாதுகாக்குமாறு, மீன்வளத்துறை சார்பில், மீனவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கடலில் வாழும் ஆமைகள், டிசம்பர் துவங்கி, மார்ச் மாதம் வரை இனப்பெருக்கம் செய்கின்றன. அதற்காக, ஆழ்கடலிலிருந்து கடற்கரைக்கு வந்து, மணற்பரப்பில் ஆழமாக குழிதோண்டி முட்டையிட்டு, அதன் பின் குஞ்சு பொரிக்கும். இக்காலத்தில் கடற்கரையை நோக்கி வரும் ஆமைகள், மீன்பிடி படகில் மோதியும், மீன் வலைகளில் சிக்கியும் காயமடைந்து இறக்கின்றன. கடந்தாண்டு, இதுபோன்று ஏராளமான ஆமைகள் இறந்தது, சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது, இந்தாண்டு இனப்பெருக்க காலம் துவங்கவுள்ள நிலையில், கடல் ஆமைகளை பாதுகாப்பது குறித்து மீன்வளத்துறை சார்பில், மீனவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், கூவத்துார் அடுத்த காத்தங்கடை பகுதியில், மீன்வளத்துறை உதவி இயக்குநர் சசிகலா, கடலோர பாதுகாப்பு குழுமத்தினர் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து, மீனவர்களிடம் நேற்று விழிப் புணர்வு ஏற்படுத்தினர். அப்போது, படகுகளை கவனமாக இயக்குவது, வலையில் சிக்கும் ஆமைகளை பாதுகாப்பாக மீட்டு கடலில் விடுவது, முட்டை பொரிக்கும் கடற்கரை பகுதியை பாதுகாப்பது உள்ளிட்டவை குறித்து விளக்கினர்.