| ADDED : டிச 02, 2025 06:09 AM
அச்சிறுபாக்கம்: அச்சிறுபாக்கம் அருகே கூடலுாரில் முத்துமாரியம்மன், கெங்கையம்மன் கோவில் கும்பாபிஷேகம், நேற்று வெகு விமரிசையாக நடந்தது. கூடலுாரில் பழமை வாய்ந்த முத்துமாரியம்மன், கெங்கையம்மன் திருக்கோவில் உள்ளது. கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த, கிராமத்தினர் முடிவு செய்தனர். அதன்படி, கடந்த சில ஆண்டுகளாக திருப்பணிகள் நடந்து வந்தன. திருப்பணிகள் முடிந்ததை அடுத்து, கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை பூஜைகள், கடந்த 30ம் தேதி துவங்கின. தொடர்ந்து கணபதி பூஜை, விக்னேஸ்வர பூஜை, நவக்கிரக பூஜை, கோ பூஜைகள் நடந்தன. நேற்று காலை 9:30 மணியளவில் முத்து மாரியம்மன், கெங்கையம்மன் கோவில் கோபுர விமானத்திற்கும், 10:00 மணிக்கு மூலவருக்கும் கும்பாபிஷேகம் நடந்தது. பின், முத்துமாரியம்மனுக்கு வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. கூடலுார் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் வசிக்கும் ஏராளமான பக்தர்கள் திரளாக வந்து, சுவாமியை வழிபட்டுச் சென்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை, விழா குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. இன்று முதல் 48 நாட்கள் மண்டல அபிஷேகம் நடைபெறும்.